லிட்டில் இந்தியா வட்டாரம் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. இங்கு வந்துசெல்லும் மக்களுக்குப் புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வசதிகளும் மாற்றங்களும் என்னென்ன என்று அவ்வப்போது படம்பிடித்து வாசகர்களுக்குத் தரும் பகுதி இது.
யுகேஷ் கண்ணன்
மக்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் துறைகளில் ஒன்றாக விளங்கும் முடி திருத்தும் துறை காலம் உள்ளவரை நிலைத்திருக்கும். முடி திருத்தம் என்பது ஒருவரின் தோற்றத்தையே மாற்றக்கூடியது.
லிட்டில் இந்தியா வீதிகளில் புகழ்பெற்ற நடிகர்களின் புகைப் படங்கள், தமிழ்ப் பாடல்கள், அரசியல், ஊர்ப் பேச்சு என்றிருந்த முடி திருத்தகங்கள், இன்று வண்ணச் சுவர்கள், இனிமையான மெல்லிசை, சொகுசான இருக்கைகள் என்று மாற்றம் கண்டுள்ளன.
இன்று லிட்டில் இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட முடி திருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.
அப்பர் டிக்சன் சாலையில் தமது மகனின் ஆலோசனைப்படி 'தி மெட்ராஸ் பார்பர்ஸ்' கடையை கடந்த ஆண்டு தொடங்கினார் 63 வயது திரு கோதண்டராமன் சேகர்.
எண்ணெய், எரிவாயுத் துறையில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்த திரு சேகர், ஓய்வுபெற்ற பின்பு சொந்தத் தொழில் தொடங்கத் திட்டமிட்டபோது, முடிதிருத்தும் சேவையைத் தொடங்கு மாறு அவரது மகன் ஊக்குவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள முடி திருத்த நிலையங்களின் பிரபல அம்சங்களை தமது கடையில் அறிமுகப் படுத்தினார் திரு சேகர். அதே நேரத்தில் நியாயமான விலையில் தரமான சேவையை வழங்க வேண்டும் என்றும் அவர் எண்ணினார்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அவர் கடையைத் தொடங்கியபோது கொவிட்-19 கிருமிப் பரவல் கட்டுப்பாடுகளால் பல சவால்களை எதிர்நோக்கினார்.
வெளிநாடுகளிலிருந்து முடி திருத்துநர்களை வேலைக்கு எடுப்பது அவற்றில் ஒன்று. சிங்கப்பூர் இந்தியர்களிடம் முடிதிருத்தும் பணிக்கு அதிக மதிப்பு இல்லாததால், இத் துறையில் பணியாற்ற பலரும் விரும்புவதில்லை என்றார் திரு சேகர்.
பணியாளர்கள் கிடைக்காததால் பகுதிநேர ஊழியர் ஒருவருடன் இவர் கடையைத் தொடங்கினார்.
ஆனால், அது நிரந்தரத் தீர்வாக அமையவில்லை. மேலும் கொவிட்-19 கிருமித்தொற்று காலகட்டத்தில், தேக்காவில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், தொழில் மந்தமாக இருந்தது.
விதிமுறைகள் தளர்த்தப்பட்ட பின் தேக்காவில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. இருப்பினும் கடையின் மாறுபட்ட தோற்றத்தைப் பார்த்து, சிலர் சேவைக் கட்டணம் அதிகமாக இருக்கும் எனத் தயங்கினர்.
சாதாரண முடிதிருத்தும் சேவை களுக்கு $8 கட்டணம் என்ற விளம்பரத்தை கண்ணில்படும்படி வெளியில் வைத்தபின்னர் மெல்ல மெல்ல வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினர்.
மலேசியா, இந்தியா போன்ற நாடு களிலிருந்து முடி திருத்துநர்களை திரு சேகர் பணியில் அமர்த்தினார்.
குறைந்த விலையில் நிறைந்த சேவையை வழங்குவதாக வாடிக்கையாளர்கள் கருதுவதால் அவர்கள் தொடர்ந்து தமது கடைக்கு வருவதாக திரு சேகர் கூறினார்.
தற்போது இரண்டு வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் கடைகளை நடத்தி வரும் இவர், புதிதாக இரண்டு கிளைகளையும் தொடங்கியுள்ளார்.
லிட்டில் இந்தியாவில் மேற்கத்திய பாணி வடிவமைப்பிலான மற்றொரு முடிதிருத்தும் கடை, டன்லப் ஸ்திரீட்டில் உள்ள 'எச்1 லூக்ஸ்'.
கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட இக்கடையில் சாதாரண முடிதிருத்தும் சேவைக்கு கட்டணம் $8 முதல் $10 வரை. மற்ற சிறப்புச் சேவை களுக்கு கட்டணம் மாறுபடுகிறது.
இத்துறையில் தமது முதலாளிக்கு பெரிதும் அனுபவம் இல்லாத போதிலும், கடையின் தோற்றத்தைச் சிறப்பாக வடிவமைத்துள்ளார் என்று தலைமை முடிதிருத்து நர் திரு குணசேகரன், 42, குறிப்பிட்டார்.
