அருணா கந்தசாமி
எங்கெங்கு காணினும் கடைகள், திரும்பிய திசையெல்லாம் பொருட்குவியல்!
தேவைக்கு மிஞ்சி வாங்கிக் குவித்து, சிலமுறை பயன் படுத்தியபின் வீசி எறிவதால் புதிது புதிதாய்க் குப்பை மலை! இயற்கை வளங்களை அழித்து, செயற்கையாக நலம் பேணும் உலகில், சுற்றுச்சூழல் காக்கும் பொறுப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் விதைத்து வருகின்றன மலிவு விலைக் கடைகள்.
அண்மைக்காலமாக சிங்கப்பூரில் மலிவுவிலைக் கடைகள் (thrift shops), குறிப்பாக இளையர்கள் இடையே பிரபலமாகி வருகிறது.
கணினியியல் துறையில் முழு நேரமாகப் பணிபுரிந்துவரும் குமாரி ரேஷ்மா சுரேஷ்குமார், 20, சுற்றுச்சூழலுக்கு நன்மை பயப்பதால் தாம் மலிவுவிலைக் கடைகளை நாடுவதாகக் கூறினார்.
ஒவ்வொரு முறையும் ஆடைகள் வாங்க 50 வெள்ளி செலவு செய்யாமல், ஐந்தில் ஒரு பங்கு விலைக்கு வாங்குவது தமது பணப்பைக்கும் நன்மை என்றார் அவர்.
ஆனாலும், பிறந்தநாள் அல்லது பண்டிகை நாள்கள் எனில் மரபான நடைமுறை காரணமாக ஏற்கெனவே பிறர் உடுத்திய ஆடைகளை (second-hand) வாங்குவதில்லை என்றும் அவர் சொன்னார்.
மலிவுவிலைக் கடைகளுக்குச் செல்வது ஒரு நல்ல பொழுதுபோக்கு என்றும் படித்துக்கொண்டிருப்பதால் மலிவான விலையில் பொருள்களை வாங்குவது பணம் சேமிக்கவும் உதவியாக இருக்கிறது என்றும் கூறினார் தேசிய பல்கலைக்கழக மாணவி கெஜ ஷ்ரையா இராஜ்குமார், 18.
கடந்த சில ஆண்டுகளில் லிட்டில் இந்தியா வட்டாரத்தைச் சுற்றி மலிவுவிலைக் கடைகள் தோன்றி உள்ளன. கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குப் பங்களிக்க வேண்டும் என்று விரும்பும் இளையர்கள் பலர் இந்தக் கடைகளை நாடுகின்றனர்.
சிங்கப்பூரில் ஒவ்வோர் ஆண்டும் 137,000 டன் ஆடை அலங்காரப் பொருள் கழிவுகள் சேகரிக்கப்படுவதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
புவியில் வெப்பநிலை அதிகரிப்பிற்கும் இயற்கைச் சீர்கேட்டிற்கும் தேவைக்குமேல் புதுப்புதுப் பொருள்களை வாங்கிக் குவிக்கும் மிகைநுகர் போக்கிற்கும் பங்கிருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
அதிக நீர், மின்சாரம், இயற்கை வளங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடைகளை ஓரிருமுறை பயன்படுத்திவிட்டு வீசுவது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்பது குமாரி ரேஷ்மா போன்ற இளையர்களின் கருத்து.
நீடித்த நிலைத்தன்மையுடனான வாழ்க்கைமுறை ஊக்குவிப்பு
வாட்டர்லூ ஸ்திரீட்டில் செயல்பட்டு வருகிறது 'நியூ2யூ (New2U)' மலிவுவிலைக் கடை. இந்தக் கடை, சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றத்தால் முற்றிலும் தொண்டூழியர்களால் நடத்தப்பட்டு வருகிறது. விற்பனையின்மூலம் கிடைக்கும் லாபம் முழுவதும் அம்மன்றத்தின் நிகழ்ச்சிகளுக்கும் சேவைகளுக்கும் நன்கொடையாக வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவு அளிக்கும் சமயச் சார்பற்ற தங்குமிடமான 'ஸ்டார் ஷெல்டர்' தங்குமிடத்தையும் சிங்கப்பூர் மகளிர் அமைப்புகள் மன்றம் நிர்வகித்து வருகிறது.
குழந்தைகள், ஆண்கள், பெண்கள் என எல்லாப் பிரிவினருக்கும் வயதினருக்குமான ஆடைகளும் 'நியூ2யூ' கடையில் விற்கப்படுகின்றன.
"அண்மைக்காலமாக அதிகமான மாணவர்கள் எங்கள் கடைக்கு வந்து, பொருள்கள் வாங்கிச் செல்கின்றனர். பொருள்களின் விலை $4 முதல் $12 வரை என கட்டுப்படியாகும் வகையில் இருப்பதால், அவர்கள் இங்கு விரும்பி வருகிறார்கள். அவர்களில் பலர் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தாலும் இங்கு வருகிறார்கள்," என்று அந்த மலிவுவிலைக் கடையின் பேச்சாளர் தமிழ் முரசிடம் கூறினார்.
