முரசொலி
நோய்நொடி இல்லா வாழ்க்கைதான் மனநிறைவான, முழுமையான வாழ்க்கை. நம் எல்லாரின் மிகப்பெரிய சொத்தும் அதுதான். ஆனால் பரபரப்பான இந்தக் காலச் சூழலில் பெரும்பாலானவர்கள் பொருள் நலனில் காட்டும் அளவுக்கு உடல் நலனில் அக்கறை கொள்வது இல்லை.
நாடு முன்னேறிய நாடு என்றாலும் உண்டு மகிழ, உடுத்தி மகிழ, கண்டு மகிழ, களித்து மகிழ அனுபவித்து வாழ வசதி வாய்ப்புகள் அதிகம் என்றாலும் உடல் நலன் இல்லை என்றால், எது இருந்து என்ன பயன் என்ற ஏக்கம்தான் மிஞ்சும்.
சிங்கப்பூரர்களைப் பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் இதை உணர்ந்து இதற்கு ஏற்ப அன்றாட பழக்கவழக்கங்களை அமைத்துக்கொள்கிறார்கள்.
உடற்பயிற்சி, மனநலன், நல்ல உணவு போன்றவற்றில் கவனம் செலுத்தி விவேகமாக நடந்துகொள்கிறார்கள். இதன் காரணமாகவும் மக்களின் உடல் நலனுக்கு உகந்த சூழலை அரசாங்கம் இடைவிடாது அமைத்து தருவதன் விளைவாகவும் சிங்கப்பூரர்களின் ஆயுள் உலகிலேயே அதிகமாக இருக்கிறது.
ஆனால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற முற்றிவிட்ட நெடுநாள் நோய்களைப் பார்க்கையில், தொடர்ந்து ஒருமித்த கவனம் செலுத்த வேண்டிய ஒரு நிலை இருந்துவருகிறது. சிங்கப்பூர் ஏற்கெனவே நீரிழிவு நோய்க்கு எதிராக பெரும் போரையே தொடங்கி இருக்கிறது.
நீரிழிவு காரணமாக சிறுநீரகம் செயல் இழந்துவிடும் நிலைக்கு ஆளாகும் நோயாளிகள் உலகிலேயே சிங்கப்பூரில் அதிகம் என்பது கவலை தருகிறது. அன்றாடம் ஏறக்குறைய புதிதாக ஆறு பேர் இந்த நோய்க்கு ஆளாகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, உணவில் உப்பை அதிகம் சேர்த்துக்கொள்ளும் சிங்கப்பூரர்களும் இருக்கிறார்கள். ஒருவர் நாள் ஒன்றுக்கு இவ்வளவு அளவு உப்பைத்தான் சாப்பாட்டில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் ஓர் அளவை நிர்ணயித்துள்ளது. ஆனால் அதைப் போல் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு உப்பை சேர்த்துக்கொள்வதால் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகும் சிங்கப்பூரர்கள் அதிகமாக உள்ளனர்.
இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களின் அளவு 2017ல் 24.2% ஆக இருந்தது. அது 2019 ஜூலை முதல் 2020 மார்ச் வரை கிட்டத்தட்ட 35.5% ஆகக் கூடிவிட்டது. மக்களுக்கு ஏற்படக்கூடிய இப்படிப்பட்ட முற்றிய நோய்களைத் தவிர்த்துக்கொள்ளவும் தடுத்துக்கொள்ளவும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இடைவிடாமல் முயற்சிகள் இடம்பெற்றுவருகின்றன. என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகள் அந்த முயற்சிகளைப் பாதித்துவிட்டன.
கொரோனா கிருமிப் பரவல் காரணமாக அதிலேயே ஒருமித்த கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் இத்தகைய நோயாளிகள், நோய்கள் மீது முன்பு காட்டப்பட்ட அதே அளவு கவனத்தை தொடர இயலாத ஒரு சூழல் ஏற்பட்டது. மக்களும் வீட்டிலேயே அடைபட்டு கிடந்ததால் உடற்பயிற்சி போன்றவற்றில் அவர்களால் அதிகம் ஈடுபட இயலவில்லை. சாப்பாட்டு பழக்கமும் மாறிவிட்டது.
இவை காரணமாக பொதுமக்களின் உடல் நலனில் வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுள்ளன. இப்போது கொவிட்-19 தொற்று வீரியம் ஒடுங்கிவிட்டதை அடுத்து இத்தகைய நெடுநாள் நோய்களில் மீண்டும் ஒருமித்த கவனம் முழுமூச்சாக இப்போது திரும்பி இருக்கிறது.
