திரை கட்டி பொம்மைகளை ஆட வைத்து படைக்கப்படும் பொம்மலாட்டத்தை கணினித் திரைக்குக் கொண்டு வந்துள்ளனர் இளையர்கள் சஞ்சய் முத்துக்குமரனும் சக்தி நிவாஸும். 'கிளாஸிக்கல் சைபர் ஆர்ட்ஸ்' நிறுவனத்தை நடத்தும் இருவரும் இதுவரை 30 உயர்நிலைப் பள்ளிகளில் பொம்மலாட்டக் காணொளிப் பயிலரங்குகளை நடத்தியுள்ளனர்.
இவ்வாண்டு உமறுப் புலவர் தமிழ் நிலையத்தில் அவர்கள் நடத்திய பயிலரங்கு 300 மாணவர்களை ஈர்த்தது. மின்னிலக்க முறையில் பொம்மலாட்டக் காணொளிகள் தயாரிப்பது குறித்து அறிய ஆசிரியர்களும் விருப்பம் தெரிவித்ததாக சஞ்சய், சக்தி இருவரும் கூறினர்.
பயிலரங்குகளில் பங்கேற்கும் மாணவர்கள், புத்தாக்க முறையில் கதைகளை உருவாக்குவது பற்றி கற்றுக்கொண்டனர். மேலும், தனித்துவமான பொம்மைகளைச் செயலியில் வடிவமைப்பது, இசை சேர்ப்பது, முதலியவற்றையும் சஞ்சயும் சக்தியும் கற்றுக்கொடுக்கின்றனர்.
வழக்கமாகப் பொம்மலாட்டத்தில் இடம்பெறும் ராமாயணம் முதலிய புராணக்கதைகளைப் பற்றி இப்பயிலரங்கு விவரிக்கிறது. ஆனால், மாணவர்கள் தங்களின் கற்பனை வளத்தைக் கொண்டு பிரபல திரைப்பட நடிகர்கள், கேலிச்சித்திரக் கதாபாத்திரங்கள் ஆகியவற்றைக் கொண்டு சுயமாகக் கதை படைக்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
சென்னையின் தக்ஷினா சித்திரா கலை அரும்பொருளகத்துக்குச் சென்றிருந்த சஞ்சய், அங்கு பொம்மலாட்டக் கலைஞர்களைச் சந்தித்து, இக்கலையைப் பற்றி மேலும் அறிந்து வந்தார்.
"நவீனமயமாகியுள்ள இக்காலத்தில் படத்தொகுப்பு முதலிய திறன்கள் இன்றியமையாதவை. அவற்றை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கக்கூடிய தனிப்பட்ட பாடங்கள் இல்லை. பாரம்பரியத் தமிழ்க் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் மூலம் நவீன திறன்களையும் வரலாறு குறித்த புரிதலையும் மாணவர்களுக்கு அளிக்க முற்படுகிறோம்," என்றார் 20 வயது சஞ்சய்.
தேவைப்படுவோருக்கு உதவ இந்நிறுவனத்தின் வருவாயைப் பயன்படுத்த இருவரும் முற்படுகின்றனர். அதோடு, செயலி உருவாக்கும் கனவை நனவாக்க வருவாயில் ஒரு பகுதியை ஒதுக்கியும் வருகின்றனர்.
"20 வயது இளையர்களால் என்ன கற்றுக்கொடுத்துவிடமுடியும் என்று பலரிடையே வரும் சந்தேகம் எங்களைச் சோர்வடையச் செய்ததில்லை. ஏனெனில், பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களும் அதீத ஆர்வமுள்ள மாணவர்களும் எங்களைப் பாராட்டுகின்றனர். எங்களின் பயிலரங்குகளின் மூலம், தமிழ் மொழியையும் வளர்க்க முற்படுகிறோம்," என்றார் 20 வயது சக்தி நிவாஸ்.
தற்போது மின்னிலக்கப் பொம்மலாட்டத்தைக் காணொளியாக்க மூன்று செயலிகள் தேவைப்படுகின்றன. அவற்றை ஒரே செயலியில் ஒருங்கிணைக்கவும், 4,000 ஆண்டு பொம்மலாட்ட வரலாற்றை விவரிக்கும் தளத்தை உருவாக்கவும், தனிப்பட்ட செயலியைத் தாமாக உருவாக்குவதே இவர்களின் கனவு..