கனவு நிறைவேறியது: கமலா வேலு
சிறு வயதிலிருந்தே முடிந்தளவுக்கு ஏராளமான மக்களுக்கு உதவ வேண்டும் என்ற கனவை நனவாக்க விரும்பினார் கமலா வேலு, 52.
சிங்கப்பூரின் அந்தக் கால கம்பத்தில் தமது பிள்ளைப் பருவம் அமைந்ததால் ஒருவருக்கு மற்றொருவர் கேட்காமலேயே உதவும் வழக்கத்தைப் பார்த்து வளர்ந்தார் கமலா. இதனை தமது சொந்த வாழ்க்கையிலும் பின்பற்றியதால் இவரின் தந்தை இவரை தாதிமைத் துறையில் ஈடுபட உற்சாகமூட்டினார். இவ்வாறு தொடங்கியதுதான் கமலாவின் தாதிமைக் கல்வி.
1989ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின்கீழ் தாதிமைப் பள்ளியில் சேர்ந்து, மூன்றாண்டு படித்த பிறகு அலெக்சாண்ட்ரா மருத்துவமனையின் குழந்தைகளுக்கான அவசரநிலைப் பிரிவில் (ரெஜிஸ்டர்ட்) தாதிமைப் பணியைத் தொடங்கினார் கமலா. இவரது தாதிமைப் பயணத்தில் சந்தித்த பல அனுபவங்களில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவர்களையும் தாதியரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் திருவண்ணாமலைக்கு மருத்துவ உதவிப் பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. கமலாவின் சுயமுயற்சியால் நடைபெற்ற இப்பயணத்தில் திருவண்ணாமலை மருத்துவக் குழுவும் சிங்கப்பூர் மருத்துவக் குழுவும் ஒன்றிணைந்து அங்குள்ள மக்களுக்கு இலவச கண் சிகிச்சை செய்தனர்.
அந்த மருத்துவ முகாமில் அளிக்கப்பட்ட கண் சிகிச்சைக்குப் பிறகு தங்களால் தெளிவாகப் பார்க்கமுடிகின்றது என அப்போது பலரும் குறுந்தகவல் அனுப்பினர். இதை அறிந்த கமலாவிற்கு, தமது சின்னஞ்சிறு முயற்சிகளால் சமுதாயத்திற்கு பலனளிக்க முடிகின்றது என்று நிம்மதியடைந்தார். அதன் காரணமாக, இப்பயணத்தை ஒவ்வோர் ஆண்டும் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை இவருக்குள் வேரூன்றியது.
தற்போது இங் டெங் ஃபோங் மருத்துவ
மனை அவசரநிலைப் பிரிவு தாதிமை மேலாளராகப் பணிபுரியும் கமலா, தமது 30 ஆண்டு அனுபவத்தில் பிறப்பு, இறப்பு, பிறப்புக்கும் இறப்புக்கும் நடுவே நோய்களுக்கு ஆளாகும் மனிதர்கள் என பல்வேறு அம்சங்களிலும் தாதிமைத் துறைக்கு இருக்கும் முக்கியத்துவத்தை அறிந்த கமலா, இன்றுவரை அச்சேவையில் திறம்பட ஈடுபட்டு வருகிறார்.
மிதமிஞ்சிய உழைப்பு: பிரவீன் கோர்
கடந்த 20 ஆண்டுகளாக தாதிமைத்துறையில் ஈடுபட்டு வரும் பிரவீன் கோர், 40, தற்போது நீரிழிவு நோய்க்கான கல்வியாளராகவும் தாதியருக்கான வழிகாட்டியாகவும் இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் நீரிழிவு, உட்சுரப்பியல் மருத்துவப் பிரிவில் பணியாற்றுகிறார்.
நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தாதிமைப் பட்டயப்படிப்பின்கீழ் நீரிழிவு நோய்க் கட்டுபாடு பற்றி கற்றுக்கொண்ட பிரவீன், கிரிஃபித் பல்கலைக்கழக சுகாதார சேவை பராமரிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றார். மக்களுக்கு சேவைபுரிவதில் தீவிர ஈடுபாடு கொண்டிருக்கும் இவர், தாதிமைத் துறை வழியாக நோயாளிகளுக்கு ஆதரவளித்து அவர்களின் துயரங்களைக் குறைக்க தன்னால் இயன்ற அளவு முயற்சிக்கிறார்.
கொவிட்-19 காலகட்டத்தின்போது சமூகப் பராமரிப்பு சேவைக் குழு ஒன்றில் சேர்ந்த பிரவீன், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் பணியில் ஈடுபட்டார்.
"சமூகப் பராமரிப்பு சேவையில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டை மேம்படுத்துவதில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்களிப்பை நேரில் கண்டேன்," என்றார் இவர்.
கொவிட்-19 காலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோது அதைச் சமாளிக்க தாதியர் தங்களின் சக்திக்கு மீறி உழைத்ததாகவும் பிரவீன் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பம் அவசியம்:
சுபாஷினி அங்குசாமி
தாதிமைத் துறையில் தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் வளர முடியும் என்று நம்பியதால் தாதியாக வேண்டும் என்று தீர்மானித்தார் சுபாஷினி அங்குசாமி, 43.
இந்தியாவில் தாதிமைப் படிப்பை மேற்கொண்ட இவர், சிங்கப்பூரில் தாதிமைக் கல்வியில் முது
கலைப் பட்டத்தைப் பெற்றார். தமது பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த சுபாஷினிக்கு இத்தாலியின் வெரொனாவிற்கு செல்லும் வாய்ப்பை இங் டெங் ஃபோங் மருத்துவமனை அளித்திருந்தது.
அவர் அங்கு 'எபிக்' என்னும் மென்பொருளைக் கற்றுகொள்ள 2013, 2017ஆம் ஆண்டுகளில் சென்றார். இந்த மென்பொருளைப் பயன்படுத்தும்போது தாதியராலும் மருத்துவர்களாலும் ஒவ்வொரு நோயாளியின் அன்றாடத் தேவைகளையும் அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளையும் புரிந்துகொள்ள முடிகின்றது. நோயாளிகளின் மருத்துவக் கவனிப்புத் தகவல்களைச் சேகரித்து தரப்படுத்தும் இம்மென்பொருளின் அவசியத்தைப் புரிந்துகொண்டதால், சிங்கப்பூர் திரும்பிய பின்னர் தமது மருத்துவமனையிலுள்ள மற்ற தாதியருக்கும் அதனைக் கற்றுத்தந்தார் சுபாஷினி.
சிங்கப்பூரிலேயே இம்மென்பொருளைப் பயன்படுத்தும் முதல் மருத்துவமனையாக இங் டெங் ஃபோங் அமைந்தது. இன்று நாடு முழுவதும் 'எபிக்' மென்பொருளை தாதியர் பயன்படுத்துகின்றனர்.