நடமாட்டக் கட்டுப்பாடுகள் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட நிலையில் இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களிடையே மனச்சோர்வு, மன அழுத்தம் போன்ற அறிகுறிகள் அதிகமாகக் காணப்பட்டதாக புதிய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
தங்களின் தங்குவிடுதிகள், வேலையிடங்கள், குறிப்பிட்ட பொழுதுபோக்கு மையங்கள் ஆகியவற்றுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், தங்குவிடுதி அல்லது அறையில் தனிமைப்படுத்தப்பட்ட ஊழியர்களிடம் மனநலப் பிரச்சினைகள் அதிகம் காணப்பட்டதாக யேல்-என்யுஎஸ் நடத்திய ஆய்வு குறிப்பிட்டிருந்தது.
"ஊழியர்களின் மன உறுதி குறைந்துவிட்டது. நோய்ப் பரவலுக்கு ஒரு முடிவு இல்லாததுபோல் தோன்றுகிறது. எல்லாம் சரியாகி வரும்போது சமூகத் தொற்றுச் சம்பவங்கள் அதிகரிப்பதும் மன உளைச்சல் தருகிறது," என்றார் 'AGWO' என்ற வெளிநாட்டு ஊழியர் நல்வாழ்வு இயக்கத்தின் நிறுவன உறுப்பினர் திரு சாமுவேல் கிஃப்ட் ஸ்டீபன், 44.
அவரது இயக்கம் 70 பங்காளித்துவ அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஊழியர்களுடன் தொடர்புகொண்டு பேசுவது, உணவுப்பொருட்களை அனுப்புவது போன்ற சமூகநல சேவைகளில் இயக்கம் ஈடுபட்ட வருவதாகவும் திரு சாமுவேல் கூறினார். பொழுதுபோக்கு மையங்களில் சமய வழிபாடுகளுக்கும் இயக்கம் ஏற்பாடு செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மனநலப் பாதிப்புக்கு ஆளாகியுள்ள ஊழியர்கள், ஆக்ககரமான வகையில் சிந்திக்கவும் பேசவும் வேண்டும் என்றார் 'கிளப் டு கேர்' தலைவரும் மனநல ஆலோசகருமான திருவாட்டி ஷர்மினி என். ராமசந்திரா, 49. 'கிளப் டு கேர்' என்பது இந்திய சமூகத்தினருக்கான மனநல ஆலோசனை சமூகக் குழு ஆகும்.
"கிருமித்தொற்று இல்லாத காலத்திலேயே குடும்பம், நெருங்கிய உறவுகளைப் பிரிந்து இங்கு வேலை செய்ய வருகின்றனர். கிருமித்தொற்றுச் சூழல் அதை மேலும் மோசமாக்கிவிட்டது.
"இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வெளிநாட்டில் உள்ள உறவுகளுடன் பேச வாய்ப்பு கிடைக்கிறது. அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் பூர்த்தி செய்து ஊழியர்களைக் கவனமாக பார்த்துக்கொள்கிறது," என்றார் ஷர்மினி.
"ஊழியர் ஒருவருக்குத் தொற்று ஏற்பட்டால் மொத்த தங்குவிடுதிக்கும் பரவ வாய்ப்பு அதிகம். இதில் பல அம்சங்கள் அடங்கியுள்ளதால் அரசாங்கத்தின் விதிமுறைகளைப் புரிந்துகொள்வதும் அவசியம்," என்றும் அவர் கூறினார்.
மனநல உதவி தேவைப்படுவர்களுக்கு 'ஹெல்த்செர்வ்' போன்ற அமைப்புகள் உதவி வழங்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
'ஹெல்த்செர்வ்' அமைப்பின்
24 மணி நேரச் சேவை
சிங்கப்பூரில் வேலை பார்க்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்காகவே முதன்முதலாக 24 மணி நேர உதவி வழங்கும் தொடர்புச் சேவையை 'ஹெல்த்செர்வ்' தொடங்கியுள்ளது.
நெருக்கடி தொடர்பில் அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் தொண்டூழியர்களும் இச்சேவை வழி ஆலோசனை வழங்குவர். வெளிநாட்டு ஊழியர்கள் வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டுள்ள நிலையில், அம்மொழிகளை அறிந்தோரும் நிபுணர்க் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
ஆலோசனை பெற விரும்புவோர், +65 3129 5000 என்ற எண்ணில் அமைப்பை நாடலாம்.