அனுஷா செல்வமணி
வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டுமென்ற வேட்கையுடன் இருந்த ஐஸ்வரியா ஸ்ரீ, 'ஜிசிஇ' மேல்நிலைத் தேர்வுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் செல்லுமுன் மூன்று ஆண்டுகள் இடைவெளி எடுக்க நேரிட்டது. பகுதிநேர வேலைகளிலும் தற்காலிக வேலைகளிலும் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு, வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
இதில், வியட்னாம் பயணம் ஐஸ்வர்யாவின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வியட்னாமில் உள்ள சிவானந்தா யோகாசனப் பயிற்சி மையத்தில் ஒரு மாதம் பயின்று யோகாசனம் கற்பிப்பதற்கான உரிமத்தைப் பெற்றார்.
அங்கு தங்கியிருந்த நாள்களில் இயற்கை மூலிகை உணவைச் சுவைத்த ஐஸ்வர்யாவுக்கு, யோகாசனத்தையும் உணவையும் இணைத்து ஆரோக்கியம் பேண உதவும் எண்ணம் இவருக்கு ஏற்பட்டது.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை வளாகத்தில் கடையை வாடகைக்கு எடுத்து, 'அகிம்சா கஃபே'யைத் தொடங்கினார்.
கடந்த ஒன்றரை ஆண்டாக நீடித்த நிலைத்தன்மை, யோகாசனம், ஆயுர்வேதம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு ஆரோக்கிய முறையில் இயற்கை உணவுவகைகளை இங்கு வழங்குகிறார்.
முருங்கைக் கீரை லாட்டே, வேப்பிலை வெல்னஸ் ஷாட்ஸ் போன்ற மாறுபட்ட உணவுகள் இங்கே கிடைக்கின்றன.
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து அஸ்வகந்தா, வேப்பிலை, சீரகம், பெருஞ்சீரகம் போன்ற இயற்கை வேளாண்பொருள்களை (ஆர்கானிக்) இறக்குமதி செய்கிறார்.
வார இறுதி நாள்களில் வசதிகுறைந்தோரின் வீடுகளுக்குச் சென்று யோகாசனம் கற்பிக்கும் இவர், சிறுவயதிலிருந்தே சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு தாயாரின் வழிகாட்டலில் இயற்கை மருத்துவத்தை நாடுபவர்.
"உணவில் ஆயுர்வேதப் பொருள்கள், யோகாசனம் இரண்டும் மனத்தை அமைதிப்படுத்துவதற்கும் மன அழுத்தத்தை குறைப்பதற்கும் பெரிதும் உதவுகிறது," என்று கூறும் ஐஸ்வரியா, நனிசைவ உணவுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார்.
இதற்கு முன்னர் செரிமானப் பிரச்சினையால் அவதிப்பட்ட இவருக்கு இந்த உணவுப் பழக்கம் தீர்வாக அமைந்துள்ளது.
எதிர்காலத்தில் யோகாசனப் பயிற்சி நிலையத்தையும் ஆரோக்கிய உணவகத்தையும் ஒரே இடத்தில் அமைக்க விரும்புகிறார் 24 வயதாகும் ஐஸ்வரியா.

