மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்ட மகனுக்காக தம் முழுநேர ஆசிரியர் பணியை ராஜேந்திரன் கு சேதுராஜ், 56, கைவிட்டார்.
"என்னுடைய முழு கவனத்தையும் மகனின் மீது செலுத்தி, என் மொத்த வாழ்க்கையையும் அவரைச் சுற்றித் திட்டமிட்டுக்கொண்டேன். மகனின் தேவைகளை முன்னிலைப்படுத்தி நான் இன்றுவரை மனஉறுதியுடன் வாழ்ந்து வருகிறேன்," என்று கூறினார்.
மகன் கிருஷ்ணாவுக்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரின் மாறுபட்ட நடவடிக்கைகளைக் கண்டு சந்தேகித்து மதியிறுக்க மதிப்பீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
மதியிறுக்கக் குறைபாடு உறுதிசெய்யப்பட்டதை அறிந்த பெற்றோர், மனமுடைந்து போனார்கள்.
"எங்கள் கிருஷ்ணாவுக்கு மதியிறுக்கக் குறைபாடு உள்ளது என்பதை ஏற்க மனம் மறுத்தது. இருந்தபோதிலும் பேச்சுத்திறன் சிகிச்சை, இசை மூலம் சிகிச்சை, இயக்கத்திறன் சிகிச்சை போன்ற சிகிச்சை முறைகளை மகனுக்குக் குறைபாடு கண்டறியப்பட்ட முதல் மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டோம். அது எங்களுக்குப் பெரிதும் பலனளித்தது," என்று கூறினார்.
மகன் எட்டு வயதாக இருந்தபோது இவர்களுக்கு மகள் பிறந்தார். மற்றப் பிள்ளைகள் போல் ஏன் தன் அண்ணன் இல்லை என்ற மகளின் ஐயப்பாட்டை அந்தச் சிறு வயதில் புரியவைக்கப் பெற்றோருக்குச் சிரமமாகவும் இருந்தது. எட்டு ஆண்டுகளாக தனக்கென இருந்த இடத்தை பங்குபோட வந்த தங்கை மீது பொறாமைப்பட்ட மகனுக்கு நிலைமையைப் புரியவைப்பதும் சவாலாக இருந்தது.
"ஆரம்பத்தில் குடும்பத்தார் ஆதரவுடன் நானும் என் மனைவியும் வேலைக்குச் சென்றுகொண்டே பிள்ளைகளை ஒருவாறு சமாளித்து வந்தோம். நாளடைவில் மகன் பருவமடைந்த வேளையில் அவருடைய குணாதிசய மாற்றங்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. அவருக்குக் கூடுதல் கவனம் தேவைப்படுவதை உணர்ந்து எங்களில் இருவரில் நான் பணி விலகுவதே மகனைப் பராமரிக்க ஏதுவாக இருக்கும் என்று முடிவு செய்தோம்," என்றார்.
இருப்பினும் தங்கள் மகன் துவண்டுபோகாமல் வாழப் பல பயிற்சிகளை அளித்து வருகிறார். திறன்பேசி செயலிகளைப் பயன்படுத்திச் சுயமாகப் பயணம் மேற்கொள்ளவும் வேண்டிய உணவை விநியோகச் சேவை மூலம் பெற்றுக்கொள்ளவும் அவர் கற்றுக்கொடுத்திருக்கிறார். யாரையும் சார்ந்திராமல் தனித்து வாழும் திறன்களை மகனிடம் வளர்த்து வருகிறார் திரு ராஜேந்திரன்.
'சர்விங் பீபிள் வித் டிஸ்ஸெபிலிட்டி' என்னும் உடற்குறை உள்ளவர்களுக்கான சேவை அமைப்பில் தற்சமயம் பயிற்சி பெற்றுவரும் இவருடைய மகன் கிருஷ்ணா, 23, இன்னும் சில மாதங்களில் ஒரு தனியார் நிறுவனத்தில் பொட்டலமிடும் பணியில் சேரவிருக்கிறார்.
"என் மகனிடம் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. என் பணியையும் தனிப்பட்ட வளர்ச்சியையும் துறந்ததன் பயனாக இவற்றை என்னால் காண முடிகிறது. என் மகனின் நல்வாழ்வுதான் என் வாழ்க்கைவின் அடையாளம்," என்று பெருமிதத்துடன் கூறினார் இந்த முன்மாதிரித் தந்தை.