கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் லிட்டில் இந்தியாவிற்கு நேரடியாகச் சென்று பொருள்களை வாங்க விரும்புவதால் மின்னிலக்க வர்த்தகமுறையை நாடும் போக்கு குறைந்துள்ளது.
விநியோகச் சேவைக்கான செலவு, மின்வர்த்தகத் தளங்களில் விற்பனை செய்வதற்கான கட்டணம் ஆகியவை உயர்ந்துள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன.
"மூன்று, நான்கு விழுக்காடாக இருந்த கட்டணம், 10 விழுக்காட்டுக்கு மேலாக உயர்ந்துள்ளது," என்றார் 'வி மிஸ்டிக் பூடிக்' முதலாளி ஷாருக். இதனால் அதிக லாபம் ஈட்ட முடியாது என்று கருதிய பல வர்த்தகங்கள் மின்வர்த்தக முறையைக் கைவிட்டுள்ளன.
"ஆடைகளை அணிந்து பார்க்கும் அனுபவம் ஒரு திரையில் 'கிளிக்' செய்வதில் கிடைக்காது," என்கிறார் 'ஸிப் அட்ஜஸ்ட் டிசைனிங் டைலர்' முதலாளி சித்ராதேவி.
கடைக்கு வருபவர்களுக்குப் பொருத்தமான ஆடைகளையும் ஆபரணங்களையும் தேர்ந்தெடுத்துக் கொடுக்க முடியும். மின்வர்த்தகம் மூலம் வாங்குபவை வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வர்த்தகம் மீதான நம்பிக்கை குறையும் என்றார் அவர்.
விலையைக் குறைக்கும் சில மின்வர்த்தகங்கள் குறைவான தரத்தில் தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளது. "மின்வர்த்தகம் மூலம் லாபம் கிடைக்கலாம். அதேநேரம் தவறு ஏதும் நடந்துவிட்டால் இழப்பும் அதிகமாகும்", என்று 'ஜூவல் பேலஸ்' உரிமையாளர் நஜுமுதின் கூறினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே வேலைக்கு ஆள் கிடைப்பது அரிதாக இருப்பதாகக் கூறினார் லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் துணைத் தலைவர் ரகுநாத் சிவா. போதிய மனிதவளம் இன்றி இணைய வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது சிரமம்.
"கைத்தொலைபேசி போன்ற மின்பொருள்களை மக்கள் நேரடியாகப் பார்த்து, வாங்க ஆசைப்படுகிறார்கள். அதனால், தொடர்ந்து மின்வர்த்தகம் மூலம் விற்பனை செய்தால் லாபம் காண்பது சிரமம்," என்கிறார் பூர்விகா மொபைல் நிறுவன உரிமையாளர் ஆசிக்.
சில வர்த்தகர்களுக்கு இணையம் மூலம் தொழில் செய்வதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம்.
குமார் பூக்கடையைச் சேர்ந்த பிரபு, நாதன் ஆகியோர் 'டிக்டாக்' சமூக ஊடகம் மூலம் பூமாலைகளை விளம்பரம் செய்கிறார்கள். அவற்றை வாங்க விரும்புவோர் கடைக்கு நேரடியாகச் செல்லவேண்டும். இணையம் மூலம் மாலைகளை வாங்க இயலாது.
மின்வர்த்தகத்தில் ஈடுபட வாய்ப்புகள் பல இருந்தும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் தங்களின் வழக்கமான பாணியில் வியாபாரம் செய்வதையே அதிகம் பார்க்க முடிகிறது. கடை வாடகை, பொருள், சேவை வரி போன்ற செலவுகளுக்கு இடையே அவர்கள் எதிர்காலத்தில் மின்வர்த்தகத்தை அதிகம் நாட வாய்ப்புண்டு.
ரச்சனா வேலாயுதம்

