பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) அடுத்த மாதம் 1ஆம் தேதி உயரவிருப்பதால் சிங்கப்பூரர்கள் சிலர் தேவையான பொருள்களை முன்கூட்டியே வாங்கத் தொடங்கிவிட்டனர்.
எடுத்துக்காட்டாக அடுத்த ஆண்டு புது வீட்டுக்கு மாற உள்ளோர், வீடுகள் தயாராகாத நிலையிலும் வீட்டுக்கான பொருள்களை இவ்வாண்டு முடிவதற்குள் வாங்க முனைந்துள்ளனர். முன்பதிவுகளும் அதிகரித்துள்ளன.
இந்தப் போக்கு லிட்டில் இந்தியா வர்த்தகங்களுக்கு இடையிலும் காணப்படுகிறதா என்று ஆராய்ந்தபோது, தங்க நகைகள் வாங்கத் திட்டமிடுவோர் நகைக்கடைகளில் முன்பதிவு செய்து வருவது தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நகைகள் வாங்க இம்மாதம் முன்பதிவு செய்து வருவதாக 'லக்ஷ்மி பேலஸ்' நகைக்கடை மேலாளர் குமாரபாணி கூறினார். முன்பதிவு மூலம் இவ்வாண்டில் நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாடிக்கையாளர்கள் நகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன்படி அடுத்தாண்டு ஜிஎஸ்டி 8% உயர்ந்தாலும் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களிடம் 7% மட்டுமே வசூலிக்கப்படும்.
கொவிட்-19 கொள்ளைநோய் முடிந்து திருமணங்கள் அதிகம் நடைபெறுவதால் வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்குவதற்காக முன்பதிவு செய்கிறார்கள் என்று கூறினார் 'மீனா ஜூவலர்ஸ்' உரிமையாளர் ராய்.
தாங்களும் தங்க விநியோகஸ்தர்களிடம் 7% ஜிஎஸ்டி மட்டுமே செலுத்தும் நோக்கில் முன்பதிவு செய்துள்ளதாக இவர் கூறினார்.
பொருள், சேவை வரி உயர்வு குறித்து அறிந்திருந்தாலும் சிலர் 1% அதிகரிப்பு மட்டும் தானே என்று அதிகம் வருந்தாமல் இருப்பதாகவும் மேலும் சிலரோ இதைப் பற்றி அறியாமலே இருப்பதாகவும் 'அக்ஷயா ஜூவல்லர்ஸ்' கடையின் பிரதிநிதி கூறினார்.
தற்போதைக்கு எந்தவிதமான விற்பனை உயர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறும் 'அணி மணி பொற்சாலை'யின் சுப்பையா ராமு, ஆண்டின் இறுதி வாரத்தில் இந்நிலை மாறலாம் என்றார். அதிக விலை கொண்ட பொருள்களை முன்னரே வாங்குவது செலவைச் சற்று குறைத்தாலும் தங்கள் கையிருப்பைப் பொறுத்தே வாடிக்கையாளர்கள் முடிவெடுப்பதாக அவர் சொன்னார்.
இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களை இது பாதிக்கும் என்று லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.
சேமிப்பு அதிகம் இல்லாத வெளிநாட்டு ஊழியர்கள், சிறுகச் சிறுக சேர்க்கும் பணத்தைக் கொண்டு தாயகம் திரும்பும்போது நகை வாங்குவது வழக்கம். அதனால், ஜிஎஸ்டி உயர்வுக்கு முன்பே நகை வாங்குவது அவர்களுக்கு சிரமம்.
குறைந்த வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு எந்தவித சலுகையும் பொருள், சேவை வரி தொடர்பில் வழங்கப்படவில்லை.
அன்றாடத் தேவைகளுக்கு லிட்டில் இந்தியா மளிகைக் கடைகளுக்குச் செல்லும் இவர்கள், ஜிஎஸ்டி உயர்வால் நேரும் விலை உயர்வைச் சந்திக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று 'ஓவிஐ ஈட்ஸ் அண்ட் டிரீட்ஸ்' நிறுவனப் பிரதிநிதி கூறினார்.
சிங்கப்பூரில் 2005இலிருந்து பணிபுரியும் ராதாகிருஷ்ணன், அப்போதெல்லாம் உணவுப்பொருள் களின் விலை குறைவாக இருந்ததை நினைவுகூர்ந்தார். இன்றைய விலைவாசியைச் சமாளிப்பது சிரமமாக இருக்கிறது என்றார் அவர்.
அரிசி, முட்டை போன்றவற்றின் விலை இரண்டு மடங்கிற்கு மேலாகிவிட்டது. ஆனால் ஊதியம் உயரவில்லை என்று கூறும் இவர் சமாளிப்பது சற்றுச் சிரமமாகவே இருக்குமெனக் கருதுகிறார்.
இருப்பினும் இந்தியாவில் வசூலிக்கப்படும் பொருள், சேவை வரியைக் காட்டிலும் சிங்கப்பூரில் ஏற்பட உள்ள உயர்வு, சமாளிக்கக்கூடியதே என்கிறார் விற்பனை நிர்வாகி அலெக்ஸ்.
இந்தியாவின் பொருள், சேவை வரியால் பொருள்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறிய 'மேனகா டிரேடிங்' மேலாளர் விக்னேஸ்வரி, சிங்கப்பூரிலும் பொருள், சேவை வரி உயர்வது வாடிக்கையாளர்களை மேலும் பாதிக்கக்கூடும் என்றார்.
கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட வியாபாரம் இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னர் பொருள், சேவை வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்பது லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மத்தியில் பொதுவாக நிலவும் மற்றொரு கருத்து.
விலை உயர்வால் வாடிக்கையாளர்களை இழந்துவிடக்கூடாது என்பதால் ஜிஎஸ்டி உயர்வைத் தாங்களே சரிக்கட்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்கிறார் 'செல்விஸ் பியூட்டி பார்லர்' அழகு நிலைய உரிமையாளர் தமிழ்ச்செல்வி.
கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

