பெட்ரோல், டீசல் முதலிய எரிபொருள் விலை லிட்டருக்கு மூன்று வெள்ளியைத் தாண்டிவிட்டதால் வாடகை வாகனக் கட்டணங்களும் உயர்ந்துள்ளன. இதனால், பயணம் செய்ய பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தையே பயன்படுத்துவதாகவும், பொருள்களை அதிகம் வாங்கும்போது மட்டுமே வாடகை உந்துவண்டியை நாடுவதாகவும் பலரும் குறிப்பிட்டனர்.
கிராப், டடா, ரைட் வாகனப் பகிர்வுச் செயலிகளைப் பயன்படுத்தும் முழுநேர வாடகை கார் ஓட்டுநரான திரு விக்டர் ஆல்பர்ட், கட்டண ஏற்றம் விலை உயர்வைச் சமாளிக்கவே போதுமானதாக இல்லை என்றார்.
"ஒரு நாளைக்குக் கூடுதலாக பத்து, இருபது வெள்ளி அதிகம் சம்பாதிக்கிறேன். இருந்தாலும், அப்பணம் எரிபொருள் விலையேற்றத்தைச் சமாளிக்கவே செலவாகிவிடுகிறது," என்றார் திரு விக்டர்.
பகுதிநேரமாக கிராப் ஃபுட் விநியோக ஓட்டுநராகப் பணியில் சேர்ந்துள்ள இளையர் ஸ்ரீராம் பாலசுப்ரமணியம், ஒவ்வொரு தருவிப்பு ஆணைக்கும் இப்போது ஒரு சில வெள்ளி கூடுதலாக பணம் கிடைப்பது கைச்செலவிற்கு உதவுவதாகச் சொன்னார்.

