படங்கள்:
திமத்தி
டேவிட்
செய்தி:
பாவை சிவக்குமார்
ஈராண்டுகளுக்குமுன் சீனாவில் தோன்றி, உலகையே உலுக்கிவரும் கொவிட்-19 கிருமியால் மனிதகுலம் எதிர்கொண்டு வரும் சிரமங்களைச் சொல்லி மாளாது!
அதனால் பாதிக்கப்படாத நாடு, அதன் தாக்கமில்லாத துறை எதுவுமில்லை என்று சொல்லும் அளவிற்குப் படாதபாடு படுத்தி வருகிறது.
மக்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சும் நிலையை ஏற்படுத்திவிட்டது கொரோனா பரவல்.
அந்த அச்சத்தாலும் அக்கிருமியைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தின் அறிவிப்புகளாலும் சாரை சாரையாக மக்கள் வந்துசெல்லும் லிட்டில் இந்தியாவிற்குவந்துசெல்வோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.
இந்நிலையில், சிங்கப்பூர் மக்கள்தொகையில் 85 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதை அடுத்து, அரசாங்கம் படிப்படியாகக் கட்டுப் பாடுகளைத் தளர்த்தி வருகிறது.
அவ்வகையில், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தால் உணவங்காடி நிலையங்களிலும் காப்பிக் கடைகளிலும் ஐவர் சேர்ந்து உண்ணலாம்; வெளியிடங்களில் அதிகபட்சம் ஐந்து பேர் ஒன்றுகூடலாம்; வீடுகளில் ஒருநாளைக்கு விருந்தினர் ஐவரை வரவேற்கலாம் என்பன போன்ற தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், தங்களின் வணிகத்தில் பெரிதாக எதுவும் மாற்றம் இல்லை என்று தெரிவித்தனர்.
"முன்பு திருமண நிகழ்வுகளில் ஏறக்குறைய ஆயிரம் பேர் கலந்துகொள்வர். அதற்கு ஏற்றாற்போல், ஆயிரம் முழம் பூக்களை வாங்கிச் செல்வர். இப்போது நூறு பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்றால் நூறு முழம் பூவைத்தானே வாங்குவார்கள்?" என்றார் 'ஓம் சிவசக்தி' பூக்கடை உரிமையாளர் திரு முருகேசன் வேலுமணி.
சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டே கொவிட்-19 பரவல் தங்களது வணிகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று லிட்டில் இந்தியா கடைக்காரர்களில் பலரும் கூறுகின்றனர்.
"இந்த ஆண்டு சிங்கப்பூரர்களைவிட பெரும்பாலும் மலேசியர்களே எங்களது கடைகளில் துணிமணிகள் வாங்கினர்," என்று தேக்கா நிலையத்தின் செயலாளரும் பூஜா துணிக்கடையின் உரிமையாளருமான திரு அஜித் குமார் கூறினார்.
சிங்கப்பூரர்கள் அதிகமாக இணையம் வழியாகத் துணிமணிகளை வாங்குவதால் தங்களது வியாபாரம் சற்று மந்தம் அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
"எங்களால் முடிந்தவரை வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறோம். எங்களது சேவைக்காகவே வாடிக்கையாளர்கள் பலர் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்கள்," என்று சொன்னார் அணிகலன்கள் வணிகரான திரு க.குணசேகரன்.
நேற்று முன்தினம் மாலையில் தேக்கா நிலையத்திற்குத் தமிழ் முரசு சென்றிருந்தபோது, அங்கு இருந்த உணவங்காடி நிலையத்தில் கூட்டம் குறைவாக இருந்ததைக் காண முடிந்தது.
"இன்று வெள்ளிக்கிழமை போலவே இல்லை!" என்று அங்கு பிரியாணிக் கடை வைத்து நடத்திவரும் திருவாட்டி சித்தி ஜுபைதாவும் அவரின் மகள் ரதியாவும் வருத்தத்துடன் கூறினார்.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்னும் ஒரு வாரம்கூட ஆகவில்லை என்பதால் இனி படிப்படியாக மக்கள் வருகை கூடும் என்றும் இவ்வார இறுதியிலேயே அதனைக் காணலாம் என்றும் லிட்டில் இந்தியா வணிகர்கள் நம்பிக்கையுடன் கூறினர்.
வணிகர்கள் வரவேற்பு
கொவிட்-19 சூழல் காரணமாக விடுதிகளைவிட்டு வெளியேற வெளிநாட்டு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் மெல்ல மெல்லத் தளர்த்தப்பட்டு வருவதை லிட்டில் இந்தியா வணிகர்கள் வரவேற்றுள்ளனர். இப்போது வாரந்தோறும் 21,000 வெளிநாட்டு ஊழியர்கள் வெளியில் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், சிங்கப்பூர் -மலேசியா இடையே தடுப்பூசி போட்டுக்கொண்டோர்க்கான தரைவழி 'விடிஎல்' பயணத் திட்டமும் நாளை 29ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக நாளொன்றுக்கு 2,880 பேர் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்றாலும் வாராந்திர அடிப்படையில் அந்த எண்ணிக்கை மறுஆய்வு செய்யப்படும் என்று அரசாங்கம் அறிவித்து இருக்கிறது. இவற்றுடன், இந்தியா உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு மீண்டும் விமான சேவைகள் தொடங்கப்படவுள்ளன. இந்தத் தளர்வுகளையும் புதிய அறிவிப்புகளையும் படிப்படியாகப் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான முதற்படியாகக் கருதும் வணிகர்களும் தொழில்துறையினரும், தங்களுக்கு இனி நல்லகாலம்தான் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர்!