நல்லாசிரியர் விருது 2020/2021
தொன்மொழியாயினும் இளமை குன்றா இன்மொழியாம் செந்தமிழ் நாளும் தழைத்தோங்கி, செழிப்புற்று, வாழும் மொழியாய் நிலைத்திருக்க முதன்மைப் பங்காளர்களாகத் திகழ்வது தமிழாசிரியர்களே! அப்பெரும்பணியில் அரும்பணியாற்றியோரை, ஆற்றி வருவோரைச் சிறப்பிக்கும் விதமாக ஆண்டுதோறும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ப.பாலசுப்பிரமணியம்
கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு, மெய்நிகர் பாணியில் மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, தொடர்ந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் தமிழாசிரியர்களை இவ்வாண்டின் நல்லாசிரியர் விருது நிகழ்ச்சி கெளரவித்தது.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நடத்திய 'நல்லாசிரியர் விருது 2020/2021' விழா, இம்முறை நேரடியாகவும் இணையம் வழியாகவும் இடம்பெற்றது.
சென்ற ஆண்டு 117 ஆசிரியர்களின் பெயர்கள் விருதுக்கு முன்மொழியப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இவ்விருது நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாண்டு 596 ஆசிரியர்கள் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவ்விரு ஆண்டுகளின் பரிந்துரைகளும் விருதுக்கான பரிசீலனையில் எடுத்துக்கொள்ளப்பட்டு, வெற்றியாளர்கள் முடிவுசெய்யப்பட்டனர்.
மூவர்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது, தொடக்கப் பள்ளிப் பிரிவில் மூவர், உயர்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கக் கல்லூரிப் பிரிவில் இருவர், தேசிய கல்விக் கழகப் பயிற்சி ஆசிரியர் பிரிவில் ஒருவர் என மொத்தம் ஒன்பது பேர்க்கு விருதுகள் வழங்கப்பட்டன.
"தமிழாசிரியர்கள் ஆற்றி வரும் பங்களிப்பை வெளிச்சம் காட்டும் நிகழ்வாக நல்லாசிரியர் விருது விழா ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்தாண்டு கொவிட்-19 கிருமிப் பரவலால் இவ்விருது விழாவை ஒத்திப்போட வேண்டியதாயிற்று. இம்முறை இந்நிகழ்வை நடத்தியதன் மூலம் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கம் தரும் விருதின் நோக்கத்தை நிறைவேற்ற முடிந்தது," என்று செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் தலைவருமான விக்ரம் நாயர் தெரிவித்தார்.
"கடந்த ஆண்டிலிருந்து சிரமமான காலகட்டத்தை எதிர்கொண்டு வரும் ஆசிரியர்கள் குறுகிய காலத்திற்குள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதாக இருந்தது. வேலைப்பளு, மனச்சோர்வு ஆகியவற்றை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இந்த நல்லாசிரியர் விருது பெரும் ஊக்கம் தருவதாக விளங்குகிறது. கடந்த இருபது ஆண்டுகளாக ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை அங்கீகரித்துவரும் இவ்விருது நிகழ்ச்சி, இன்னும் பல ஆண்டுகள் நிலைத்து இருக்க வேண்டும்," என்றார் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார்.
சென்ற ஆண்டு வந்த பரிந்துரைகளையும் சேர்த்து, மொத்தம் 713 பரிந்துரைகளில் இருந்து விருதுக்குத் தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது ஏற்பாட்டுக் குழுவிற்குப் பெரும் சவாலாக விளங்கியது என்று தமிழ் முரசு நாளிதழின் இணை ஆசிரியரும் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழுவின் உறுப்பினருமான வீ.பழனிச்சாமி குறிப்பிட்டார்.
'தமிழ் வகுப்பு என்பது தாய்வீடுபோல'
இந்து இளங்கோவன்
சில மாணவர்களுக்குத் தமிழ் வகுப்பு என்பது தாய்வீடுபோல என்கிறார் கடந்த 15 ஆண்டுகளாக தமிழாசிரியராகப் பணிபுரியும் திருவாட்டி யோகேஸ்வரி பாலசுப்பிரமணியன்.
