ஆ. விஷ்ணு வர்தினி
மாதங்கி இளங்கோவன்
திரைகடலோடி திரவியம் தேட சிங்கப்பூருக்கு வந்த நம்மோடு நமது பண்பாடும் சேர்ந்தே வந்தது. அதுவே, அன்றாட வாழ்க்கையில் நம் கையைப் பிடித்தும் அரவணைத்தும் நம்மை வழிநடத்திச் செல்கிறது. தமிழராக நம் அடையாளத்தின் ஆணிவேராகத் திகழும் நமது வரலாற்றை, பாரம்பரியத்தை, அரும்பெரும் மரபைக் கண்டறிய உள்நோக்கித் தேடியவர்களையும் வெளியுலகில் பயணம் செய்தோரையும் கண்டு வந்தது தமிழ் முரசு.
அந்தாதி - ஆதியும் அந்தமும் இல்லா வரலாறு
சிங்கப்பூரில் முதன்முறையாக தெற்காசிய வரலாற்று ஆய்வு, அரும்பொருளகம் குறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கும் சேவையைத் தொடங்கியுள்ளார் அத்துறையில் கல்வி அறிவும் 18 ஆண்டுகள் அனுபவமும் பெற்றுள்ள குமாரி நளினா கோபால் (படம்).
'அந்தாதி' எனும் வரலாற்று ஆய்வு, அரும்பொருளக ஆலோசனை நிறுவனம் தெற்காசியாவின் புலம்பெயர்ந்தோர் வரலாறு குறித்து ஆலோசனை வழங்குகிறது.
சர் ஸ்டாம்ஃபர்ட் ராஃபிள்சுடன் சிங்கப்பூரில் காலடி வைத்த நாராயண பிள்ளை பற்றி எல்லாருக்கும் தெரியும். ஆனால், எப்படி இருப்பார் என்று தெரியாது. கற்பனை கலந்த சிற்பங்களால் மட்டுமே அவரைக் கண்டறிகிறோம். இத்தகைய முக்கிய மனிதர்களின் விவரங்கள் கிடைக்காமல்போனது எதனால், தங்களது வரலாற்றை அவர்கள் எவ்வாறு எழுதி இருப்பார்கள் எனப் பல கேள்விகள் குமாரி நளினாவிடத்தில் உள்ளன. அவை, இவரது வரலாற்று ஆய்வுப் பயணத்திற்கு உரமளித்து வருகின்றன.
"வரலாற்றில் ஆதியும் இல்லை, அந்தமும் இல்லை. 'அந்தாதி' என்ற கவிதை வடிவத்தை அறிமுகப்படுத்திய காரைக்கால் அம்மையாரும் தெற்காசிய வரலாற்றில் முக்கிய இடம்பெறுகிறார். என்றும் நின்றுவிடாத வரலாற்றுப் பயணத்தின் இயல்பு கருதி, 'அந்தாதி' எனப் பெயர் சூட்டி, வரலாறு குறித்த ஆலோசனை நிறுவனத்தைத் தொடங்கியுள்ளேன்," என்றார் தன்னார்வ ஆய்வாளரான 38 வயது குமாரி நளினா.
வரலாற்றுப் பாடத்தில் இளங்கலைப் பட்டமும் அனைத்துலகக் கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள குமாரி நளினா, இந்தியாவில் ஓர் அரும்பொருளகத்தில் பணியைத் தொடங்கினார். சிங்கப்பூருக்கு இவர் வந்தபோது இந்திய மரபுடைமைக் கழகம் அமைக்கப்பட்டு வந்தது. அதனை வடிவமைப்பதிலும் பொருள்கள் மற்றும் தகவல்களைத் தேடித் திரட்டுவதிலும் தொடக்ககால ஆய்வாளராகப் பணியாற்றிய இவர், சிங்கைவாழ் தமிழர்கள் வரலாற்றை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார்.
சிங்கப்பூர் இந்தியர்கள், தமிழர்களது வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களை இவர் கண்டறிந்துள்ளார்.
வளமிகு தமிழர் வரலாற்றை முழுமையாக ஆவணப்படுத்தத் தேவையான பதிவுகள் பல அழிந்தும் வீசியெறியப்பட்டும் கைக்கெட்டாமல் போய்விட்டது வேதனை அளிப்பதாகப் பகிர்ந்துகொண்டார் குமாரி நளினா.
