நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், மக்கள் செயல் கட்சியின் 4வது தலைமுறைத் தலைவர்களின் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டு, அடுத்த பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ளார்.
அவர் யார், அவரின் சாதனைகள், அவரின் தலைமைத்துவ பாணி, சிந்தனை எப்படி என்பதை எல்லாம் தெரிந்துகொள்ள உதவும்
மரின் பரேடு பகுதியில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் லாரன்ஸ் வோங். மசெக சமூக அறநிறுவன பாலர்பள்ளியில் படித்து பிறகு ஹேக் சிறார் பள்ளியில் சேர்ந்தார். வீட்டிலும் பள்ளியிலும் கட்டொழுங்குடன் வளர்ந்தார். பிறகு தஞ்சோங் காத்தோங் உயர்நிலை தொழில்நுட்பப் பள்ளிக்குச் சென்றார்.
விக்டோரியா தொடக்கக் கல்லூரியில் பயின்றபோது அமெரிக்காவில் படிக்க அரசாங்க படிப்பு உபகாரச் சம்பளம் கிடைத்தது.
அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன், மற்றும் மிக்சிகன்-ஆன் ஆர்போர் பல்கலைக் கழகங்களில் பொருளியல் இளநிலை, முதுநிலைப் பட்டம், ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் பொது நிர்வா கத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
சிங்கப்பூர் திரும்பியதும் வர்த்தக, தொழில் அமைச்சில் வேலையில் சேர்ந்தார். பிறகு நிதி, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல அமைச்சுகளில் பல பொறுப்புகளை மேற்கொண்டார். 2005ல் பிரதமர் லீ சியன் லூங்கின் பிரதான தனிச் செயலாளராக ஆனார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு எரிசக்திச் சந்தை ஆணையத்தின் தலைமை நிர்வாகியானார்.
14 ஆண்டுகள் சேவை
அரசாங்க சேவையில் 14 ஆண்டுகள் பணியாற்றிய திரு வோங், 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் வென்று நாடாளு மன்றம் சென்றார். இப்போது திரு வோங், மார்சிலிங்-இயூ டீ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். மக்கள் செயல் கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப் பினராகவும் திரு வோங் இருக்கிறார்.
கொவிட்-19 தொற்றைச் சமாளிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர் களில் ஒருவராக 2020 ஜனவரியில் திரு வோங் பொறுப் பேற்றார். 2021 மே 15ஆம் தேதி நிதி அமைச்சரானார். அதே ஆண்டு அதே மாதம் சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் நிர்வாகச் சபையின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2022 ஏப்ரல் 14ஆம் தேதி மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்களுக்கெல்லாம் தலைவராக மிகப் பெரும்பான்மையுடன் திரு வோங் தேர்வானார். அடுத்த பிரதமராகும் நிலையில் திரு வோங் இருக்கிறார்.
திரு வோங்கின் தந்தை, விற்பனை நிர்வாகி. இவர் 86 வயதில் சென்ற ஆண்டு ஆகஸ்ட்டில் காலமானார். திரு வோங்கின் தாயாருக்கு இப்போது வயது 82. இவர் ஆசிரியையாக பணியாற்றியவர். அண்ணன் ஒரு பொறியாளர். தனது 28 வயதில் திரு வோங் திருமணம் செய்துகொண்டார்.
மூன்றாண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து பெற்று இப்போது அவர் மறுமணம் செய்துகொண்டுள்ளார்.
அரசாங்க கல்விமான், அரசு ஊழியர், அரசியலில் ஈடுபாடு, அமைச்சர் என படிப்படியாக முன்னேறி நாட்டிற்கே தலைமை ஏற்கும் நிலையை எட்டியுள்ள நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங்கிற்கு வரும் டிசம்பர் வந்தால் வயது 50.
திரு வோங்கை தெரிந்தவர்கள் அல்லது அவருடன் பல ஆண்டுகளாக வேலை பார்த்தவர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு டஜன் பேரிடம் பேசியபோது திரு வோங் சுய கட்டுப்பாடுள்ள ஒருவர், தன்னை உணர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
எளிமையானவர், நம்பிக்கைக்குப் பாத்திரமானவர், நேர்மை, கடப்பாடு, திட நம்பிக்கை கொண்டவர் என்று அவர் பாராட்டப்படுகிறார்.
எல்லாரையும் உள்ளடக்குகின்ற, கலந்துரையாடல் பாணியிலான வழியில் சிங்கப்பூரை முன்னேற்றிச் செல்வது அவருடைய நோக்கமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சர், கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் இணைத் தலைவர் என்ற இரண்டு பெரும் பொறுப்புகளை மேற்கொண்ட திரு வோங், நெருக்கடி யான காலகட்டத்தில் தலைமைத்துவ ஆற்றலை மெய்ப்பித்து இருக்கிறார்.
இதுவே அவர் 4ஆம் தலைமுறைத் தலைவர்களுக்கு எல்லாம் தலைவராக உயர்ந்துள்ளதற்கு காரணம் என கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
சாதனைகள்:
யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடங்களில் ஒன்றாக பூமலை இடம்பெற்றது; 2013ல் அரும்பொருள்காட்சி சாலைகளுக்கு இலவச அனுமதிக் கொள்கை.
புதிய $100 மில்லியன் தேசிய இளையர் நிதி; எஸ்ஜி50 செயல்திட்ட அலுவலகத் தலைவர் பொறுப்பு ஏற்பு; எஸ்ஜி50 கலாசார, சமூகக் குழுவுக்குத் தலைமை.
சிங்கப்பூர் குடிமை வட்டார உருமாற்றம்; $200 மில்லயின் கலாசார இணை நிதி; 2015 தென்கிழக்கு ஆசிய விளையாட்டு வழிகாட்டிக் குழுவின் தலைவர் பொறுப்பு; 259 பதக்கங்கள் சாதனை.
ஆக்டிவ் எஸ்ஜி இயக்கம்; ஜூரோங் ஏரித் தோட்ட உருவாக்கக் குழுவுக்குத் தலைமை; கொவிட்-19 பணிக்குழுவுக்கு இணைத் தலைமை;
கொவிட்-19 சூழல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளைப் போக்க வேண்டும். அரசுக்கு வருமானத்தைக் கூட்ட ஜிஎஸ்டி வரி உயர்வு வேண்டும்;
அதனால் ஏற்படும் சுமை மக்களைப் பாதிக்காமல் இருக்க வேண்டும்; நாடு தொடர்ந்து முன்னேற வழி காண வேண்டும் என்ற நோக்கத்தோடு, 'ஒன்றாகச் சேர்ந்து முன்னேற புது வழியை அமைப்போம்' என்ற கருப்பொருளுடன் கூடிய 'நம் மக்களுக்காக, நம் குடும்பத்திற்காக, நம் எதிர்கால தலைமுறைகளுக்காக' என்ற புதிய வரவுசெலவுத் திட்டம்.