வழக்கமான வாடிக்கையாளர்களில் சிலர் வாரத்திற்கு ஒரு முறை, அல்லது மாதத்திற்கு இரு முறை முடி திருத்த வருவார்கள் என்றார் திரு குணசேகரன்.
தங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் மலேசியர்கள் என்ற அவர், சிங்கப்பூர்-மலேசியா எல்லை திறக்கப்பட்டவுடன் வியாபாரம் சற்று மந்தமடைந்துள்ளதாகக் கூறினார்.
லிட்டில் இந்தியாவில் தற்போது ஏழு கிளைகளுடன் செயல்பட்டு வரும் 'ஜெய் & ஜெய்' அழகு நிலையத்தின் மேலாளர் திரு சுந்தரம் ஜெயராம், 38, தமது கடை களுக்கு பெரும்பாலும் வெளிநாட்டு ஊழியர்கள் வந்து எளிய முடி திருத்த பாணியைக் கோருவதாகக் குறிப்பிட்டார். எனினும், பல இளையர்கள் நுணுக்கமான சிகை அலங்கார பாணியை விரும்பி கேட்கும் போக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இத்தகைய கடைகளில் பணிபுரிபவர்கள் இந்தியர்களின் முடியைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பதால், தம்மைப் போன்ற இளையர்கள் விரும்பும் 'ஃபேட்', 'அண்டர்க்கட்', 'குயிஃப்', 'போம் படோர்' போன்ற சிகை அலங்காரச் சேவைகளை நன்கு வழங்குகின்றனர் என கூறினார் சிகை அலங்காரம் செய்துகொள்வதில் மிகுந்த விருப்பம் கொண்டுள்ள 21 வயது அமீர் சோஹைல்.
இக்கடைகளில் அவர் விரும்பும் சேவைகளுக்கான கட்டணங்கள் கட்டுப்படியாக உள்ளதோடு கடையின் சூழல் வசதியானதாகவும் இருப்பதால் தொடர்ந்து அவற்றின் சேவைகளை நாடுவதாக அவர் தெரிவித்தார்.
பாரம்பரிய சிகை அலங்கார கடைகளில் முடிதிருத்துநர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருப்பதால் இளையர்கள் விரும்பும் சேவைகளை வழங்க சிரமப்படுவதாகவும் பல நேரங்களில் அத்தகைய முடி திருத்தப் பாணிகளை வழங்க தேவையான கருவிகள் அவர்களது கடைகளில் இருப்பதில்லை என்றும் அவர் கூறினார்.
எட்டு ஆண்டுகளாக ரேஸ் கோர்ஸ் சாலையில் இயங்கும் 'தி கோல்டன் ரூல்' முடிதிருத்தகம், மேற்கத்திய இசைக்குழுக்களின் சுவரொட்டிகள், வாகன எண் பலகைகள், ஸ்கேட்போர்டுகள், மிதிவண்டிகள் என இன்றைய ரசனைக்கேற்ப 'பழமையில் புதுமையோடு' வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கடையில் முடி திருத்தச் சேவைகளின் தொடக்கக் கட்டணம் $38. இச்சேவையில் முடி திருத்தத்துடன் இதமான சூட்டிலான துண்டுடன் தசைத் தளர்த்தலும் செய்யப்படுகிறது.
கடை தொடங்கிய வேளையில் வாடிக்கையாளராக இக்கடைக்கு வந்த 29 வயது சிவகுரு ராஜாக்கண்ணுக்கு கடையின் சூழல் பிடித்துப் போனது. அதனால் இங்கு தனது வேலைப் பயிற்சியைத் தொடங்கினார். தலைமுடி, ஒப்பனைப் பொருள்களில் ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு இப்பணியின் மீது ஆர்வம் ஏற்பட்டதால், அதில் முழு நேரமாக இணைந்தார்.
எட்டு ஆண்டுப் பணியில், வாடிக்கையாளர் சேவையில் தாம் பெற்ற மாறுபட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட திரு சிவகுரு, தலையின் வடிவத்தையும் தலைமுடி வகையையும் கண்டறிந்து அதற்கு ஏற்ற முடி திருத்த பாணியைக் கண்டறிவது சுலபமல்ல என்றார்.
வாடிக்கையாளர்களில் பலர் விரும்பும் 'ஃபேட்' எனப்படும் 'சிறப்பு சிகை அலங்காரச் சேவையை வழங்க சிறப்புக் கருவிகள் தேவைப்படுகின்றன. அதனுடன் அதைத் தரமாகச் செய்து முடிக்க 45 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை எடுக்கும் என்று அவர் சொன்னார்.
மேற்கத்திய நட்சத்திரங்கள், பிரபல காற்பந்தாட்ட வீரர்கள் ஆகியோரின் சிகை அலங்காரப் பாணியை பின்பற்ற வாடிக்கையாளர்கள் விரும்புவதால், அது போன்ற நுணுக்கமான சேவைகளை வழங்க கூடுதல் கட்டணம் வசூலிக்கப் படுவதாகத் திரு சிவகுரு கூறினார்.

