ஆ. விஷ்ணு வர்தினி
வணிகத்துறையில் கோலோச்சும் இந்தியப் பெண்களை அங்கீகரிக்கும் 'டோயென்: வாய்ஸ், நாட் என் எக்கோ' நூலின் இரண்டாம் பாகத்தை வெளியிட்டுள்ளது லிஷாபெண்கள் பிரிவு. அதன் 200ஆம் நிகழ்ச்சியாக அது அமைந்தது.
பத்தாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இவ்வமைப்பு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஐம்பது பெண்களின் அனுபவங்களை ஆவணப்படுத்தியுள்ளது. லிஷா பெண்கள் பிரிவை உருவாக்கிய தருணத்தை நினைவுகூர்ந்தார் அதன் தலைவர் ஜாய்ஸ் கிங்ஸ்லி.
பெண்களின் தொழில் ஆர்வத்தைப் பெருக்கி அவர்களுக்கான தளங்களை அமைத்துத் தரும் எண்ணத்தில், வர்த்தக சமூக நிகழ்ச்சிகள், வர்த்தகக் கலந்துரையாடல்கள், பயிலரங்குகள் எனத் தங்கள் அமைப்பு செயல்படுத்திய பல்வேறு உதவித்திட்டங்களை அவர் சுட்டினார்.
"சிங்கப்பூரில் பெண் தொழில் அதிபர்களின் எண்ணிக்கையும் அவர்களின் பன்முகத்தன்மையும் அதிகரித்து வருகிறது. ஆகவே, கூட்டு நிறுவனங்களுக்கும் விரிவாக்கங்களுக்கும் பல வாய்ப்புகள் உள்ளன," என்றார் லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கத்தின் துணைத் தலைவருமான ஜாய்ஸ் கிங்ஸ்லி.
இணையத் தொழில்கள், வீட்டிலிருந்து இயங்கும் தொழில்கள் என எல்லா வகைத் தொழில்களிலும் கால்பதித்துள்ள இந்தியப் பெண்கள் லிஷா பெண்கள் பிரிவுடன் இணைந்து செயல்பட அவர் ஊக்குவித்தார்.
'டோயென்' நூலின் ஆசிரியர் சேண்ட்ரா கிங்ஸ்லி, பெண்களுக்கு அடிப்படையாகவும் அடையாளமாகவும் இருக்கக்கூடிய அன்பும் பரிவும் இந்நூலின் அடிநாதமாக அமைந்துள்ளதெனக் குறிப்பிட்டார்.
"இந்த முயற்சி வருங்காலத் தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது என்று கருதுகிறேன்," என்றார் அவர்.
நூலில் இடம்பெற்றுள்ளோரில் ஒருவர் 'ஏ ஸ்டார் அச்சீவர்ஸ்' நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான திருமதி மஹ்ஜபீன்.
"பெண்களுக்காக பெண்களே வழங்கும் இச்சாதனை விருதினைப் பெற்றுக்கொள்வதில் பெருமை அடைகிறேன். சாதாரணப் பெண்களையும் சாதனைப் பெண்களாக்கி அவர்களின் உழைப்பை அங்கீகரித்துள்ளது இந்நிகழ்ச்சி," என்று அவர் கூறினார்்.
நேற்று முன்தினம் மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, நூலில் இடம்பெற்றுள்ள சாதனைப் பெண்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார் அதிபர் ஹலிமா யாக்கோப்.
2017ஆம் ஆண்டில் தனது 100வது நிகழ்வில் இந்நூலின் முதல் பதிப்பை வெளியிட்டது லிஷா பெண்கள் பிரிவு. மனைவி, தாய், மகள் எனப் பல பரிமாணங்களை ஒருங்கே கையாளவேண்டிய சிக்கல்களைக் கடந்து நடைபோடும் பெண் தொழிலதிபர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வண்ணம் அது வெளியிடப்பட்டது.
பலதரப்பட்ட பின்னணிகளைக் கொண்ட இந்தியப் பெண் தொழில் அதிபர்களின் பயணங்களை உள்ளடக்கிய அந்த நூல், ஒரு முதல் முயற்சியாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

