இந்திய உணவக உரிமையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் புதிய சட்ட விதிமுறை வந்து உள்ளது. இந்திய உணவகங்கள் இந்திய நாட்டு சமையல்காரர்களை வேலை அனுமதி அட்டைபெற இந்தப் புதிய சட்டம் வகை செய்கிறது.
சேவைத்துறை வேலையில் இந்திய நாட்டவரை வேலை அனுமதி அட்டையில் (ஒர்க் பர்மிட்) அமர்த்த முடியாது என்பது தற்போதுவரை உள்ள கட்டுப்பாடு.
புதிய விதிமுறையை லிட்டில் இந்திய உணவகங்களும் மற்ற இந்திய உணவகங்களும் வரவேற்றுள்ளன. ஈராண்டாகப் பாதிக்கப்பட்டிருந்த தமது வர்த்தகம் இனி மெல்ல மீண்டு வரும் என்று நம்புவதாக சகுந்தலாஸ் உணவக உரிமையாளர் மாதவன் ஆதிபால கிருஷ்ணன், 52, தெரிவித்தார். கூடுதலாக பதார்த்தத் தெரிவுகளை வழங்கி வாடிக்கையாளர்களை மகிழ்விக்கலாம் என்று அவர் கூறினார்.
"இந்தியாவிலிருந்து வரும் சமையல்காரர்களை இந்திய உணவின் சுவைக்காக பயன்
படுத்த முடியும். நடப்பிலுள்ள விதிமுறையில் இரண்டு மூன்று சமையல்காரர்கள் மட்டும் எங்களுக்குக் கிடைக்கின்றனர்," என்று அவர் கூறினார்.
இந்தியர் அல்லாதோரை சமையல் வேலையில் வைப்பது மிகவும் சிரமம் என்று முத்து'ஸ் கறி உணவக உரிமையாளர் காசி விஷ்வநாத், 51, குறிப்பிட்டார்.
"சமையல் கலை கற்ற இந்தியர் அல்லாத மூவரை வேலையில் எடுத்தோம். அவர்கள் சில மாதங்கள் மட்டும் நீடித்தனர். தொழில்நுட்பத்தை நாம் எவ்வளவு பயன்படுத்தினாலும் ஆள் பற்றாக்குறையால் புதிய கிளைகளைத் திறந்து மேலும் விரிவு
படுத்த இயலவில்லை," என்று அவர் கூறினார்.
சமையல் வேலைக்கு $4,000 சம்பளம் தர முன்வந்தபோதும் அனுபவமுள்ள, திறமையான சிங்கப்பூரர்கள் விண்ணப்பிப்பதில்லை என்றார் சிலிகி சாலையிலுள்ள 'அலாடீன்ஸ் காசல்' உணவகத் தின் உரிமையாளர் கார்த்திகேயன் அருணநீதி, 36.
வேலை அனுமதி அட்டையில் அதிக சமையல்காரர்களைப் பெற வழிவகுக்கும் விதிமுறை மாற்றத்தை வரவேற்றாலும் கோமளாஸ் உரிமையாளர் திரு தனசேகரைப் பொறுத்தவரை இது தாமதமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு.
ஐந்து வெளிநாட்டு சமையற்காரர்களை வேலைக்கு அமர்த்த 50 உள்ளூர்க்காரர்களை வேலையில் வைத்திருக்க வேண்டியது தற்போதைய நிலை என்று சுட்டினார் காயத்திரி உணவகத்தின் உரிமையாளர் ச. மகேந்திரன்.
"எங்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து, ஆறு சமையற்காரர்கள் தேவை. ஆனால் 100 வாடிக்கையாளர்கள் சாப்பிடும் உணவகத்தில் 50 உள்ளூர்க்காரர்களை வைத்திருப்பது இயலாத ஒன்று," என்றார் அவர். 1990களில் இந்த உணவகத்தின் பிரதான கிளையில் 24 சமையற்காரர்கள் இருந்த நிலை மாறி தற்போது அங்கு 4 சமையல்காரர்களே உள்ளனர்.
உணவகங்கள், ஊழியர் எண்ணிக்கையில் 53 விழுக்காட்டினரை மலேசியாவிலிருந்தும் தைவான், தென்கொரியா, மக்காவ், ஹாங்காங் ஆகிய இதர ஆசிய நாடுகளிலிருந்தும் வேலை அனுமதியின்கீழ் சேர்க்கலாம். இதே விழுக்காடு இந்தியர்களும் அனுமதிக்கப்படுவர் என திரு மகேந்திரன் எதிர்பார்க்கிறார்.
2004ஆம் ஆண்டு எஸ் பாஸ் அறிமுகத்திற்குப் பிறகு சிங்கப்பூரர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை படிப்
படியாகக் கூடி, வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படும் எண்ணிக்கை குறைந்தது.
தகுந்த ஆட்களை எடுக்க இயலாமல் தத்தளித்து வந்த 'வில்லேஜ் கறி' என்ற சிறிய உணவகத்தின் உரிமையாளர் திருமதி பிரபா பாலசுப்ரமணியம், வேலை செய்துகொண்டிருந்தபோது அவரது கை கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தில் சிக்கி முறிந்தது. கை இன்னும் சரியாக குணமாகாத நிலையில், நால்வர் மட்டும் வேலை பார்க்கும் அந்த உண வகத்தில் அவர் தொடர்ந்து வேலை செய்கிறார். புதிய மாற்றம் மூலமாக மேலும் இந்தியர்களை வேலையில் சேர்க்க முடிந்தால் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக நீடித்த தங்களது விருப்பம் நிறைவேறும் என்று திருமதி பிரபாகூறினார். "நான் மட்டுமல்ல, என் சமையல்காரர் திரு நாகராஜனுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு தற்போது சிறுநீரகக் கோளாற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்," என்றார் அவர்.
புதிய மாற்றம் மிகத் தாமதமாக வருவதாகக் கருதும் ஆம்பூர் பிரி யாணிக் கடை உரிமையாளர் முத்து சாமி ஞானசேகரன், 38, "அடுத்த ஆண்டு நிகழும் மாற்றத்துடன் பிரச்சி னைகள் ஓய்ந்துவிடாது. எஸ் பாஸ் சம்பளம், தீர்வை, ஜிஎஸ்டி உள்ளிட்ட செலவுகள் அதிகரிக்கும் என்பதே எனது கவலை," என்றார். வேலை அனுமதி அட்டை தொடர்பான மாற்றங்கள் 2023 செப்டம்பரில் நடப்புக்கு வரும். அதற்கு முன்பாக, இவ்வாண்டு செப்டம்பரிலேயே எஸ் பாஸ் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளமும் தீர்வைகளும் உயர்த்தப்படவுள்ளன.
சிங்கப்பூரில் உள்ள இந்திய உணவகங்கள் இந்தியாவிலிருந்து சமையல்காரர்களை 'ஒர்க் பெர்மிட்'டில் வேலைக்கு தருவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இங்குள்ள இந்திய உணவக உரிமையாளர்கள் பலரின் நீண்டநாள் கனவு. கனவு கைகூடி வருவதால் அவர்களுக்கு நிம்மதி.