பொதுமக்களில் ஒவ்வொருவரும் உடல் நலனுடன் வாழ வேண்டும்; நோய்களை முன்னதாகவே கண்டறிந்து அவற்றை வளரவிடாமல் எடுத்த எடுப்பிலேயே தவிர்த்துக்கொள்ள வேண்டும்; இதைச் சாதிக்க ஒன்றுவிடாமல் அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் 'நலமிக்க எஸ்ஜி' என்ற இயக்கம் இடம்பெறுகிறது.
ஒவ்வொருவரிடத்திலும் ஏதாவது நோய் இருக்கிறதா என்பதை முன்னதாகவே கண்டறியவேண்டும். இதில் மருத்துவர்களும் சமூகமும் பெரும் பங்காற்ற வேண்டும் என்பதே நலமிக்க எஸ்ஜி இயக்கத்தின் குறிக்கோளாக உள்ளது.
அதாவது சிகிச்சைக்கு மருத்துவமனை என்ற அணுகுமுறையை மாற்றி அதற்குப் பதிலாக நோயாளிகளை மையமாகக் கொண்ட முன்தடுப்பு முன்மாதிரி அணுகுமுறையைக் கைக்கொள்வது இந்த இயக்கத்தின் மூல நோக்கமாகும்.
இதையொட்டி அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் 40 வயதும் அதற்கும் அதிக வயதுள்ள மக்களுக்குச் சுகாதார அமைச்சு அழைப்பு விடுக்கவிருக்கிறது.
அவர்கள் தங்களுக்கு விருப்பமான தனியார் மருத்துவர் ஒருவரைப் பார்க்க உறுதி தெரிவிக்கும் ஒரு தேசிய செயல்திட்டத்தில் கலந்துகொள்ளலாம்.
அந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு தங்கள் உடல்நலனில் மக்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வரவேண்டும் என்பதற்காக ஊக்குவிப்புகளும் இடம்பெறும் என்பதும் மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
காலக்கிரம முறைப்படி மருத்துவரைப் பார்த்து உடல்நலப் பராமரிப்பு பற்றிய ஆலோசனைகளைப் பெறுவது ஒருபுறம் இருக்க, உடல்நலனுக்கு உகந்த மேலும் சிறந்த பழக்கவழக்கங்களை, வாழ்க்கைப் பாணியை மக்கள் கைக்கொள்ள ஏதுவாக சமூகத்தை யும் இந்த இயக்கம் செம்மையாக ஈடுபடுத்திக் கொள்ளும். இந்த அணுகுமுறை சரியான ஒரு நேரத்தில் இடம்பெறும் ஒன்றாக இருக்கிறது.
சிங்கப்பூரில் கொவிட்-19 காரணமாக நீரிழிவு உள்ளிட்ட முற்றிய நோய்களுக்கு எதிரான முயற்சிகளில் கொஞ்சம் தேக்கம் ஏற்பட்டு இருந்தாலும் நிலைமை கைநழுவிப் போய்விடவில்லை.
மக்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கை முழுவதிலும் அவரின் உடல்நலனில் கவனம் இடம்பெறும் அளவிற்குப் பெரிதும் ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு சுகாதாரப் பராமரிப்பு இயக்கம் இடம்பெறப்போகிறது என்பதால் நல்ல விளைவுகளை நாடும் சமூகமும் மக்களும் எதிர்பார்க்கலாம் என்பது திண்ணம்.
தரமான சுகாதாரப் பராமரிப்பு, நலமிக்க வாழ்க்கைப் பாணி, நல்ல பழக்கவழக்கங்கள், சிகிச்சைக்கு குறைந்த செலவு முதலான பலவற்றையும் நலமிக்க எஸ்ஜி இயக்கம் சாதிக்கும்.
அந்த இயக்கம், நோய்வாய்ப்படும்போது மட்டும் சிகிச்சை அளிப்பதற்குப் பதிலாக எப்போதுமே சிங்கப்பூரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு உடல்நலனோடு, மனநலனோடு நீண்ட ஆயுளோடு அவர்கள் வாழ தேவையான அனைத்து விதமான ஆதரவையும் இடைவிடாமல் வழங்கும்.
என்றாலும் ஒருவரின் உடல்நலம் என்பது அவரையே சார்ந்தது. ஆகையால் மக்கள் முதலில் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்தி முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். அதோடு, அரசாங்கம் நீட்டும் உதவிக்கரத்தை நன்கு பற்றிக்கொண்டு, நோய் வருமுன்பே அதைத் தவிர்த்துக்கொண்டு நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ அவர்கள் உறுதிகொள்ள வேண்டும்.