தென்கிழக்காசியா மற்றும் சிங்கப்பூர்வாழ் தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் 'ஊர் திரும்பியவர் வேர் ஊன்றியவர்: தென்கிழக்காசியாவிலும் சிங்கப்பூரிலும் தமிழர் (Sojourners to Settlers)' நூலின் இணை ஆசிரியரான குமாரி நளினா, அந்நூலில் 'தமிழர்களின் நீள்பயணம்: சோழமண்டலக் கரைப் பூர்வீக மக்களின் வரலாற்றுக் குறிப்புகள்' என்ற கட்டுரையை எழுதியுள்ளார்.
15 முதல் 19ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் 'நீரிணை வட்டார (Straits region)' பகுதி தமிழர்களின் வரலாற்றை அறிவதற்கான ஆவணங்களைத் தேட, அடுத்த நான்கு ஆண்டுகளை அர்ப்பணிக்கவுள்ளதாக இவர் குறிப்பிட்டார்.
'அந்தாதி' பற்றி மேலும் அறிய www.specialistsatantati.com எனும் இணையத்தளத்தை நாடலாம்.
பாரம்பரிய உணவுகளை இணையம்வழி பிரபலப்படுத்த முயற்சி
திருவிழாக் காலங்களில் முத்தாய்ப்பாக அமைகின்றது தமிழர் உணவு. ஒவ்வொரு பண்டிகைக்குமென தனிச்சிறப்புமிக்க உணவு வகைகள் உண்டு. தம்மைப் போன்ற இல்லத்தரசிகளுக்கும் புதுமணத் தம்பதியருக்கும் இளம் வயதினருக்கும் ஏற்ற வகையில், அவற்றின் செய்முறைகளை இணையத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார் திருமதி ராஜேஸ்வரி விஜயானந்த், 40 (படம்).
'ராக்ஸ் கிச்சன்' எனும் பெயரில் 14 ஆண்டுகாலமாக தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இணையத்தளங்களை இவர் நடத்தி வருகிறார்.
தமிழ்ப் புத்தாண்டு நாளன்று அறுசுவை உணவு வகைகளை உண்டு வளர்ந்தவர் திருமதி ராஜேஸ்வரி. இளம் வயதில், அந்நன்னாளில் சமைக்கப்படும் வேப்பம்பூ ரசமானது இவருக்கு அறவே பிடிக்காது. அண்மைக் காலத்தில்தான், அது உடல்நலத்திற்கும் பெரிதும் கைகொடுப்பதை உணர்ந்து, அதன் செய்முறையை இணையத்தளத்தில் பதிவிட்டார்.
தமிழர் உணவை நாளும் உண்ணும்போது அதன் பெருமைகளை மறந்தே விடுகிறோம் என்கிறார் இவர்.
மூத்த உறவினர்கள் வாயிலாகக் கண்டறிந்து அவர் பதிவிடும் தமிழ்ப் புத்தாண்டு, கார்த்திகைத் திருநாள் முதலிய பண்டிகைகளின்போது செய்யப்படும் உணவுவகைகளின் செய்முறைகளுக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாக இவர் கூறினார்.
"திருமணமான பிறகு என் மாமியாரிடம் சமையல் கற்றுக்கொண்டேன். பின்னர், அம்மா, மூத்த உறவினர்கள் என்று பலரிடமும் பாரம்பரிய உணவுவகைகளின் செய்முறைகளைக் கற்றறிந்தேன். 'ஒரு கைப்பிடி' என்றெல்லாம் அவர்கள் சொல்லும் அளவுகளை நவீன அளவுகளுக்கு மாற்றியமைக்க முயற்சி செய்துள்ளேன்," என்றார் திருமதி ராஜேஸ்வரி.
அளவுக் கரண்டிகள், மின்சமையற்கலன் என மாறிவிட்ட இக்கால சமையல் முறைக்கேற்ப பாரம்பரிய உணவு செய்முறைகளை மாற்றியமைப்பதில் சிக்கல்கள் உண்டு. பலமுறை சுயமாக சமைத்துப் பார்த்த பின்னரே அச்செய்முறைகளைத் தெளிவாக எழுதிப் பார்க்கிறார் இவர்.
