இர்ஷாத் முஹம்மது
பத்தாண்டுகளுக்கும் மேலாக அரசியல் களத்தில் பவனி வந்தாலும் கொவிட்-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்ட அமைச்சுகள் நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர் என்ற முறை யில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர் லாரன்ஸ் வோங் செயலாற்றியதைக் கூர்ந்து கவனிக்கக் கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்குக் கிடைத்தது.
திரு வோங், நெருக்கடியான காலகட்டத்தில் பதற்றம் இல்லாமல் செயல்திறன்மிக்க தலைமைத்துவப் பண்புகளை வெளிக்காட்டியவராக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வந்ததை ஊடகங்களிலும் சமூக ஊடகத் தளங்களிலும் கண்டோம்.
குறிப்பாக, அடிக்கடி தொலைக்காட்சிகளில் அவரைக் கண்டு அவரது பேச்சுத் திறமை உட்பட பண்புநலன்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் உன்னத வாய்ப்பை சிங்கப்பூரர்கள் பெற்றனர்.
இளையர் என்ற முறையில் எனக்கும் என் நண்பர்களுக்கும் அமைச்சர் லாரன்ஸ் வோங் குறித்த கருத்துகள் ஒத்துப்போகின்றன என்றே கூறவேண்டும்.
அரசியல், பொதுச் சேவை, நாட்டு நிர்மாணம் என்பவையெல்லாம் முறையே கடுமையானவை, சீரிய சிந்தனைமிக்கவை என்றாலும் இளையர்களை ஈர்க்கும்வண்ணம் அவற்றை அவர்களிடம் கொண்டு செல்பவர் அமைச்சர் வோங்.
மிகவும் சிக்கலான கொள்கைகளையும் திட்டங்களையும் எளிய முறையில் மக்களுக்கு எடுத்துச் சொல்லும் ஆற்றல் படைத்தவராக அமைச்சர் லாரன்ஸ் வோங் பலராலும் வர்ணிக்கப்படுகிறார்.
செய்தியாளராகப் பல முறை திரு வோங்கை சந்திக்கவும் பேட்டி காணவும் எனக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. அந்த நினைவலைகளைப் புரட்டிப் பார்த்தால் அவரது மென்மையான பேச்சு தனித்து நினைவில் நிலைத்துள்ளது.
பதிலளிக்க முடியாத சூழலிலும் பொறுமையாக விளக்கம் அளிக்கும் குணம் படைத்தவர். பாரபட்சம் பாராமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக புன்சிரிப்புடன் பேசக்கூடிய அவரின் பண்பை ரசிப்பதாக பலரும் தத்தம் சமூக ஊடகத் தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
அரசியல் தலைவர் என்றால் கோட்பாடுகள் மிகுந்து, கட்டுச்சிட்டாக, எப்போதும் இறுக்கமாக பேசுபவர் என்ற எதிர்பார்ப்புகள் இருந்துவரும் என்றாலும் வித்தியாசமாக, அமைதியாக, சகஜமாகப் பேசுப வராக, பழகுபவராக திரு வோங் இருப்பதாக இளையர்கள் பகிர்ந்தனர்.
இவற்றையெல்லாம் தாண்டி, ஆற்றல்மிக்கவராகவும் பிரச்சினைகள் எதுவாகஇருந்தாலும் சிறந்த முடிவுகளைத் திறம்பட நம்பிக்கையுடன் எடுத்து, அதில் நிலையாக இருந்து, மக்கள் நலனுக்காகவும் நாட்டின் நலன் கருதியும் அவர் செயல்பட்டுவந்துள்ளார் என்ற கருத்தும் இளையர் வட்டத்தில் நிலவுகிறது.
ஆக மொத்தத்தில், அவர் இளையர்கள் பலரது தனிப்பட்ட விருப்பமாகவும் தெரிவாகவும் உள்ளார் என்பதைத் தாண்டி இக்கட்டான சூழல்களில் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நம்மை வழிநடத்துபவராகவும் தலைமைப் பொறுப்பைச் சீரிய முறையில் ஏற்கக்கூடியவராகவும் திரு வோங் கருதப்படுகிறார்.
அவர் பிரதமராகும் காலத்தை எதிர்பார்த்து இளையர்கள் காத்துள்ளனர்.

