ஒவ்வொரு மனிதனுக்கும் தனது வாழ்வில் இரண்டு முக்கியமான இடங்கள் உள்ளன. ஒன்று தாயின் கருவறை, மற்றொன்று மாணவர்
களின் வகுப்பறை என்கிறார் உயர்நிலைப் பள்ளி பிரிவுக்கான சிறந்த தமிழாசிரியர் விருதுபெற்ற திரு ஜோசப் அந்தோணி ராஜ், 40.
ஒரு தாயின் கருவறை எவ்வாறு ஒரு நல்ல மனிதனை உருவாக்குகிறதோ, அதேபோல் வகுப்பறை ஒரு நல்ல குடிமகனை உருவாக்கு கிறது என்கிறார் அவர்.
2012ஆம் ஆண்டு ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர், தமிழ் மொழியையும் பாரம்பரியத்தையும் மாணவர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் ஈடுபாட்டுடன் பாடங்களைத் திட்டமிட்டு வழங்குவதில் பெருமை கொள்கிறார்.
"என்னை பொறுத்தளவில் கற்பித்தல் என்பது பாடங்களைத் தாண்டி வாழ்க்கையின் விழுமியங்களை மாணவர்களுக்கு கற்றுக்கொடுப்பதே ஆகும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமது பள்ளியில் தமிழ் மொழித் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் திகழும் திரு அந்தோணி ராஜ், தமது மாணவர்களை கவிதை, கதை எழுதுதல், தமிழ் செயலி உருவாக்குதல் சார்ந்த போட்டிகள் மற்றும் மொழி அறிவை ஆழப்படுத்துவதற்காக நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களுடன் உரையாடல் நிகழ்ச்சிகள் போன்றவற்றில் பங்கேற்க ஊக்குவிக்கிறார்.
அதே வேளையில் திரு அந்தோணி தனது பாடங்களில் மாணவர்களை ஈர்க்கும் வகையில் நவீன தகவல் தொழில்நுட்பத்தையும் சேர்த்து கற்பித்து வருகிறார்.
"பல பயிலரங்குகளுக்குச் சென்று நவீன தகவல் தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, பாடங்களில் மாணவர்களை சுவாரசியமான முறையில் எவ்வாறு பயன்படுத்துவது போன்ற நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டு என்னை நானே மேம்படுத்திக்கொண்டேன்," என்று அவர் கூறினார்.
"தொழில்நுட்பம் என்பது மாணவர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட இந்தக் காலத்தில், நவீன தகவல் தொழில்நுட்பத்தைக் கொண்டு கற்பிக்கும்போது, தமிழ் இலக்கியங்கள், தமிழ் சார்ந்த பாடங்கள் இன்னும் எளிதில் மாணவர்களைச் சென்றடைகின்றன.
"ஆகையால், தொழில்நுட்பத்தை பள்ளிப் பாடங்களில் ஓர் அங்கமாகப் பயன்படுத்துவது அவசியமானது," என்கிறார் திரு அந்தோணி ராஜ்.
மேலும், மாணவர்கள் தங்களுக் குள்ளேயே பாடத் திருத்தங்களைச் செய்துகொள்ள 'எடிட்டிங்' முறை யையும் திறன்வளர்க்கும் விவாதங் களில் பங்கேற்க கூட்டுக் கற்றல் உத்திகளையும் இவர் பயன்படுத்தி வருகிறார்.
சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் இவர், தம் மாணவர்களுடனும் பெற்றோருடனும் ஒரு சிறப்பான பிணைப்பைக் கொண்டுள்ளார்.
அவர்கள் அத்தனை பேரின் தேவையை அறிந்து, தொழில்நுட்பம் வாயிலாக, இயன்ற அளவிற்கு தமிழ் மொழியோடு வாழ்க்கையின் விழுமியங்களையும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் நோக்கத்தை இவர் கொண்டுள்ளார்.
இவரது நவீன பாடத்திட்ட முறை, மாணவர்கள் தங்கள் வகுப்பறைக்கும் அப்பால் சக நண்பர்களுடன் தினசரி உரையாடலில் தமிழ்மொழியை அதிகமாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

