தம் தாயாரின் உந்துதலால் தாதிமைத் துறையை ஒரு கை பார்க்கலாம் என களமிறங்கிய ஸ்ரீவித்யா ஜெயகோபாலன், 37, சீமெய்யில் உள்ள தொழில்நுட்ப கல்விக் கழகக் கிழக்குக் கல்லூரியில் தாதிமைப் பயணத்தைத் தொடங்கினார். 15 ஆண்டு அனுபவத்தோடு தற்போது கூ டெக் புவாட் மருத்துவமனையில் தலைமைத் தாதியாக பணிபுரியும் ஸ்ரீவித்யா, நினைவாற்றல் இழப்பு நோயால் அவதியுறு வோருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்.
பாரம்பரிய விளையாட்டுகள், வண்ணம் தீட்டுதல், இசைவழி மனநல உதவி போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் இந்நோயாளிகளை ஈடுபடுத்தியுள்ளார். மருத்துவ
மனையில் சில மாதங்களுக்கு மட்டும் தங்கினாலும் அவர்களுக்கு வீட்டில் கிடைக்கும் சுகமான வாழ்வைப்போல மருத்துவ
மனையிலும் அமைத்துக் கொடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கிறார் இவர்.
நோயாளிகளுக்கு கட்டுப்பாடற்ற பரா
மரிப்பு சேவை வேண்டுமென குரல் கொடுக்கும் ஸ்ரீவித்யா, கடந்த பத்து ஆண்டு
களாக எளிதில் ஆபத்தில் சிக்கும் நோயாளிகளுக்கு தரமான பராமரிப்பை அளிப்பதில் பெருமை கொள்கிறார். பல நோயாளி களோடு பழக வாய்ப்பளிப்பதோடு தாதியாகப் பணிபுரிவதை மனநிறைவளிக்கும் ஓர் உன்னத சேவையாக எண்ணுகிறார் ஸ்ரீவித்யா. இந்த வேலையில், உள்ளத்தை உருக்கும் பல அனுபவங்களும் இவருக்குக் கிடைத்தன.
கொவிட்-19 கிருமித்தொற்று சிங்கப்பூரை உலுக்கியபோது நோயாளிகளின் உறவினர்கள் செய்வதறியாது திக்குமுக்காடிய நிலையை விவரித்த இவர்,"தங்களுக்கு நெருக்கமானவர்களை நேரடியாக சந்திக்க முடியாததால் நோயாளிகளின் உறவினர்கள் எங்களிடம் எரிச்சலுடன் பேசிய நாள்களும் இருந்தன. அனைத்தையும் பொறுத்துக்கொண்டு மெய்நிகர் முறையில் ஸூம் தளத்தில் நோயாளிகள் உறவினர்களோடு உரையாட நானும் சக தாதியரும் ஏற்பாடு செய்தோம்," என்றார்.
"தாதிமைப் பணியை நான் சுமையாகப் பார்க்கவில்லை, சுகமாகப் பார்க்கிறேன்," என்று பெருமையுடன் கூறும் ஸ்ரீவித்யா, சிறந்த தாதியரை அங்கீகரிக்கும் சுகாதார அமைச்சின் விருது பெற்ற 125 தாதியருள் ஒருவர்.