2007ஆம் ஆண்டு ஆசிரியப் பணியைத் தொடங்கிய இவர், சில ஆண்டுகாலம் தொடக்கப் பள்ளியில் ஆங்கிலம், கணிதம், அறிவியல் பாடங்களைக் கற்றுத்தந்தார். அப்போதெல்லாம் தமிழாசிரியர்களுடன் தமிழ் மாணவர்கள் எவ்வளவு அன்பாக உள்ளனர் என்பதைக் கண்டு மனம் நெகிழ்ந்த திருவாட்டி யோகேஸ்வரிக்கு தமிழ்மொழிமீது மிகுந்த ஆர்வம் இருந்ததால் தமிழ் கற்பிக்க வேண்டும் என்ற ஆசை தோன்றியது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிற்குச் சென்று தமிழ் இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர், தற்போது பொங்கோல் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார்.
கற்றல் இன்பத்தை உணர்ந்தால் மாணவர்களே முன்வந்து கற்றுக்கொள்வர் எனக் கூறும் திருவாட்டி யோகேஸ்வரி, 'வகுப்பறைக் கலாசாரம்' எனும் மாணவர்களின் ஒருங்கிணைந்த உணர்வில் தொடர்ந்து கவனம் செலுத்துகிறார்.
ஒரு மாணவர் எழுந்து நின்று தமிழில் ஏதேனும் சொல்லும்போது, அதில் பிழையோ தடுமாற்றமோ இருந்தாலும் அவரது படைப்பின் நிறைகளை எடுத்துக் கூறும்படி பிற மாணவர்களிடம் திருவாட்டி யோகேஸ்வரி சொல்வார். சக நண்பர்கள் தம்மைப் பார்த்துச் சிரிக்காமல் தமது படைப்பைப் பாராட்டும்பொழுது, அந்த மாணவர்க்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்று இவர் உறுதியாக நம்புகிறார்.
"நாம் கற்றுத்தருவதை மாணவர்கள் கவனித்து, உள்வாங்கிக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்ப்பதைவிட அவர்களுக்கு ஏற்ப, நமது கற்றல் முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்," என்கிறார் இந்தத் தமிழாசிரியை.
2011ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தமிழாசிரியராகத் தமது பணியைத் தொடங்கிய திருவாட்டி சுமதி திருமாறனுக்கு (இடப்படம்), சிங்கப்பூர் கற்றல் முறைகளும் தொழில்நுட்பமும் புதுமையாக இருந்தன. இந்தப் பத்தாண்டுகளில் தமது பணியின்போது நிறைய சுயகற்றலும் மேம்பாடும் இருந்ததாகக் குறிப்பிட்ட இவர், மாணவர்களின் தேவைகளுக்கும் காலத்திற்கும் ஏற்ப ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்வது அவசியமானது என்றார்.
தமிழாசிரியர்களுக்கு இடையே தேசிய அளவிலான பகிர்தல்களை ஊக்குவிக்கும் திருவாட்டி சுமதி, அதன்வழி ஓர் ஆசிரியச் சமூகமாக தாங்கள் மேம்பட முடியும் என்று நம்புகிறார். 2019ஆம் ஆண்டு நடந்த கல்வி அமைச்சின் தாய்மொழிகளுக்கான கருத்தரங்கில் இவர் படைத்த தமிழ் இணையச் செய்திமடல் ஆசிரியர்கள் பலரது கவனத்தை ஈர்த்தது.
மார்சிலிங் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இவர், தம் மாணவர்களில் பலரை வருங்காலத் தமிழாசிரியர்களாக உருவாக்க ஆசைப்படுகிறார். மாணவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்க புதிய வழிமுறைகளை நாடும் இவரது வகுப்புகள் யாவும் ஆடல், பாடல், கவிதை என உற்சாகமூட்டும் வண்ணம் அமைகின்றன.
'மாணவர்களின் முன்னேற்றமே ஆசிரியர்களுக்கு விருது'
கி.ஜனார்த்தனன்
தகவல், தொடர்புத் துறையிலும் உளவியலிலும் பட்டம் பெற்றுள்ளபோதும், இறுதியில் தாம் படித்த ஜிங் ஷான் தொடக்கப் பள்ளியிலேயே ஆசிரியராகச் சேர்ந்தது மனநிறைவு அளித்ததாகத் தெரிவித்தார் திருவாட்டி வசந்தன் லாவண்யா, 37.
கற்றலுக்கு முதல் எதிரி அச்சமே எனக் கூறும் இவர், மாணவர்களின் அச்சத்தைப் போக்க பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார்.
