வெர்டன் சாலைக் கட்டடத்தில் முஸ்தபா நகைக்கடை அமைய உள்ளது. முன்பு முஸ்தஃபா டிராவல்ஸ் செயல்பட்ட 'ஸ்பா பில்டிங்' கட்டடம் புதுப்பிப்புப் பணிகளோடு மேம்படுத்தப்பட்டு வருகிறது.
"கிட்டத்தட்ட மூன்று மாத காலத்தில் இந்த இடத்தில் புதிய நகைக்கடை தயாராகிவிடும். முன்பு போலவே நாணய மாற்றுப் பிரிவும் இங்கு இருக்கும்," என்று தெரிவித்தார் முஸ்தபா சென்டரின் உரிமையாளரான திரு முஸ்தாக் அகமது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் சுற்றுலாத் துறை மோசமான பாதிப்பைச் சந்தித்தபோது முஸ்தபா டிராவல்ஸ் சிறிது காலத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
பயண முகவர் சேவையை மீண்டும் முஸ்தபா சென்டரின் ஒரு பகுதியில் திறப்பதற்கு திட்டம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமானப் பயணச்சீட்டு, சுற்றுலா சேவைத் தொகுப்பு ஆகியவற்றுடன் விசா சேவையையும் முஸ்தபா டிராவல்ஸ் வழங்கி வந்தது. அத்துடன், இந்தியாவிற்கு பணம் அனுப்பும் சேவையும் இங்கு வழங்கப்பட்டது. தொடக்கத்தில் பெரிய அளவில் செயல்பட்டு வந்த முஸ்தபா டிராவல்ஸ், விமான நிறுவனங்களின் நேரடி இணையச் சேவைகளால் அதன் வளர்ச்சி படிப்படியாகக் குறையத் தொடங்கியது.
"இச்சேவைகளை இணையத்தின் மூலம் பலரும் நாடுவதால் முஸ்தபா டிராவல்சுக்கான தேவை மிகவும் குறைந்துவிட்டது, கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில் பயண முகவர் சேவைகளுக்கான தேவை கிட்டத்தட்ட இல்லாமலே போய்விட்டது, " என்றும் திரு முஸ்தாக் கூறினார்.
எண் 5, வெர்டன் சாலையில் உள்ள முஸ்தபா டிராவல்ஸ் கட்டடம் 1986ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 894 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இது ஏழு மாடிகளைக் கொண்டது.
வணிகம் மற்றும் குடியிருப்புப் பயன்பாடுகளுக்காக இயங்கி வந்த இக்கட்டடத்தில் முஸ்தபா ஏர் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடட் 1989ல் ஆண்டில் தொடங்கப்பட்டது. வெர்டன் சாலையில் இருக்கும் இக்கட்டடம் தற்போது புதிய மாற்றங்களுடன் புதுப்பிக்கப்படுகின்றது. முஸ்தபா சென்டரின் கீழ்த்தளத்தில் இருப்பதுபோல தங்கம், ஆபரணப் பிரிவு இங்கும் அமைக் கப்படுகிறது.
கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் தளர்த்தப்பட்டதால் சுற்றுப்பயணிகள் சிங்கப்பூருக்கு வரும் விகிதம் அதிகரித்து வரும் நிலையில், பல வணிகங்களும் மெல்ல மெல்ல தலைதூக்குகின்றன. முஸ்தபா நிறுவனமும் விரிவாக்கம், மேம்பாட்டுப் பணிகளுடன் வணிகத்தைப் பெருக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
தற்போது காலை 9.30 மணி முதல் இரவு 11.30 மணிவரை திறந்திருக்கும் முஸ்தபா சென்டர், செயல்படும் நேரத்தை மேலும் கூட்டவுள்ளது.
ஜூலை 1ஆம் தேதி முதல் பின்னிரவு 2 மணிவரை அதிக நேரம் கடை திறந்திருக்கும் எனக் குறிப்பிட்டார் முஸ்தபா சென்டரின் மனிதவள மேலாளரான திரு முகம்மது கவுஸ்.
1971ஆம் ஆண்டு கேம்பல் லேனில் சிறிய கடையாகத் தொடங்கப்பட்ட முஸ்தபா நிறுவனம், 1985ல் சிராங்கூன் பிளாசாவுக்கு இடம் மாறி முதல் பகுதிவாரிக் கடையைத் திறந்தது. 1995ல் சையத் ஆல்வி ரோட்டில் முஸ்தபா சென்டர் பேரங்காடியாக திறக்கப்பட்டது. 1999ல் இணைய வணிகத்தைத் தொடங்கிய முஸ்தபா, 2003 முதல் 24 மணிநேரமும் இயங்கி வந்தது.
லிட்டில் இந்தியா வட்டாரம் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இங்கு வந்துசெல்லும் மக்களுக்குப் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வசதிகளும் மாற்றங்களும் என்னென்ன என்று அவ்வப்போது படம்பிடித்து வாசகர்களுக்குத் தரும் முரசின் முயற்சி இந்தப் பதிப்பில் தொடங்குகிறது.