இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் தேர்வுப் போட்டிகளுக்காகக் கடுமையாக உழைத்திருந்தார் திவ்யா.
ஆனால், எதிர்பாராத வகையில் பயிற்சியின்போது திவ்யாவின் இரு கணுக்கால்களிலும் உள்ள தசைகள் துண்டிக்கப்பட்டபோது அவர் மனமுடைந்து போனார்.
14 ஆண்டுகால வாள்வீச்சு பயிற்சியில் அதுவரை அவர் காயமடைந்ததில்லை. சொல்லொணா வருத்தத்தில் பல மாதங்கள் அவர் ஆழ்ந்திருந்தார்.
"உடலளவிலும் மனதளவிலும் இக்காயங்கள் என்னை பாதித்தன. மீண்டும் பயிற்சிக்குத் திரும்புவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் பிடித்தது. இம்முறை என்னால் பங்குபெற முடியாவிட்டாலும், அடுத்த முறை கண்டிப்பாக முதல் இரண்டு இடங்களை நான் பிடிப்பேன் என்பதில் எனக்கு சந்தேகமில்லை. அதை நோக்கி உழைக்கத் தொடங்கிவிட்டேன்," என்றார் 20 வயது லசால் கலைக்கல்லூரி பட்டதாரி திவ்யா அஷ்டி சிவகுமார்.
ஆறு வயதில் தேசிய வாள்வீச்சு வீரர் ஒருவரைக் கண்டு பிரமித்துப்போனதில் திவ்யாவும் வாளைப் பிடித்தார். அன்றிலிருந்து இன்றுவரை தனது வாளை அவர் கைவிடவில்லை.
திவ்யாவின் ஒவ்வொரு வெற்றியிலும் பங்குகொண்டிருந்தார், 1970களில் தேசிய குத்துச்சண்டை வீரராக இருந்த அவரது தாத்தா திரு லோகநாதன்.
தனது பதக்கங்கள் ஒவ்வொன்றையும் சிறிது நேரம் கையில் வைத்துக்கொண்டு தன்னைப் பார்த்து பெருமிதமடைவார் என்று கூறி நெகிழ்ந்தார் திவ்யா.
"வாள்வீச்சு செலவு அதிகமானதொரு விளையாட்டு. மேலும் ஆபத்துகள் நிறைந்த வாள்வீச்சை மேற்கொள்ளும் பெண்கள் சமூகத்தின் கருத்துகளால் மனம் தளர்ந்து போவதுண்டு," என்று கூறிய திவ்யா, நிதி நெருக்கடிகளாலும், புண்படுத்தும் கருத்துகளினாலும், தன்னுடன் பயணித்த பெண் வாள்வீச்சு வீரர்கள் இவ்விளையாட்டிலிருந்து விலகிவிட்டதாகக் கூறினார்.
"இவ்விளையாட்டில் ஒரே இந்தியராக இருந்ததால் பாதிக்கப்பட்டு, இந்த விளையாட்டிலிருந்து விலகிவிடலாமா என்று நான் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால், இவ்விளையாட்டில் இன்னும் பல இமயங்களை நான் தொட வேண்டி உள்ளது. அவற்றை அடையாமல் நான் விலகத் தயாராய் இல்லை," என்றார் அவர்.
விளையாட்டைத் தவிர்த்து, நுண், ஊடகக் கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள திவ்யா பல்கலைக்கழகத்தில் கலை பயில விரும்புகின்றார்.

