பெருந்தொற்றிலிருந்து மீண்டு வரும் நிலையில், சிங்கப்பூர் கவனம் செலுத்த வேண்டிய முக்கிய விஷயங்களாக மனநலம், மின்னிலக்க அறிவு ஆகியவற்றைக் குறிப்பிட்டார் அமைச்சர் இந்திராணி. இந்திய சமூகமும் இவற்றில் அக்கறை காட்டவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"பலர், குறிப்பாக குறைந்த வருமானம் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலையில் மனநலம் பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. சிறிய வீட்டில் எந்நேரமும் ஒன்றாக இருக்கும்போது குடும்ப வன்முறை அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடும்ப வன்முறைக்கு உள்ளாகும் பெண்களுக்கு வெளியே செல்ல முடியாத நிலையில், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாதபோது இது ஒரு பிரச்சினை. சிக்கல்களுள்ள பின்னணியிலிருந்து வரும் பிள்ளை களுக்கும் இச்சூழல் பிரச்சினையாகும்.
"கடந்த காலங்களில், குறைந்தபட்சம் வெளியில் செல்லலாம். மனதை வருத்தும் எந்தவொரு விஷயத்திற்கும் வடிகாலாக ஏதாவது ஓரிடம் இருக்கும்.
"இப்போது வீட்டிலேயே இருக்கும்போது எல்லாவற்றையும் வீட்டில் இருப்பவர்கள் மீதே கொட்டித்தீர்க்க வேண்டியுள்ளது. முன்னர் பொதுவாக வார இறுதி நாட்களில், பொது விடுமுறையில் குடும்ப வன்முறை அதிகரிப்பதாக புள்ளி விவரங்கள் காட்டின. இப்போது வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியநிலை.
"பாதிப்புக்குள்ளாகக்கூடியவர்கள், குடும்ப வன்முறைக்கு உள்ளாகக் கூடியவர்களுக்கு அப்பால் பொதுவாகவே எந்த வருமான வரம்பில் இருந்தாலும், பலருக்கும் வெளியே சென்று விரும்பியவற்றைச் செய்ய முடியாமல் வீட்டிலேயே இருப்பது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தனியாக வசிப்பவர்களுக்கு.
எனவே மனநலம் என்பது கவனிக்க வேண்டிய முக்கியமான பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.
ஒட்டுமொத்தமாக, சிங்கப்பூரில் ஏழு பேரில் ஒருவருக்கு அவர்களது வாழ்நாளில் மனநலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. 18 முதல் 34 வரையிலான வயதுள்ளவர்களில் 21.6% பேர் குறைந்தது ஒருவகை மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 35 முதல் 49 வரை வயதுள்ளவர்களில் 15.4% பேர் குறைந்தது ஒருவகை மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்களில் 17% பேர் குறைந்தது ஒருவகை மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று 2016ஆம் ஆண்டின் சிங்கப்பூர் மனநல ஆய்வு காட்டுகிறது.
2017ஆம் ஆண்டில் 'அடெல்பி சைக் மெடிசின் கிளினிக்' மேற்கொண்ட சுயேட்சை ஆய்வின்படி, சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களின் தற்கொலை விகிதம் 17 விழுக்காடாக உள்ளதாக சிங்கப்பூர் அபய ஆலோசனை சங்கம் (எஸ்ஓஎஸ்) தெரிவிக்கிறது.
மின்னிலக்க அறிவு
இன்று எல்லாமே மின்னிலக்கமாகிவிட்ட நிலையில், மின்னிலக்க அறிவு வயதானவர்களுக்கும் மிகவும் அவசியமாக இருப்பதை அமைச்சர் சுட்டினா்.
கணக்குகளைச் சரிபார்க்க, கடையில் பொருள் வாங்க, மருத்துவம் முதல் அனைத்து சேவைகளுக்கும் பதிவு செய்யவும் தகவல்களை அறிந்துகொள்ளவும் இன்று இணையமே பயன்படுத்தப்படுகிறது என்பதால் இணைய அறிவு அனைவருக்கும் அத்தியாவசியமாக இருப்பதை அமைச்சர் சுட்டினார்.
குறிப்பாக, தனியாக வசிக்கும் முதியோருக்கு இணையம், மின்னிலக்கப் பயன்பாடு குறித்துச் சொல்லித்தர கூடுதல் முயற்சிகள் தேவை என்றார் அவர்.
வசதி குறைந்தவர்களில் (அடிமட்டத்தில் உள்ள 10%) 42 விழுக்காட்டினரே மின்னிலக்க அரசாங்க சேவைகள் மூலம் பயன்பெறுகின்றனர். வசதிமிக்கவர்களில் (உயர்மட்டத்தில் உள்ள 10%) 36% மின்னிலக்க அரசாங்க சேவைகளைப் பயன்படுத்துவதில்லை. வயதானவர்கள் மின்னிலக்க சேவைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் ஜூன் மாதம்வெளிவந்த அந்த ஆய்வு சுட்டுகிறது.
பெண்கள் மேம்பாடு
இந்திய சமூகத்தைப் பொறுத்தவரை அனைத்து வயது பிரிவினரிலும் தன்னம்பிக்கை உள்ள மாதர் இருப்பது முக்கியம். பெண்கள் முன்னேற வேண்டும் என வலி யுறுத்தினார் குமாரி இந்திராணி.
"குடும்பத்தில் பெற்றோர் இருவரும் பிள்ளை வளர்ப்பில் துடிப்புடன் ஈடுபடுவது அந்தப் பிள்ளைக்கு நன்மை பயக்கும். இதை சிண்டாவும் தனது குடும்பத் திட்டத்தில் இதன் தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
"ஏனெனில், பிள்ளைகளின் கல்வி, வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றில் பெற்றோர் முதலீடு செய்வது பிள்ளைகள் தன்னம்பிக்கையுடனும் சூழலுக்கும் ஏற்றவாறு சரிசெய்து கொண்டும் வளர உதவுகிறது. இதில் அந்தச் சுமையை பெண்கள் ஒருவராக சுமக்காதது அவர்களுக்கும் நல்லது.
இது வலுவான குடும்பங்களை உருவாக்க உதவும். பெண்கள் மேம்பாடு முக்கியமான ஓர் அம்சம்," என்று வலியுறுத்தினார் அமைச்சர்.
பெண்கள் மேம்பாட்டிற்கான உதவிகள் குறித்து சிண்டா ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்ட சிண்டாவின் தலைவருமான இந்திராணி ராஜா, இதன் தொடர்பில், திட்டம் ஒன்றை வகுப்பதில் ஈடுபட்டுள்ளதாகவும் சொன்னார்.
விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றார் அவர்.

