மாணவர்களிடம் தமிழ்மொழியைக் கொண்டு சேர்க்க அரும்பணியாற்றிவரும் தமிழ் ஆசிரியர்களைக் கெளரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘நல்லாசிரியர் விருது’ நேற்று ஒன்பது ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழ் முரசு நாளிதழ், சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கம், தமிழ்மொழி கற்றல் வளர்ச்சிக் குழு ஆகியவை இணைந்து நல்லாசிரியர் விருது விழாவை 2002ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன.
இவ்வாண்டின் நல்லாசிரியர் விருது விழா நேற்று உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய உள்ளரங்கில் நடைபெற்றது.
நல்லாசிரியர் வாழ்நாள் சாதனையாளர் விருதினை மூத்த தமிழாசிரியர்களான 74 வயது திரு சாமிக்கண்ணு சிதம்பரம், 73 வயது திரு பொன்னழகு மாணிக்கம் ஆகிய இருவரும் பெற்றனர்.
தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தொடக்கக் கல்லூரி/புகுமுகக் கல்வி நிலையம் ஆகிய பிரிவுகளில் ஆறு பேருக்கும் சிறந்த பயிற்சி ஆசிரியர் விருது ஒருவருக்கும் இவ்விழாவில் வழங்கப்பட்டன.
விருது பெற்ற ஆசிரியர் ஒவ்வொருவரும் தமிழ் மொழியைச் சிறப்பிக்க தங்களது பள்ளிகளிலும் மாணவர்களிடத்திலும் மேற்கொண்டு வரும் அரிய முயற்சிகள் குறித்து இங்கு காண்போம்.