தமக்கென இருந்த வாழ்க்கை இலட்சியங்களைத் தம் மகனுக்காக விலக்கி வைத்தார் ஆனந்த் லால், 52.
நிறுவனம் ஒன்றின் சுகாதாரப் பிரிவில் திட்ட நிர்வாகியாக தமது பயணத்தைத் தொடங்கிய அவர், 'அப்ராக்ஸியா', 'டிஸ்ப்ராக்ஸியா' ஆகிய நரம்பியல் தொடர்பான கற்றல் குறைபாடுகள் உள்ள மகனுக்கு அதிக நேரத்தை ஒதுக்கிட, தம் வேலையை விட்டார்.
தம் பணியில் முன்னேறிச் சாதிக்க வேண்டுமென விரும்பிய ஆனந்த், மகன் ஐந்து வயதாக இருந்தபோது அவரின் குறைபாடுகளைப் பற்றி அறிந்துகொண்டார். அப்போது அவருக்கும் அவரின் மனைவிக்கும் இடியே விழுந்ததுபோல் இருந்தது.
மகன் க்ரிஷுக்குக் கற்றலின்போது பல சிக்கல்கள் ஏற்பட்டபோது அவருக்குத் தகுந்த உதவியை வழங்கி இன்றுவரை முடிந்த அளவுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றனர் அவர்கள்.
தம் 13வது வயது முதல் 'மைண்ட்ஸ் டௌனர் கார்டன்' பள்ளிக்குச் செல்லும் 16 வயது க்ரிஷ், சக மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் குடும்ப உறுப்பினர்களோடும் பணிவன்புடன் பழகுவதற்குச் சில முக்கிய மனிதர்களைச் சுட்டிக்காட்டியுள்ளார், ஆனந்த்.
இயக்கத்திறன் சிகிச்சையாளர், உடற்பயிற்சி சிகிச்சையாளர், பேச்சுத்திறன் சிகிச்சையாளர், பாடங்கள் எழுதுவதற்கு உதவுபவர், இல்லப் பணிப்பெண் என பலரிடமிருந்து க்ரிஷ் ஆதரவும் உதவியும் பெற்று வருகிறார்.
க்ரிஷ் போன்றவர்களுக்கு நேரத்தைத் திட்டமிட உதவ வேண்டும் என்று கூறிய ஆனந்த், அன்றாடப் பணிகளைப் பழக்கப்படுத்திக்கொண்டால் அவர்களின் தினசரி வாழ்க்கை மேலும் சுமுகமாக அமையும் என்று நம்புகிறார்.
தற்போது 'மைண்ட்ஸ் டௌனர் கார்டன்' பள்ளியில் ஆனந்த் நீச்சல் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிவதுடன் செயலி விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார்.
"பல்வேறு குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கு நீச்சல் கற்றுக்கொடுக்கும்போது எனக்குக் கிடைக்கும் இன்பத்தை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
"என் மகனைப் போல சவால்களைச் சந்திக்கும் இப்பிள்ளைகள், என்னிடம் காட்டும் அன்பு வேறு எங்குமே கிடைக்காதது," என்றார் ஆனந்த்.
மகனின் தேவைகளுக்கு ஏற்பத் தம் சொந்த வாழ்க்கையைத் திட்டமிட்டுள்ள ஆனந்த், தம் இலக்குகளை வெகுகாலத்திற்குத் தள்ளிப்போட்டிருந்தாலும் இன்று அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாகக் கூறுகிறார்.