இர்ஷாத் முஹம்மது
இனப் பாகுபாடுகளும் வேறுபாடுகளும் அற்ற சமுதாயத்தை நோக்கிய பயணத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேற்றம் காணவேண்டும். அதற்கு சிங்கப்பூரில் செய்ய வேண்டியவை பல உள்ளன என்பது சிங்கப்பூரின் பல இனங்களையும் சேர்ந்த இளையர்களின் கருத்து. இன நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, சமூகங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்க்க பலவழிகளில் பாடுபடும் சிங்கப்பூரில் இதனைச் சாத்தியப்படுத்த முடியும் என்பது அவர்களது நம்பிக்கை.
சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசும் ஒரே மலாய் மொழி நாளிதழான பெரித்தா ஹரியானும் இணைந்து அண்மையில் 'மாஜுலா கருத்தரங்கு: இன வேறுபாடின்றி' என்ற கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சீன, மலாய், இந்திய சமூகங்களை பிரதிநிதித்து மூன்று இளையர்கள் நேரடி கலந்துரையாடலில் பங்கேற்றனர். மேலும் அறுவரது கருத்துகள் உரையாடலில் முன்வைக்கப்பட்டன.
பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்ட சமூகமாக எந்தவொரு பல இன சமூகமும் இருக்க முடியாது என்பது யதார்த்தம்.எனினும், இனப் பாகுபாடு குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பது உட்பட பல வழிகளிலும் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொண்டால், பாகுபாடுகள் அற்ற சமுதாயத்தை உருவாக்குவது ஓரளவுக்கு சாத்தியமாகலாம். ஆனால் இலக்கு மாறிக்கொண்டேதான் இருக்கும் என்பது கலந்துரையாடலில் பங்கேற்ற இளையர்களின் ஒருமுகமான கருத்து.
"இனம் குறித்த எந்த அம்சமுமே சமூகப் பிரச்சினையாக இல்லாத நிலை என்பது கனவுலகத்திற்கு நிகரானது," என்ற மெண்டாக்கி மன்றத்தின் தலைவியான 32 வயது ஃபரிடா முகம்மது சாட், கொள்கை அளவில் மாற்றங்கள் தேவை எனக் கருத்துரைத்தார்.
சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், மெண்டாக்கி, சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), யூரேஷியர் சங்கம் முதலிய சுய உதவி அமைப்புகள் அந்தந்த சமூகங்களின் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும் இன்றைய சூழலில் அவற்றின் தேவையை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என்றார் அரசாங்க ஊழியரான அவர்.
"மலாய் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த இளையர்கள் தங்களின் வாழ்க்கைத் தொழில் கனவுகளை நனவாக்கவும் மீண்டும் சமூகத்திற்குப் பங்களிக்கவும் ஆதரவு வழங்குகிறது மெண்டாக்கி கிளப் அமைப்பு. ஆனால் அண்மைக் காலமாக சீன, இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொண்டூழியர்கள் இதில் பங்காற்றுகின்றனர். இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் இத்தகைய நிலை நிலவும் பட்சத்தில் சுய உதவி அமைப்புகளை இன ரீதியாக பிரிப்பது குறித்து சிந்திக்கலாம்," என்றார் ஃபரிடா.
அண்மைக் காலங்களில் இனவாதம் குறித்த கலந்துரையாடல்களில் பேசப்பட்ட 'எஸ்ஏபி' எனப்படும் சிறப்பு ஆதரவுத் திட்டப் பள்ளிகள் குறித்தும் இளையர்கள் பேசினர். பெரும்பாலும் சீன சமூகத்தைச் சேர்ந்தவர்களே பயிலும் அத்தகைய பள்ளிகளில், மாணவர்களுக்கு மற்ற இனத்தவர்களுடனான தொடர்புகள் குறைவாக இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது.
"அத்தகைய பள்ளிகளை பல வழிகளில் மாற்றியமைக்கலாம் என்பதே எங்கள் வாதம். உதாரணத்துக்கு சீன வகுப்புகளை விருப்பப்பாடமாக சிறுபான்மை சமூகத்தினருக்கு வழங்கலாம். மற்ற இனத்தவருடன் படித்து, வளரும் வாய்ப்பை எல்லாத் தரப்பு மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்," என்றார் 36 வயது சோ வேஹாவ்.
அக்கம்பக்கப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இனம், இனவாதம் குறித்த நுணுக்கமான புரிந்துணர்வு இருப்பதையும் தான் அக்கம்பக்கப் பள்ளியில் படித்து பல இன நண்பர்களுடன் காற்பந்து விளையாடி வளர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்தார் அடித்தள அமைப்புகளின் தலைவரும் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் முதலீட்டு இயக்குநருமாக உள்ள திரு வேஹாவ்.
"எஸ்ஏபி பள்ளி மாணவர்களுக்கு இனவாதம் தவறு என்பது தெரியும். ஆனால் உற்று நோக்கி, வெங்காயத்தை உரிப்பதுபோல ஒவ்வொரு படிநிலையையும் தாண்டி ஆழமாகப் பார்த்தால் அவர்கள் இனம் குறித்த சில அம்சங்களைக் கையாள சிரமப்படுவது தெரியும்," என்றார் பத்தாண்டுகளாக வங்கி, முதலீட்டுத் துறைகளில் பணியாற்றும் அவர்.
பல இனங்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்த வெவ்வேறு சமூகத்தினருக்கு இடையே வெளிப்படையான உரையாடல்கள் அவசியம் என்ற கருத்தை முன்வைத்தார் 21 வயது குமாரி மிருதுளா குமார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் தலைவரான குமாரி மிருதுளா, சமூக ஊடகங்களில் பெரும்பான்மை, சிறுபான்மை இனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் கருத்துகளை மரியாதையான முறையில் வெளிப்படுத்துவதால் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வு பலப்படுகிறது என்றார். அத்தகைய உரையாடல்கள் சிறு வயதிலிருந்து தொடங்க வேண்டும் என்றும் பள்ளிகளில் அந்தக் கற்றல் தொடரவேண்டும் என்றார் சிண்டா இளையர் குழு தொண்டூழியருமான மிருதுளா.
அண்மையில் தஞ்சோங் பகார் குழுத்தொகுதியில் இடம்பெற்ற தேசிய தின விளம்பரப் பதாகையில் இந்தியக் குடும்பத்தின் படம் இடம்பெற்றிருப்பது குறித்து சமூக ஊடகத்தில் எழுந்த இனவாதக் கருத்துகள் குறித்தும் பேசப்பட்டது.
"பல சிங்கப்பூரர்களைப் போலவே எனக்கும் அதிர்ச்சியாகவும் வருத்தமாகவும் இருந்தது. அத்தகைய வெறுப்பு மிகுந்த கருத்துகள் பெரும்பாலான சிங்கப்பூரர்களைப் பிரதிபலிப்பவையல்ல. சமூக ஊடகங்களில் வெறுப்புமிகுந்த கருத்துகளின் தாக்கம் பலமடங்கு பெரிதாகிவிடுவதும் ஒரு காரணம்," என்று குமாரி மிருதுளா சொன்னார்.
பல இன சமுதாயத்தில் சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளையில் பாதுகாப்பாக உரையாடும் தளங்களை உருவாக்குவதும் வேற்றுமைகளைக் களைந்து நல்லிணக்கம் பேணுவதும் முக்கியம் என்று பங்கேற்பாளர்கள் வலியுறுத்தினர்.