புகழ்பெற்ற உணவுகளைச் சிறுதானியங்கள் கொண்டு செய்வது எப்படி என்றும் இவர் ஆலோசனை செய்து, பதிவிட்டு வருகிறார்.
தமிழரின் அடையாளமாக விளங்கும் பாரம்பரிய உணவு வகைகள், உணவு வலைப் பதிவாளராகத் தமக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்துள்ளதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறார் திருமதி ராஜேஸ்வரி.
குறிப்பாக, சைவ உணவுமுறையிலும் தமிழர்களுக்கு பல்வேறு தனித்துவ உணவுவகைகள் இருப்பதைப் பிரபலப்படுத்த இவர் முயன்று வருகிறார்.
கதைகள்வழி அடையாளம் தேடும் கலாசார ஆர்வலர்கள்
கதை கேட்பதில் குமாரி கீர்த்திகா ரவீந்திரனுக்குக் கொள்ளை ஆர்வம். அப்பா கூறிய பண்பாட்டுக் கதைகளைக் கேட்டு பிரமித்துப்போவார். தன்னை வளர்த்த கதைகள் மற்றவர்களுக்கும் பயனளிக்க வேண்டும் என்று எண்ணிய குமாரி கீர்த்திகா, கடந்த மூன்றாண்டுகளாக சமூக ஊடகங்களின்வழி தமிழர் பண்பாட்டைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
வலைப்பூவில் தொன்மக் கதைகள், தமிழர் திருவிழா குறித்த வரலாற்றுக் கதைகள் என பதிவிட்டு வருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் எழுதப்படும் பதிவுகள் தமிழர்களையும் மற்ற இனத்தவரையும் ஈர்க்கின்றன.
இருமாத கால ஆராய்ச்சியின் பயனாக விளைந்தது, பலரின் கவனத்தையும் ஈர்த்த குமாரி கீர்த்திகாவின் 'திரௌபதியின் தீமிதி' என்ற தொடர்.
சிங்கப்பூரில் தீமிதித் திருவிழா தொடக்க காலத்திலிருந்து நடைபெற்று வருகின்றது. அதன் வரலாற்றை ஆவணங்கள், வாய்வழிக் கதைகள்மூலம் அவர் பதிவுசெய்துள்ளார்.
"யாருக்குத்தான் கதை கேட்கப் பிடிக்காது? ஈர்ப்புத்தன்மையுடன் கதைகளை எழுதும்போது மக்கள் ஆர்வத்துடன் படிக்கின்றனர். மரபுடைமையை மேலும் மேலும் அறிந்துகொள்ளும்போது நமது அடையாளம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது," என்கிறார் இந்த 26 வயது நங்கை.
தமிழர் பண்பாடு, பாரம்பரியம், சடங்குகள் குறித்த இவரது பதிவுகளுக்கு சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் வாசகர்கள் உள்ளனர்.
பாலர் பள்ளி முதல் தொடக்கப் பள்ளி வரையிலான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கில மொழிச் செறிவூட்டல் ஆசிரியராகப் பணியாற்றி வரும் குமாரி கீர்த்திகா, சிறாருக்கும் தமிழர் மரபுசார்ந்த கதைகளை எளிமையாகச் சொல்லி, வேரிலேயே தமிழையும் பண்பாட்டையும் விதைக்க முயற்சி செய்து வருகிறார்.
உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குத் தமிழ்க் கலாசாரத்தையும் வரலாற்றையும் தொகுத்து வழங்கும் நோக்கத்தில் பிறந்த முயற்சி, 'தமிழ்டேல்ஸ்'. தமிழர் எனும் ஒற்றை அடையாளம் இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களை அறிய உதவுகிறார் இந்த இன்ஸ்டகிராம் பக்கத்திற்கு உரியவரான குமாரி கபிலா தியாகராஜ், 28.
சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் என பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களோடு உரையாடும் வாய்ப்பைப் பெற்ற குமாரி கபிலாவிற்குத் தமிழ் பண்பாட்டின் அடியாழத்தைக் கற்றுக்கொள்ள மிகுந்த ஆவல்.
