குழந்தை ஒன்றைத் தத்தெடுக்க இளமையிலிருந்தே ஆசைப்பட்ட திருமதி ரதி, தமது விருப்பத்தை வெளிப்படுத்தியபோது வியந்து
போனார் அவரது கணவர் திரு சரவணன். இதைச் சற்றும் எதிர்பாராத அவர், பல்வேறு கோணங்களில் சிந்தித்த பின்னர் மனைவியின் முடிவுக்கு இசைந்தார். தங்களது முதல் குழந்தைக்குப் பின்னர் அவர்கள் குழந்தை அன்ஷூவைத் தத்தெடுத்தனர்.
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் குழந்தை பராமரிப்பு இல்லம் ஒன்றிலிருந்து அன்ஷூவைத் தத்தெடுப்பதற்கு 4 ஆண்டுகள் போராடினர் இருவரும். சட்ட விவகாரங்களை முடித்துவிட்டு கொவிட்-19 சூழலின் உச்சக்கட்டத்தில் இந்தியாவுக்குச் செல்லவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.
"கிருமிப்பரவல் மிகுந்திருந்த அந்தக் கட்டத்தில் இந்தியாவுக்குச் செல்வது சற்று அச்சத்தைத் தந்தது. ஆயினும், அப்போதே சென்று அன்ஷூவை மீட்கவேண்டும் என்ற ரதியின் உறுதியான முடிவே சரியானதாக அமைந்தது," என்றார் பொறியாளரான திரு சரவணன் ஜெயராமன், 43.
இருவரும் மணமுடித்து சுமார் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. பெற்றோர் பார்த்து நடத்திவைத்த திரு
மணம். எளிதில் கோபப்படக்கூடிய கணவரின் சுபாவத்தை திருமணத்துக்குப் பின்னர் அறிந்தார்
திருமதி ரதி.
"நான் நேரடியாக எதையும் வெளிப்படுத்திவிடுவேன். கோபத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அவரிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். காலப்போக்கில், இருவரும் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளக் கற்றுக்கொண்டோம்," என்றார் ஆசிரியரான திருமதி ரதி பிரீத்தா, 38.
"எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் உறங்கச் செல்லும் முன் அதனைத் தீர்த்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டோம். முன்னர் நடந்த வேண்டாத சம்பவத்தை குத்திக்காட்டவும் மாட்டோம். இதனால் மகிழ்ச்சியாக உள்ளோம்," என்றார் திரு சரவணன்.