லிட்டில் இந்தியா செல்லும் நம்மில் எத்தனை பேர் பஃப்ளோ ரோடு நுழைவாயில் அருகில் அமைந்திருக்கும் நீலநிற மரபுடைமை குவிமாடத்தைப் பார்த்திருப்போம்?
புகைப்படங்கள், வரைபடங்கள் நிறைந்த பலகைகளில் லிட்டில் இந்தியாவின் வரலாறு இந்தக் குவிமாடத்தில் சுருக்கி எழுதப்பட்டிருக்கும். தஞ்சோங் பகார் சமூக மன்ற ஏற்பாட்டில் இது உருவானது.
வேற்று இனத்தவரும் இங்கு உள்ள வரலாற்றுத் தகவல்களைப் படித்துப் பயன்பெறுகிறார்கள். சிங்கப்பூரின் பல இன, பல சமய கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் விதமாக நம் முன்னோர்கள் எப்படி ஒற்றுமை யாக வாழ்ந்தார்கள் என்னும் விவ ரங்களை இந்தக் குவிமாடத் தகவல் பலகைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
இந்தக் குவிமாடத்தை அறிந்தோரிடம் தமிழ் முரசு கருத்து திரட்டியது. தேக்காவிற்கு அவ்வப்போது வந்துசெல்லும் ரா.ரேக்கா, 42, என்பவர், மழை அல்லது வெயிலுக்கு ஒதுங்க இடம் தேடியபோது இந்த மண்டபத்துக்கு வந்ததாகக் கூறினார்.
காத்திருக்கும் சிறுநேரத்திலும் லிட்டில் இந்தியாவைப் பற்றிய வரலாற்றைத் தெரிந்துகொள்வது நேரம் பயனுள்ள வழியில் கழிக்க உதவுகிறது என்றார் அவர்.
குவிமாடக் காட்சிப் பலகைகளில் உள்ள விவரங்களைப் படித்த பின்னர், தேக்கா பற்றிய பல தகவல்களை அறிந்துகொண்டதாக நூர் சயாஃபிகா, 19, என்பவர் தெரிவித்தார். எழுத படிக்கத் தெரியாதவர்கள்கூட லிட்டில் இந்தியா மரபுடைமைத் தகவல்களை இங்குள்ள படங்கள் மூலம் எளிதாக அறிந்துகொள்ளலாம் என்றார் ஜெய்னோம் ஷேக், 65.