தனிப்பட்டவர்களின் கதைகளை மட்டும் பகிர்ந்துகொள்ளாமல் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தின் வாயிலாக தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளின், வெவ்வேறு தமிழ்ச் சமூகங்களின் வரலாற்றைப் பற்றிய தகவல்களையும் தேடித் தேடி எல்லாருக்கும் புரியும் வண்ணம் தொகுத்து வழங்கி வருகிறார் இவர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற குமாரி கபிலா, இப்போது வங்கியில் வர்த்தக ஆய்வாளராக பணிபுரிகிறார். சிறு வயதிலிருந்தே ஆவணப்படங்களை விரும்பிப் பார்க்கும் இவருக்கு தமிழ்ச் சமூகங்களின் பின்னணியைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது. தமிழ் இலக்கியங்கள், உணவுவகைகள், கலைகள், விழாக்கள் போன்றவற்றைப் பற்றி இவர் படிக்கத் தொடங்கினார்.
தமிழகத்தில் கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதர்களின், விலங்குகளின் எலும்புக்கூடுகள், சுடுமண் குழாய்கள், செங்கற்கள் போன்றவை குறித்து தம் பக்கத்தில் விவரமாக பதிவேற்றம் செய்திருந்தார் குமாரி கபிலா. இவ்வாறு இந்தியாவின் தமிழகத்தின், தமிழ்ச் சமூகத்தின் பல்லாயிரம் ஆண்டுத் தொன்மையை, வரலாற்றை உலகிலுள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தும் இவரது இன்ஸ்டகிராம் பக்கம், ஒரு மின்னிலக்க அருங்காட்சியகம்போல விளங்குகின்றது.
பச்சைக் குத்துதலைப் பற்றி இவர் பதிவேற்றம் செய்த வரலாற்றுத் தகவல்கள் இளையர்களை ஈர்த்தன. அந்தக் கலைக்குத் தொன்மையான வரலாறு இருப்பதையறிந்து அவர்கள் வியப்புற்றனர். ஆய்வுக்கட்டுரைகளையும் இணையம்வழி கிட்டிய சான்றுகளையும் பயன்படுத்தி, தமக்குக் கிடைத்த தகவல்களை இவர் ஒப்பிட்டுப் பார்ப்பார்.
மேலும், வாசகர்களை ஈர்க்க, குறிப்பிட்ட தமிழ்ச் சொற்களைத் தேர்ந்து எடுத்து அவற்றின் பொருளையும் அவை தமிழ்த் திரைப்படப் பாடல்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இவர் விளக்குகிறார்.
ஒவ்வொரு நாட்டிலும் தமிழர்களின் தமிழ்க் கல்விமுறை பற்றியும் அன்றாட வாழ்வில் அவர்கள் தமிழ்மொழியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதையும் நேர்காணல்கள்வழி அறிந்ததாகக் கூறிய திரு கபிலா, பிரான்சில் வசிக்கும் இளம் பெண் ஒருவரின் கதை தம் மனத்தைத் தொட்டதாகக் குறிப்பிட்டார்.
"அவர் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் சரளமாகப் பேசுபவர். அவரின் பெற்றோர் பெரும்பாலும் தமிழிலேயே பேசுவார்கள். இதனால், பெற்றோருடனான அவரது உரையாடல்கள் குறைந்தன. புரிந்துணர்வும் அவ்வளவாக இல்லை. குடும்பத்தினரிடையே உறவை வலுப்படுத்த தீர்மானித்த அப்பெண், தமது தமிழ்மொழித் திறனை வளர்க்க உறுதிபூண்டார். தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தார்; பாடல்களைக் கேட்டார்; பல்கலைக்கழகத்தின் இந்தியத் துறையில் ஈடுபட்டார். தமிழை மெல்ல மெல்லப் புழங்கத் தொடங்கிய அவர், பெற்றோர் உடனான தமது உறவை வலுப்படுத்தினார். மொழியால் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையே இருக்கும் உறவு வலுவடையலாம் என்பது அற்புதமான ஒன்றுதானே!" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் இந்தப் பண்பாட்டு ஆர்வலர்.
தமிழ்ப் பண்பாட்டின் அருமையையும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பையும் 'தமிழ்டேல்ஸ்' மூலம் எதிர்காலத் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இவரது பெருவிருப்பம்.