அக்கடையில் சேரும் தொண்டூழியர்கள், அதற்குமுன் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய வாழ்க்கை முறையைப் பின்பற்றாமல் இருந்தாலும்கூட அங்கு சேர்ந்த பின்னர் விழிப்புணர்வுடன் செயல்படுகிறார்கள் என்றும் அந்தப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ரேஸ்கோர்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது 'சம்திங் கோல்டு சம்திங் நியூ (எஸ்ஓஎஸ்என்)' எனும் மலிவுவிலைக் கடை. ஆடைகள், புத்தகங்கள், மின்சாதனங்கள், பொம்மைகள் போன்ற பொருள்களை அது விற்பனை செய்து வருகிறது.
'3R' கொள்கையில் தீவிரம்
பசுமை சார்ந்த கடையான 'எஸ்ஓஎஸ்என்', 3R என்று சொல்லக்கூடிய குறைவான பயன்பாடு, மறுபயன்பாடு, மறுசுழற்சி (Reduce, Reuse, Recycle) என்ற கொள்கையைத் தீவிரமாகப் பின்பற்றுகிறது.
சிங்கப்பூர் ஆங்லிக்கன் சமூக சேவை அமைப்பின் ஆதரவோடு செயல்பட்டுவரும் எஸ்ஓஎஸ்என் 1997ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கடைக்கு இன்று தீவு முழுவதும் எட்டுக் கிளைகள் உள்ளன. இந்த மலிவுவிலைக் கடை மனநலப் பிரச்சினைகளிலிருந்து மீண்டு வருவோருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி, அவர்களின் தன்னம்பிக்கை மேம்பட உதவுகிறது.
இங்கு மலிவு விலையில் பொருள்கள் கிடைத்தாலும், கொவிட்-19 கிருமிப் பரவலுக்கு முன்பு பேரம் பேசி விலையைக் குறைக்க அனுமதி இருந்தது. ஆனால், இப்போது செலவுகளைக் கட்டுப்படியாக வைத்திருக்க அந்த வசதி வழங்கப்படுவது இல்லை.
நியூ2யூ, எஸ்ஓஎஸ்என் ஆகிய இருகடைகளும் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருள்களை விற்பனை செய்கின்றன.
சுகாதாரத்தைப் பேண, அனைத்துப் பொருள்களும் முதலில் தரஆய்வு செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களும் அவற்றைச் சுத்தம் செய்துவிட்டு பயன்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வாழ்வை மாற்றிய பயணம்
நீடித்த நிலைத்தன்மையான வாழ்க்கைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில் லாபத்திற்குப் பொருள்கள் விற்கும் கடைகளுக்கு மத்தியில் அரபு ஸ்திரீட் வட்டாரத்தில் இரண்டு கிளைகள் கொண்டிருக்கும் 'ஃபங்ஷன் ஃபைவ் (Function Five)' என்ற மலிவுவிலைக் கடையில் மலிவான விலைகளில் ஆடைகளை விற்று சிக்கன உணர்வைப் பேணுகின்றது.
அரபு ஸ்திரீட்டில் லாப நோக்கத்துடன் செயல்படும் கடைகளுக்கு இடையே, மலிவுவிலையில் பொருள்களை விற்று, சிக்கன உணர்வைப் பேணி வருகின்றது 'ஃபங்ஷன் ஃபைவ்'.
கணினி விசைப்பலகையில் பக்கத்தைப் புதுப்பிக்க F5 விசை பயன்படுத்தப்படுவதால் இந்தக் கடைக்கு 'ஃபங்ஷன் ஃபைவ்' எனப் பெயர் சூட்டப்பட்டது.
இரு கிளைகளைக் கொண்ட இக்கடையில் $2 முதல் $25 வரையில் ஆடைகள் வாங்கலாம். சில வேளைகளில் இலவசமாகவும் ஆடைகள் வழங்கப்படுவதுண்டு. XXS முதல் 4XL வரை எனப் பல அளவுகளிலும் இங்கு ஆடைகள் விற்கப்படுகின்றன.
இப்போது 27 வயதாகும் ஹஃபீஸ் ஆரிஃபும் யாசித் சதாலியும் சேர்ந்து, தேவைப்படாத ஆடைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் நோக்கில் இக்கடையைத் தொடங்கினர்.
சிறுவயது முதல் நண்பர்களாக இருந்துவரும் ஆரிஃபும் சதாலியும் தங்களது 17 வயதில் பலதுறைத் தொழிற்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மலேசியா சென்றனர். அப்போது, பயன்படுத்தப்பட்ட பொருள்களுக்கான தொழில்துறை அங்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பதைக் கண்டு வியந்தனர். அப்போது முதல் அவர்களும் தங்களது வாழ்க்கைமுறையை மாற்றியமைத்துக்கொண்டனர்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு விநியோகிப்பாளர்களை நாடி துணித் தொழிற்சாலைகளைப் பார்வையிட்ட அவர்கள், சிக்கனமாக இருப்பதுதான் குப்பைகளை நிலத்தை நிரப்புவதில் இருந்து ஆடைகளைக் காப்பாற்றுவதற்கான வழி என்பதை உணர்ந்தனர்.
