மக்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் ஆர்வம் கொண்டதால் அவர்களுக்கு உதவும் வகையில் பணிபுரிய எண்ணிய திருமதி சீத்தா சின்னத்தம்பி, 53, தாதிமைத் துறையைத் தேந்தெடுத்தார்.
தேசிய புற்றுநோய் நிலையத்தில் நோயாளி பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்தபோது தம் பணியில் சிறந்து விளங்கியதால் அந்த நிலையம் 'பிளேஸ் அண்ட் டிரெய்ன்' என்னும் பயிற்சித் திட்டத்தின்கீழ் தாதிமைப் படிப்பை மேற்கொள்ள இவருக்கு நிதி ஆதரவு தந்தது. தொடக்கத்தில் இத்துறையைப் பற்றி பெரிதாக எதுவும் தெரியாத நிலையில் தமது மேலாளர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் உதவியுடன் 2008ஆம் ஆண்டு தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் தாதிமைக் கல்வி பயின்றார். தற்போது, தேசிய புற்றுநோய் நிலையத்தில் நடமாட்ட நோயாளி (ஆம்புலேட்டரி) பராமரிப்புப் பிரிவில் முதன்மைத் தாதியாக சேவையாற்றுகிறார் திருமதி சீத்தா.
நோயாளிகளுக்கு தரம்வாய்ந்த பரா
மரிப்புச் சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக உழைக்கும் இவர், தாதியர் விரைவாகவும் சிறப்பாகவும் பணிகளைச் செய்துமுடிக்க புதிய உதவிக்குறிப்புகளை சக தாதியருக்கு அறிமுகம் செய்துள்ளார் உதாரணமாக, எந்த நோயாளிக்கு முதலில் சோதனை செய்ய வேண்டும், எந்த நோயாளியை எந்த இருக்கையில் கண்டுபிடிக்கலாம், ஒவ்வொரு நோயாளியின் கீமோ சிகிச்சையும் எந்த நேரத்தில் நடக்கவுள்ளது போன்ற தகவல்களைச் சேகரித்து சிறிய தாளில் எழுதும் முறையைத் தொடங்கினார். இதனால் நோயாளிகளின் தேவைகளை விரைவாகப் புரிந்துகொண்டு மருத்துவர் களால் உடனடியாக உதவவும் முடிகிறது என்கிறார் சீத்தா.
வேலைக்கு அப்பால் புற்றுநோய்ச் சங்கத்தில் அவ்வப்போது தொண்டூழியம் செய்யும் சீத்தா, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த அச்சங்கத்தின் ஒரு சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்.
"100 நோயாளிகளை மகிழ்விக்க முடியாவிட்டாலும், ஒரு நோயாளியின் முகத்திலாவது புன்னகை பூக்க நான் காரணமாக இருந்தால் எல்லையில்லா ஆனந்த
மடைவேன்," என்கிறார் இவர்.
நோயாளிகள், நோயாளிகளை பரா
மரிப்பவர்கள் ஆகியோரின் மனங்களை வென்றுள்ள சீத்தா, 2017ஆம் ஆண்டு சிங்கப்பூர் சுகாதார தரச் சேவைக்கான வெள்ளி விருதுடன் 2021ஆம் ஆண்டு தேசிய புற்றுநோய் நிலையத்தின் சிறந்த முன்மாதிரி விருதையும் பெற்றார். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 'என்ரோல்ட்' தாதிமைப் பிரிவில் சிறந்த தாதிமைக்கான விருதையும் இவர் கடந்த வாரம் பெற்றார்.