லிட்டில் இந்தியாவில் கண்கவர் காட்சிகள் தென்பட்டாலும் மூலை முடுக்குகளில் நெகிழிப் (பிளாஸ்டிக்) பைகளுக்கும் பஞ்சமில்லை.
ஒரு நாளில் நூறு பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதாகக் கூறுகின்றனர் சில கடைக்காரர்கள். "ஒரே ஒரு பொருளுக்கும் பை எடுப்பார்கள். நிறைய பொருள் வாங்கினால் கூடுதல் பைகள் கேட்பார்கள்," என்கிறார் வீரா டிரேடிங் நிறுவனத்தின் பாலா.
"சொந்தப் பை கொண்டுவருவோரை விரல்விட்டு எண்ணலாம்," என்கிறார் சென்னை டிரேடிங் கடைகளின் உரிமையாளர் ராமமுர்த்தி. கூட்டம் அதிகமாக இருக்கும் போது காய்கறிகளை பிளாஸ்டிக் பையில் போட்டு அளவிடுவதுதான் வசதி என்று கருதப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் சிங்கப்பூரர்கள் 820 மில்லியன் பிளாஸ்டிக் பைகளைக் கடைத்தொகுதிகளிலிருந்து எடுத்துச்செல்வதாக 2018ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்தது.
"தேக்காவில் இறைச்சி, காய்கறி வாங்குவேன். இறைச்சியில் இருந்து ரத்தம் துணிப்பையில் கசியக்கூடும். அதை பிளாஸ்டிக் பையில் வைத்தால்தான் சரியாக இருக்கும்," என்கிறார் வாடிக்கையாளர் சுராயா பேகம்.
சிலருக்கு பலநாள் பழக்கத்தை மாற்ற முடியவில்லை. "பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு என்று தெரிந்தாலும் எப்போதும் சொந்தப் பை எடுத்துச்செல்வது இயலாது," என்றார் சுரேஷ்.
இருப்பினும், "தேக்கா வரும்போதெல்லாம் காய்கறி, மளிகைப் பொருள்களுக்கு துணிப்பை எடுத்து வருவேன்," என்று சொல்லும் மனோஃபேரன், இறைச்சி, கோழி போன்றவற்றுக்கு பிளாஸ்டிக் பை பயன்படுத்துகிறார்.
அடுத்த ஆண்டிலிருந்து சில பல்பொருள் அங்காடிகளில் ஒவ்வொரு பிளாஸ்டிக் பைக்கும் ஐந்திலிருந்து பத்து காசு வசூலிக்கப்படும்.
"ஏற்கெனவே அத்தியாவசிய பொருள்களின் விலை எகிறிவிட்டது என்று குறைகூறும் வாடிக்கையாளர்கள் பிளாஸ்டிக் பைக்கும் கட்டணம் செலுத்துவதை வரவேற்கமாட்டார்கள். இங்கு முன்னர் இப்படி முயன்ற சில கடைகள் பணம் இழக்க நேரிட்டது," என்கிறார் ராமமூர்த்தி.
"மேலை நாடுகளில் அனைவரும் வாகனம் ஓட்டுவதால் காகிதப் பையில் பொருள்களை வாங்கிச் செல்வது எளிது. இங்கு கடினம்," என்றார் இல்லத்தரசி கலைவாணி.
செலவு அதிகமானாலும் எளிதில் மக்கக்கூடிய பைகளைச் சில கடைகள் வழங்குகின்றன. சிங்கப்பூரில் மறுபயனீடு செய்தல் அல்லது எரியூட்டப்படுவதால் சுற்றுச்சூழலுக்குப் பெரிய தாக்கம் இருக்காது என்கின்றனர் வல்லுநர்கள்.
எஸ். விக்னேஷ்வரி