"முதலில் வகுப்பில் வாசித்தலை ஊக்கப்படுத்துவேன். மாணவர்கள் உரக்கப் படிக்க வாய்ப்பு கொடுக்கும்போது அவர்களது நம்பிக்கை படிப்படியாக வளர்கிறது. சுயமதிப்பீடுகளைச் செய்ய ஊக்குவிப்பதால் தன்னம்பிக்கையும் கூடுகிறது," என்றார் திருவாட்டி லாவண்யா.
தாம் கற்ற உளவியல் கல்வியைப் பயன்படுத்தி, தள்ளிப்போடுதல் உள்ளிட்ட சில மனப்போக்குகளைத் திருத்தவும் முடிவதாக இவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் முன்னேற்றமே விருதாகக் கருதி வந்ததாகக் கூறிய திருவாட்டி லாவண்யா, சிறந்த தமிழாசிரியர் விருது கிடைத்திருப்பதை தமது 11 ஆண்டு கற்பித்தல் சேவைக்கான கூடுதல் அங்கீகாரமாகக் கருதுகிறார்.
'ஒவ்வொரு மாணவரும் தலைவரே, ஒவ்வொருவர்க்கும் தனித்திறமைகள் உள்ளன' என்ற கொள்கையை உறுதியாக நம்பும் இந்த ஆசிரியர், தம்மால் முடிந்த அளவிற்கு அவர்களை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளார்.
'கற்றுக்கொள்வது ஆசிரியர்களே'
பள்ளி விடுமுறை என்றாலே மாணவர்களுக்குப் பெருமகிழ்ச்சி என்றாலும் தம்மைவிட்டுப் பிரிவதற்கு கவலையாக இருப்பதாகக் கூறிய மாணவி ஒருவரின் வார்த்தைகள் இன்றும் தம் மனத்தில் எதிரொலிப்பதாகக் கூறுகிறார் திருவாட்டி மலர்விழி ராமசாமி, 55.
பெற்றோர் இருவருமே தமிழாசிரியர்கள் என்பதால் இயல்பாகவே தமக்குத் தமிழ்த்துறை மீதான ஆர்வம் வளர்ந்ததாகத் தெரிவித்தார் கடந்த 32 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றி வரும் இவர்.
தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் கற்றுத் தருவதில் திருவாட்டி மலர்விழிக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தொழில்நுட்ப மாற்றங்களுடன் கற்பிக்கும் உத்திகளுக்கு ஏற்ப வும் மாறவேண்டி இருப்பதாகக் குறிப்பிட்ட இவர், "பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இப்போது தொழில்நுட்பம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்தாண்டு தொடங்கிய கொவிட்-19 பரவலும் அம்முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது," என்றார்.
காலப்போக்கில் மாணவர்களின் துணிச்சலும் தொழில்நுபட்பத் திறனும் உயர்வதைக் கண்டு உவகைகொள்ளும் இவர், மாணவர்களிடமிருந்தே ஆசிரியர்கள் கற்றுக்கொள்ள முடியும் என்று பெருமிதத்துடன் கூறினார்.
சிங்கப்பூரில் பலனை எதிர்பாராமல் கடுமையாக உழைக்கும் ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறிய ஆசிரியர் மலர்விழி, நல்லாசிரியர் விருதின்மூலம் தாம் சிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மனநிறைவு தரும் ஆக்கப்பூர்வ மாற்றம்
கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குமுன் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய திரு கி.மலையரசு, ஆசிரியப் பணி பிடித்துப்போனதால் தொடர்ந்து ஆசிரியராகச் செயல்பட முடிவு செய்தார்.
"பெற்றோர்களுக்கு அடுத்து, ஆசிரியர்கள்தாம் ஆக்கப்பூர்வமானதொரு தாக்கத்தை மாணவர்களிடத்தில் ஏற்படுத்த முடியம் என்பது என்னுடைய நம்பிக்கை.
மாணவர்களின் நலனில் ஈடுபாடு, அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை, தொழில் சார்ந்த சுயமுன்னேற்றம், தொடர்ந்து கற்றுக்கொள்ளும் ஆர்வம், காலத்திற்கு ஏற்ப மாறும் தன்மை ஆகியவை சிறந்த ஆசிரியர்களுக்குத் தேவைப்படுவதாக திரு மலையரசு குறிப்பிட்டார்.
மாணவர்களிடம் அச்சத்தைப் போக்கி, மகிழ்ச்சி தரும்படியான வகுப்பறைச் சூழல் இருந்தால்தான் அவர்கள் விரும்பிக் கற்பர் என்பது இவரது திடமான எண்ணம்.
