கி.ஜனார்த்தனன்
சிங்கப்பூரின் இரண்டு முக்கிய இந்து சமய விழாக்களில் ஒன்று தீமிதித் திருவிழா. ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் சிங்கப்பூரில் குடியேறிய காலந்தொட்டு தீமிதித் திருவிழா பக்தியோடு கொண்டாடப்பட்டு வருகிறது.
சவுத் பிரிட்ஜ் சாலையில் ஸ்ரீ மாரியம்மன் கோயில் 1827ஆம் ஆண்டில் எழுப்பப்பட்டது. 1840ஆம் ஆண்டு முதல் இங்கு பூக்குழி இறங்கும் நிகழ்வு இடம்பெற்று வந்ததற்கான சான்றாக வரலாற்று ஆவணங்களும் கறுப்பு வெள்ளை காணொளிப் படமும் திகழ்கின்றன.
"சிங்கப்பூரில் திருவிழா என்றால் தைப்பூசமும் தீமிதியும்தான். பல நாள்களுக்கு முன்பே கொண்டாட்டம் தொடங்கிவிடும். கோயிலுக்குச் செல்வோம். பல ஆண்டுகளாகவே அம்மா, நான், குடும்பத்தில் அனைவருமே கும்பிடுதண்டம் போட்டு, பால்குடம் எடுத்து, நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகிறோம். தீமிதி முடிந்தபின் பூக்குழியை வலம்வருவோம். பூக்குழி மூடப்பட்ட பிறகுதான் தீபாவளி தொடங்கும். வீட்டில் எண்ணெய்ச் சட்டி வைப்போம், புத்தாடை எடுப்போம்," என்றார் பாலர் பள்ளி ஆசிரியையான நிவேதா லோகநாதன், 23.
சீனர்களின் பாரம்பரிய, வர்த்தக மையமான சைனாடவுனின் மத்திய பகுதியில், இடப்புறம் ஜாமிஆ சூலியா பள்ளிவாசலுக்கும் வலப்புறம் புத்தர் ஆலயத்திற்கும் நடுவே அமைந்து உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் இந்த முக்கியத் திருவிழா, இந்துக்களோடு இன, சமய பேதமின்றி சிங்கப்பூர் மக்கள் அனைவரும் பங்கேற்று மகிழும், சுற்றுப்பயணிகளையும் ஈர்க்கும் நிகழ்வாகத் திகழ்கிறது.
மும்மாதப் பெருவிழா
தீமிதித் திருவிழா ஒருநாள் விழா அல்ல என்று கூறிய ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் மூத்த அர்ச்சகரான சந்திரசேகர், இது கொடியேற்றத்தில் தொடங்கி, கொடியிறக்கும் வரையில் கிட்டத்தட்ட மூன்று மாத கால விழா என்று குறிப்பிட்டார். இதன் சிறப்பம்சம் என்னவெனில், திரௌபதை அம்மனுக்கு உகந்த நாள் திங்கட்கிழமை என்பதால், விழாவின் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அந்நாளில்தான் நடைபெறும் என்றார் திரு சந்திரசேகர்.
காலங்காலமாக மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்கும் இப்பெருவிழா, கடந்த ஈராண்டுகளாக கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சிறிய அளவில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்புக் காரணங்களுக்காக பார்வையாளர்கள், பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், மரபை விட்டுவிடாமல் சடங்குகள் வழக்கம்போல் இந்த ஆண்டும் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் தனிச் சன்னிதியில் குடிகொண்டிருக்கும் திரௌபதை, மகாபாரதத்தின் நாயகி; பஞ்ச பாண்டவர்களின் மனைவி; தர்மரின் பட்டத்து அரசி. பாரதப் போருக்கு காரணமாக விளங்கிய துணிவும் உறுதியும் மிக்க பெண். இப்பெருமகளை மையப்படுத்தியே தீமிதித் திருவிழா நடைபெறுகிறது.
பெரியாச்சி பூசை
திருவிழாவின் முதல் நிகழ்வாக பத்ரகாளியின் மறுவடிவம் என்று கூறப்படும் பெரியாச்சி அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படும். அன்று தலைமைப் பண்டாரம் வேப்பிலைக் கரகம் சுமப்பார், தீச்சட்டி ஏந்துவார்.
ஆஞ்சநேயரின் உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டு, விழா தொடங்கும். தொடர்ந்து திரௌபதை திருக்கல்யாணம் நடைபெறும். அர்ஜுனன் தன் அன்னை குந்திதேவியிடம் பாஞ்சாலியை அறிமுகம் செய்த பின்னர், மணவிழா ஏற்பாடுகள் நடைபெறும். பாண்டவர்கள் - பாஞ்சாலி மணவிழா வெகுசிறப்பாக நடைபெறும். இந்நிகழ்வுகள் மூன்று வாரங்கள் தொடர்ந்து ஒவ்வொன்றாக இடம்பெறும்.
மகாபாரதப் போரை ஒட்டி விழா நிகழ்வுகள் நடைபெறும். பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் 18 நாள்கள் நடந்த முக்கிய நிகழ்வுகள் நாடகமாக நடத்தப்படும். அக் காலத்தில், தீமிதித் திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் மகாபாரதம் வாசிப்பர் என்று நினைவுகூர்ந்தார் மூத்த தொண்டூழியர் ஒருவர்.
அர்ஜுனன் தபசு
போர் தொடங்கியதும் திரௌபதை அம்மன் வண்ணப்புடவைகளையும் அலங்காரங்களையும் துறந்து, ஒற்றை மஞ்சளாடையில் இருப்பார். அவை நடுவில் தன்னை அவமதித்த துரியோதனனின் தொடையைப் பிளந்து அவன் ரத்தத்தைத் தடவும் வரையில் கூந்தல் முடிக்க மாட்டேன் எனச் சபதம் எடுத்து, தலைவிரி கோலமாகவே இருப்பார்.
பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின்போது, சிவபெருமானிடம் ஆயுதம் பெற அர்ஜுனன் தவம் செய்யும் 'அர்ஜுனன் தபசு' ஒரு முக்கிய நிகழ்வு.
அர்ஜுனனின் தவத்தைக் கலைக்க அசுரன் ஒருவன் காட்டுப்பன்றி உருவெடுத்து பரணை முட்டும் காட்சியும், அர்ஜுனனின் கடும் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் அவருக்கு ஆற்றல்மிக்க பாசுபதாஸ்திரத்தை அளிப்பதும் இந்த நிகழ்வில் சித்திரிக்கப்படும். அர்ஜுனனை மயக்க துரியோதனனால் அனுப்பப்படும் மோகினி வரும் காட்சிகள் முன்பு இடம்பெற்றன என்றார் ஸ்ரீ மாரியம்மன் கோயிலின் செயலாளர் கதிரேசன் சண்முகம்.
அரவான் களப்பலி
போர் தொடங்குமுன் அர்ஜுனனுக்கும் நாக கன்னிக்கும் பிறந்த நல்லரவன் என்ற அரவான், பாண்டவர்கள் போரில் வெல்ல வேண்டும் என்பதற்காக காளிக்குத் தன்னையே பலிகொடுப்பார்.