மோனலிசா
தீபாவளி என்றாலே விதவிதமான அலங்காரங்களுடன் வீடெல்லாம் புதுப் பொலிவு காணத் தொடங்கிவிடும். அதற்கேற்ப, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு லிட்டில் இந்தியாவில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளிச் சந்தையில் அலங்காரப் பொருள்கள் குவிந்து கிடக்கின்றன.
ஈராண்டுகளுக்குப்பின் நண்பர்கள், உறவினர்களுடன் தீபாவளி கொண்டாடத் தயாராகும் மக்கள், வீட்டை அலங்கரிப்பதில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கியிருப்பர். அவர்களுக்கென சிக்கனமாகவும் சிறப்பாகவும் வீட்டை அலங்கரிக்க ஏராளமான பொருள்கள் லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தையில் விற்கப்படுகின்றன.
வண்ண அகல் விளக்குகள், தரையிலும் சுவரிலும் ஒட்டப்படும் கோலங்கள், ஆளுயரத் தோரணங்கள், மாலைகள், பொன்னிறப் பூச்சாடிகள், கற்கள் பதித்த அலங்காரத் தட்டுகள், பூசையறைப் பொருள்கள் ஆகியவை கடைகள் எங்கும் பளிச்சிடுகின்றன. பூ வேலைப்பாடுடன் கூடிய தலையணைகள், தலையணை உறைகள், வீட்டு முகப்பை அலங்கரிக்கும் வண்ண விரிப்புகள், தனித்துவ அச்சுகளுடைய பிரம்மாண்ட தரைவிரிப்புகள் என வழக்கமான பொருள்களும் குவிந்துள்ளன.
கடந்த 25 ஆண்டுகளாக தீபாவளிச் சந்தையில் அலங்காரப் பொருள் கடை வைத்து நடத்தி வரும் எஸ்.கே. டிரேடிங்ஸ் இணை நிறுவனரான கலையரசி மாரிமுத்து, 58, இவ்வாண்டு வாசலில் கட்டும் தோரணங்கள், அன்பளிப்பு உறைகள், ஒளிபுகும் வண்ண விளக்குகள், கடவுள் சிலைகளுக்கான உடைகள் போன்றவை அதிக அளவில் விற்பனையாகி வருவதாகக் கூறினார். மேலும், தாமரைப் பூ வடிவிலுள்ள சுவர் அலங்காரங்களுக்கும் 'தீபாவளி வாழ்த்து' சுவரொட்டிகளுக்கும் பொதுமக்களிடம் அதிக வரவேற்பு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கேம்பல் லேன் தீபாவளிச் சந்தை இவ்வாண்டு இல்லாதபோதும் அச்சாலையில் உள்ள கடைகளின் முகப்பு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிச் சிறப்பாக மயில் உருவம் பொதிந்த வண்ணச் சுவர் கடிகாரங்கள், விளக்குகள், சுவரொட்டிகள், தோரணங்கள் உள்ளிட்ட பல்வேறு புதிய பொருள்கள் அங்கு குவிந்துள்ளன.
பொருள்களின் விலையேற்றம் கவலை தந்தாலும் ஈராண்டுகளுக்குப்பின் தீபாவளி கொண்டாடுவதால், மக்கள் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர் என்றார் 'ஜெயராம் கிரியேஷன்ஸ்' உரிமையாளர் திரு டேவிட் செல்வா ராஜு, 56. கடந்த ஆண்டுகளில் 40 வெள்ளிக்கு விற்றுவந்த பிரம்மாண்ட மாலை இவ்வாண்டு 50 வெள்ளிக்கு விற்கப்படுவதாக அவர் சொன்னார்.
முதன்முறையாக தீபாவளிச் சந்தையில் பலகாரக் கடை வைத்து இருக்கும் 'தி ராயல் துள்சி' மற்றும் 'குவீன் ஆஃப் டார்ட்ஸ்' கடைகளின் உரிமையாளர் திருவாட்டி சப்னா, 43 இணையவழி வாடிக்கையாளர்களை நேரில் வந்து வாங்க ஊக்குவிக்கிறார். வார இறுதியில் விற்பனை அதிகமாக உள்ளது என்ற அவர், வீட்டில் செய்யப்படும் பலகாரங்களுக்குத் தேவை அதிகம் என்றார்.
கடந்த இரண்டாண்டுகளாகப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளால் மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாததால் இங்கேயே பொருள்களை வாங்கினர் என்றும் இருப்பில் இருந்தவை அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்றும் கூறிய 'மஹிஷா கலெக்ஷன்ஸ்' உரிமையாளர் இளங்கோ முருகையன், 50, இவ்வாண்டு விற்பனை இன்னும் சூடுபிடிக்கவில்லை என்றார்.
'கடைகளுக்கு நேரில் சென்று வாங்குவதில்தான் மனநிறைவு'
இணையப் பயன்பாடு அதிகரிப்பு, கொவிட்-19 காலப் பழக்கம் போன்றவை காரணமாக பெரும்பாலும் இணையம் வழியாகப் பொருள்கள் வாங்கினாலும் தீபாவளி பண்டிகைக்குச் சந்தையில் நேரில் பொருள்களைப் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்து, பேரம் பேசி வாங்குவதே இல்லத்தரசியான 71 வயது ஸ்ரீ ஞானம் சோலைமலைக்கு மனநிறைவு அளிக்கிறது.
அவரைப்போல பலரும் தீபாவளித் திருநாளுக்குப் பொருள் வாங்கவென்றே லிட்டில் இந்தியாவுக்கு குடும்பத்தோடும் நண்பர்களோடும் வருகிறார்கள்.
"இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளிச் சந்தைக்கு வருவதே மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. என்னுடைய இரு மகள்களும் புதிய ஆடைகளை வாங்கியும் பலகாரங்களைச் சுவைத்தும் மகிழ்ச்சியுடன் நேரத்தைச் செலவிட்டனர். அடுத்த வாரத்திற்குள் மீண்டும் ஒருமுறை அழைத்து வரவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்" என்று கூறினார் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரியும் திருவாட்டி பூஜா தனசேகர், 42.
"தீபாவளிக்கு முதல்நாள், சந்தையில் உள்ள மருதாணிக் கூடங்களில் கை முழுவதும் மருதாணியிட்டு, கைகளை நீட்டியவாறே பேருந்தில் பயணம் செய்வதே என்னுடைய மனத்திற்கு நெருக்கமான தீபாவளி நினைவுகள். இவ்வாண்டின் மருதாணிக் கூடங்களையும் அதன் வடிவமைப்புகளையும் முன்கூட்டியே காண வந்தேன். சந்தை இருக்கும் ஒரு மாத காலமும் அடிக்கடி நண்பர்களுடன் வந்துபோவதே மகிழ்ச்சியான அனுபவம்," என்று சொன்னார் தொடக்கக் கல்லூரி மாணவியான சரிதா கணேசன், 18.
பலகாரக் கடைகள், ஆடைக் கடைகளுடன் புத்தாடைகளுக்குப் பொருத்தமான பாரம்பரியக் காலணிகள் விற்கும் கடைகளும் மருதாணிக் கூடங்களும் அமைந்துள்ளன. புதிய உணவுவகைகளும் சந்தையில் விற்கப்படுகின்றன. பானிபூரி விற்பனையகங்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