இளம் ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாக இருக்கவும் தமிழை என்றென்றும் ஒரு வாழும் மொழியாக தழைக்கச் செய்யவும் விரும்பும் திரு மலையரசு, கற்பித்தலில் உன்னதத்தை அடைய விரும்புவதாகவும் சொன்னார்.
தனித்துவ வழியில் வளரும் பிறை
யுவான் சிங் உயர்நிலைப் பள்ளி மாணவியாக இருந்தபோது உயர்தமிழ் வகுப்பிற்காக ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றுவந்த குமாரி ரேவதி குணசேகரன் (படம்), இப்போது சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது பெறும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.
சிங்கப்பூர் பலதுறைத் தொழில் கல்லூரியில் வர்த்தக நிர்வாகத் துறையில் பட்டயம் பெற்ற குமாரி ரேவதி, அலுவலக வேலையில் ஈடுபட விருப்பமின்றி, பிடித்த வேலையைச் செய்வது என்பதில் உறுதியாக இருந்தார்.
இதனையடுத்து, கடந்த 2016ஆம் ஆண்டில் என்டியு - தேசிய கல்விக் கழக கற்பித்தல் கல்விமான்கள் திட்டத்திற்கு விண்ணப்பித்தார். அத்திட்டத்தின்கீழ், தமிழ்மொழி தொடர்பான கல்வித் துறை சார்ந்த இளங்கலைப் பட்டப்படிப்பை நான்காண்டுகள் பயின்றார். அந்த ஆண்டு அப்பட்டக்கல்விக்கு இவர் மட்டுமே விண்ணப்பித்து இருந்ததால், பெரும்பாலும் வகுப்பில் சக மாணவர்கள் இல்லாமல் தனிப்பட்ட முறையில் விரிவுரையாளர்கள் இவருக்கு வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது.
"அத்திட்டத்திற்குத் தகுதி பெற்ற முதல் மாணவர் என்பதால் என் தோள்களில் அதிக எதிர்பார்ப்பைச் சுமப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. அத்துடன், மூன்றாண்டுகள் தமிழ்மொழியைக் கற்றிடாத இடைவெளி இருந்ததால் தொடக்கத்தில் சில சிரமங்களை எதிர்நோக்கினேன்," என்றார் 25 வயதான குமாரி ரேவதி.
ஆயினும், விரிவுரையாளர்கள் தம்மீது வைத்திருந்த நம்பிக்கையும் அவர்கள் புரிந்த உதவியும் இவருக்கு ஊக்கம் அளித்தன.
பட்டப்படிப்பின்போது தைவான் சென்று அங்குள்ள தொடக்கநிலை மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தந்ததும் வேல்ஸ் நாட்டின் கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் ஆறு மாத மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் பங்கேற்றதும் கற்றல் -கற்பித்தலில் இவருக்குக் கூடுதல் அனுபவமாக அமைந்தது.
தேசிய கல்விக் கழகத்தில் பயின்றபோது, மற்ற மாணவர்களுக்கு இவர் முன்மாதிரியாகத் திகழ்ந்ததாக விரிவுரையாளர்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டு பட்டம் பெற்ற குமாரி ரேவதி, அதன்பின் கிறைஸ்ட் சர்ச் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகச் சேர்ந்தார்.
அங்கு மாணவர்களுடன் நட்புறவை வளர்த்துக்கொள்வதில் இவர் மும்முரம் காட்டி வருகிறார்.
மாணவர்களின் ஐயங்களைத் தீர்த்து வைப்பதில் கிடைக்கும் மனநிறைவும் அவர்களிடமிருந்து வரும் நன்றிக்குறிப்புகளும், 'நான் சரியான பணியைத்தான் தேர்ந்தெடுத்துள்ளேன்' என்பதை உணர்த்துவதாக உள்ளன என்றார் குமாரி ரேவதி.
செய்தி: ப.பாலசுப்பிரமணியம்
கௌரவிக்கப்பட்ட ஆதரவாளர்கள்
நல்லாசிரியர் விருதுக்கு ஆதரவளித்து, உறுதுணையாக இருந்து வருவோர்க்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அவ்வகையில், 'எம்இஎஸ்' குழுமத்தின் தோற்றுநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அப்துல் ஜலீலுக்கு நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் தமிழ் முரசு ஆசிரியர் ஜே.ராஜேந்திரன்.