காலஞ்சென்ற தமது தந்தையின் ஊக்கத்தினால் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சேர்ந்த மேஜர் வினோத் குமார், 41, அதிபருக்கான புதிய கௌரவ ராணுவ உதவியாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர்நிலைப் பள்ளிப்பருவத்தில் சிங்கப்பூர் அதிபரின் பக்கத்தில் நிற்கும் ராணுவ உதவியாளர்களைத் தொலைக்காட்சியிலும் செய்தித்
தாளிலும் கண்ட திரு வினோத், தாமும் அந்த இடத்திற்கு வந்துள்ளதை எண்ணி மிகவும் பெருமை அடைவதாகத் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
அதிபர் மாளிகைளில் நடை
பெறும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் உதவிகளையும் செய்ய முழுநேர உதவியாளர்களுக்கு இந்தக் கௌரவ உதவியாளர்கள் துணைபுரிவர். இந்தப் பொறுப்புக்கு கடந்த ஆண்டு 103 பேர் நியமிக்கப்பட்டபோதும் அதற்கான அதிகாரபூர்வ நிகழ்ச்சி கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு, இம்மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது.
சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளான இந்த உதவியாளர்கள், தங்களது அன்றாடப் பணிகளுடன் இந்தப் பொறுப்பையும் நிறைவேற்றுவர்.
முதல் ஈராண்டுகளுக்கு இவர்கள் குறைந்தது 60 மணி நேரம் பணியாற்றுவர்.
மூன்றாம் ஆண்டு முதல் ஆண்டுக்குக் குறைந்தது 48 மணி நேரம் இவர்கள் பணியாற்ற வேண்டியிருக்கும்.
2000ஆம் ஆண்டு தேசிய சேவையில் அதிகாரியாக உயர்ந்த திரு வினோத், ஈராண்டுகள் தேசிய பல்கலைக்கழகத்தில் பயின்று குடிமைப் பொறியாளராகப் பட்டம் பெற்ற தாகவும் பின்னர் முழுநேர தேசிய சேவையாளராக மாறி அதிரடிப் படையில் சேர்ந்ததாகவும் கூறினார்.
காவல்துறை அதிகாரியான தமது தந்தையாலும் ஆகாயப் படை அதிகாரியான தமது அண்ணனாலும் ஊக்கமும் உந்துதலும் பெற்றதாகக் கூறினார் திரு வினோத்.
2015ஆம் ஆண்டு தேசிய தின அணிவகுப்பின்போது அதிபரின் கௌரவ பாதுகாவலராகப் பணியாற்றியபோது அளவில்லா ஆனந்தம் அடைந்த தமது தந்தை, இப்போது தமக்குக் கிடைத்திருக்கும் கௌரவத்தைக் காண உயிருடன் இல்லையே என்ற ஏக்கம் திரு வினோத்திற்கு உண்டு.
புதிதாக நியமிக்கப்பட்ட கௌரவ ராணுவ உதவியாளர்களில் மற்றொருவரான மேஜர் (என்எஸ்) டாக்டர் ரமேஷ் விஜயா, 40, சாங்கி பொது மருத்துவமனையில் மூத்த அறுவை சிகிச்சை ஆலோசகராகவும் டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியில் மருத்துவ உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றுகிறார்.
2012ஆம் ஆண்டு தமது தேசிய சேவைப் பொறுப்புகளை முடித்த பிறகும் தொடர்ந்து சேவையாற்ற தமது தந்தை ஊக்குவித்ததாக டாக்டர் ரமேஷ் தெரிவித்தார்.
"இந்நாட்டில் முதன்முதலாகத் தகுதிபெற்ற தேசிய சேவை அதிகாரிகளில் ஒருவரான எனது தந்தை, சேவை மனப்பான்மையின் முக்கியத்துவத்தை என்னுள் நிலைநாட்டினார்," என்று அதிரடிப் படையில் தேசிய சேவையாற்றும் டாக்டர் ரமேஷ் கூறினார்.
இந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட முதல் தயார்நிலை சேவையாளரான டாக்டர் ரமேஷ், தமது வழக்கமான பணியிலும் தேசிய சேவையிலும் பெறாத அனுபவங்களை புதிதாகக் கிடைத்திருக்கும் வாய்ப்பின் மூலம் பெறவிருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.
செய்தி: கி.ஜனார்த்தனன்

