மக்கள் அதிகம் கூடும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் அவ்வப்போது கழிப்பறையைப் பயன்படுத்த வேண்டிய சூழல் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
தேக்கா சென்டர், தேக்கா பிளேஸ், லிட்டில் இந்தியா ஆர்கேட், லிட்டில் இந்தியா ரயில் நிலையம், உணவகங்கள், ஹனிஃபா, அப்போலோ செல்லப்பாஸ் கடைத்தொகுதிகள் போன்ற இடங்களில் கழிப்பறைகள் உள்ளன. சிலவற்றுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும், பல இடங்களில் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
அண்மையில் தேக்கா வட்டாரக் கழிப்பறைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. தேக்கா சென்டர் கழிப்பறைகளின் கட்டணம், கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 10 காசில் இருந்து 20 காசாக உயர்ந்தது.
நகர மன்றத்தின் நிர்வாகத்தின்கீழ் இயங்கும் இவை துணை ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவர்கள் கழிப்பறையைப் பராமரிப்பதற்காக கட்டணம் வசூலிக்கிறார்கள்.
காலை 10 மணியிலிருந்து இரவு 8 மணி வரை திறந்திருக்கும் இக்கழிப்பறைகள் ஒரு நாளில் நான்கு முறை சுத்தம் செய்யப்படுகின்றன.
தண்ணீர் பயனீட்டுக் கட்டணம், சுத்தம் செய்வதற்கான பொருள்களின் விலை போன்றவை அதிகரித்துள்ள நிலையில் கழிப்பறைப் பயன்பாட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கட்டணம் வசூலிக்கும் பணியில் உள்ள கோபால் கூறினார். இருப்பினும் சில இலவச கழிப்பறைகளுடன் ஒப்பிடுகையில் இவற்றில் சுத்தமும் சுகாதாரமும் குறைவாகவே உள்ளது.
உணவுடன் சேர்ந்து மதுபானமும் விற்கப்படும் 'கொடை கேன்டீன்' உணவு விடுதியில் வாடிக்கையாளர்களுக்காகக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டணம் 30 காசு. இவற்றிலும் சுத்தம் குறைவு என்கின்றனர் பயனீட்டாளர்கள்.
சிராங்கூன் சாலையின் முனையில் இருக்கும் தேக்கா பிளேஸ் கடைத்தொகுதியின் இரண்டாம் மாடியிலும் அடித்தளத்திலும் இருக்கும் பொதுக் கழிப்பறைகளை மக்கள் இலவசமாகப் பயன்படுத்தலாம்.
இவை சுத்தமாகப் பேணப்படுகின்றன.
பொதுவாக கழிப்பறை மெல்லிழைத்தாள், கட்டணக் கழிப்பறைகளின் வெளிப்புறத்தில் இருக்கும். ஆனால் தேக்கா பிளேசில் உள்ள ஒவ்வொரு கழிப்பறையிலும் தாள்களைக் காண முடிகிறது.
சிறு குழந்தைகள், உடற்குறைஉள்ளோர், கண்பார்வை இல்லாதோர் ஆகியோரைக் கருத்தில் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
முன்பு கட்டணம் வசூலிக்கப்பட்ட லிட்டில் இந்தியா ஆர்கேட் கழிப்பறைகளைத் தற்போது இலவசமாகப் பயன்படுத்த முடிகிறது.
செய்தி, படம்:
பொன்மணி உதயகுமார்