50 கிலோ முதல் 100 கிலோ பொதிகளாக பழைய ஆடைகளை வாங்குகிறது ஃபங்ஷன் ஃபைவ். இதற்காக ஆரிஃபும் சதாலியும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்குச் செல்கின்றனர்.
சுற்றுச்சூழல் காக்க மானியம்
சுற்றுச்சூழலுக்கு உதவ மக்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசாங்கம் பல மானியங்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான எஸ்ஜி சுற்றுச்சூழல் நிதி மானியம், 'ரெனியூ எர்த் ஸ்வெட் ஷாப்' எனும் சமூக, பங்கேற்புக் கலைத் திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
'ஸ்வெட்ஷாப்' என்பது, குறைந்த ஊதியத்திற்கு மோசமான சூழலில் நீண்ட நேரம் பணிபுரியும் துணி ஆலைகள் போன்ற தொழிற்சாலைகள் அல்லது பட்டறைகளைக் குறிக்கிறது.
'ரெனியூ எர்த் ஸ்வெட் ஷாப்' திட்டமானது, உலகளாவிய நவநாகரிகத் துறையின் வேலையிடச் சூழல்கள் குறித்தும் அத்துறை சுற்றுசூழல்மீது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் எதிர்வினையாற்றி வருகிறது. இவ்வாண்டு 500 கிலோ ஆடை அலங்காரப் பொருள் கழிவுகளை மறுசுழற்சி செய்வதை இத்திட்டம் இலக்காகக் கொண்டு உள்ளது.
தேவைக்குமேல் பொருள்களை வாங்கிக் குவித்து, இயற்கை வளங்களை அளவிற்கதிகமாய்ச் சுரண்டாமல், எதிர்காலத் தலைமுறைகளுக்கும் அவற்றை விட்டுச்செல்ல வேண்டியது மனித குலத்தின் கடமையும் பொறுப்புமாகும். அந்த வகையில், இவ்வாண்டு மறுபயனீட்டு விகிதத்தை உயர்த்த அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு நாமும் கைகொடுப்போம்.
அளவான பயன்பாடே நம் பண்பாடாக மாறட்டும்!
சிக்கனமாகச் செலவிட சில உதவிக்குறிப்புகள்
எப்பொழுதும் ஒருவரின் நிதிநிலைக்கு ஏற்ப, அதிலும் அவர் திட்டமிட்டதற்கு மேலாகச் செல்லாதவாறு விலை இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். தனிப்பட்ட தேவைகளுக்கான பொருள்களின் விலை மலிவாக இருந்தால் ஆர்வத்தில் தேவைக்கு மிஞ்சி வாங்கிக் குவிக்கக்கூடாது.
கட்டண முகப்பிற்குச் சென்றபின் விழித்துக்கொள்ளாமல், எத்தனை பொருள்கள் வாங்கி உள்ளோம் என்பதையும் அவற்றின் விலை நாம் திட்டமிட்ட தொகைக்குள் உள்ளதா என்பதையும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
பயன்படுத்திய ஆடைகளை வாங்கினாலும், அவை ஒருவர் எதிர்பார்க்கும் தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விலை மலிவாக இருந்தாலும் தரம் குறைந்த பொருள்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது.
மலிவுவிலைக் கடைகள் விற்ற பொருள்களைத் திரும்பப் பெற்றுக் கொள்வது இல்லை என்பதால் பணம் செலுத்தும் முன்னரே ஒருவர் வாங்கிய பொருள்களில் ஏதேனும் குறைகள் உள்ளனவா என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
பழைய ஆடைகளைத் தூக்கி எறியுமுன் அவற்றை நன்கொடையாக அளிக்கவும் மறுவிற்பனை செய்யவும் https://www.nea.gov.sg/our-services/waste-management/donation-resale-and-repair-channels என்ற இணையப் பக்கத்தில் தேசிய சுற்றுப்புற வாரியத்தின் ஆலோசனையை நாடலாம்.
ஆடை நன்கொடைக்கான வழிமுறைகள்
1. பழைய ஆடைகளை பெற்றுக் கொள்வார்களா என்பதை சம்பந்தப்பட்ட மலிவுவிலைக் கடை அல்லது நன்கொடை நிலையத்தை முன்கூட்டியே தொடர்புகொண்டு, விவரம் அறிந்து கொள்ளுங்கள்.
2. உங்களது ஆடைகளைக் கையாள்வோரிடம் கவனமாக இருங்கள். அந்த ஆடைகள் தூய்மையாகவும் அணியத்தக்க நிலையிலும் இருப்பதை உறுதிப் படுத்திக்கொள்ளுங்கள்.
3. அவற்றை நேர்த்தியாக மடித்து, பையில் வைத்துவிடுங்கள்.
4. உரிய இடத்தில் அவற்றை விட்டுச் செல்லுங்கள்.
தகவல்: https://pride.kindness.sg

