கடந்த 2006ஆம் ஆண்டில் 45 வயது திரு சிவகுமார் செல்வராஜ், 44 வயது இந்தோனீசியரான திருமதி ஒலிவியா கெருங்கள் இருவரும் கலப்புத் திருமணம் செய்தனர். இத்தம்பதியின் ஒரே பிள்ளையான திரு சி. கவின்குமார், 12, ‘கிரீனிட்ஜ்’ தொடக்கப்பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்.
“பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால் கவினுக்கு வீட்டுப்பாடங்களில் வழிகாட்டவும் கற்றுக்கொடுக்கவும் யாரும் இல்லை. வேறு தாய்மொழியைத் தேர்வு செய்யலாமா என்று நினைத்ததுண்டு. ஆனால் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அவன் தமிழே படிக்கவேண்டும் என்று முடிவெடுத்தோம்.
“வாரத்தில் ஒரு நாளாவது கவினுக்கு தமிழ் சொல்லித் தருவேன்,” என்றார் கட்டுமானத் துறையில் பணியாற்றும் திரு சிவகுமார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைமாலையிலும் அவர் கவினுடன் தமிழில் பேசி ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபடுவார்.
தெனாலி ராமன், அக்பர் பீர்பால் போன்ற சுவாரசியமான கதைப் புத்தகங்கள் படிப்பது, தமிழ்ப் பழமொழிகள், ஆத்திச்சூடி, திருக்குறள் போன்ற நீதி இலக்கியங்களின் பொருளை ஆராய்வது, பயனுள்ள தமிழ்த் தொலைக்காட்சி திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்ப்பது என்ற பல நடவடிக்கைகளில் கவினுடன் சேர்ந்து ஈடுபடுவார் திரு சிவகுமார். காலையில் மகனைப் பள்ளிக்கு அழைத்து செல்லும்போது தமிழ் வானொலியில் பாடல்கள் கேட்பது அவர் வழக்கமாக்கி உள்ளார்.
“தமிழ் மீது எனக்குப் பற்று அதிகம். அந்த ஆர்வத்தை கவினுக்கும் ஊட்டுவது என் கடமை. ஆர்வம் இருந்தால் தானாகவே தமிழைக் கற்க அவன் முற்படுவான். கவினின் தினசரி பயன்பாட்டில் தமிழ் ஊறியுள்ளது. விருப்பத்துடன் செய்வதால் மனதில் பதிகிறது,” என்றார் அவர்.
தமிழைத் தாய்மொழியாகக் தேர்வு செய்து படிக்கும் கவினுக்கு ஆங்கிலத்துடன் பஹாசா இந்தோனீசியாவும் தெரியும்.
“அப்பா மட்டுமில்லாமல் நண்பர்கள், தாத்தா, பாட்டியுடன் பேச தமிழைப் பயன்படுத்துகிறேன். இந்தியாவிற்குச் சென்று அங்குள்ள நண்பர்களுடன் தமிழில் பேசி விளையாடுவது எனக்குப் பிடிக்கும் ,” என்று சரளமாக தமிழில் சொன்னார் கவின்குமார்.