கொவிட்-19 பெருந்தொற்றுச் சூழலில் பலர் வேலை வாய்ப்புகள் பற்றி கவலை அடைந்துள்ள நிலையிலும், சுகாதாரப் பராமரிப்பு, தொழில்நுட்பம் போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்று கலாசாரம், சமூகம், இளையர் துறை அமைச்சர் எட்வின் டோங் கூறியுள்ளார்.
முன்னைய தலைமுறைகளைவிட இன்றுள்ளவர்களுக்கு வெளியுலகத் தொடர்புகள் அதிகம் என்பதால் அவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகள் உள்ளன. வாழ்வின் பல்வேறு கட்டங்களில் வெவ்வேறு தொழில்களைச் செய்வது இயல்பாகிவிட்டது என்றார் அவர்.
தொழில்நுட்பம், அரசாங்கத் துறை போன்றவற்றில் உள்ள தலைவர்களை வேலை வாய்ப்பு தேடுவோருடன் இணைக்கும் 'கரியர்ஸ் அன்மாஸ்க்ட்' எனும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமைச்சர் நேற்று பேசினார். வடகிழக்கு சமூக மேம்பாட்டு மன்றம் ஏற்பாடு செய்த அந்த நிகழ்ச்சி சன்டெக் மாநாட்டு, கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்றது.
நேரடியாகவும் இணையம் வழியாகவும் சுமார் 250 பேர் அதில் கலந்து கொண்டனர்.
தொழில்துறைகளும் வர்த்தகங்களும் உருமாறி வருவதால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் வேலைகளை எவ்வாறு மாற்றியுள்ளன என்பதை ஆராய இது நல்ல நேரம் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
பெருந்தொற்றுச் சூழலில் சிங்கப்பூரர்களின் நல்வாழ்வை மேம் படுத்த அதிகமான சமூக சேவை ஊழியர்கள் தேவைப்படுகின்றனர் என்று திரு டோங் சுட்டினார். அல்லது, வழக்கமான துறைகளில் உருவாகியுள்ள புதிய வேலைவாய்ப்பு களை ஒருவர் தேடிப் பார்க்கலாம்.
உதாரணத்துக்கு வங்கிகளில் இணையத்தளம் அல்லது செயலியில் பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் இடைத்தளத்தை வடிவமைக்கும் வேலையில் ஒருவர் சேரலாம்.
அரசாங்கத் துறையிலும் வேலைகள் மாறியுள்ளதைச் சுட்டிய திரு டோங், தகவல் பகுப்பாய்வு, பாதுகாப்பு போன்ற திறன்களைக் கற்றுக் கொள்ளும்படி இளையர்களை ஊக்குவித்தார்.