நூல்களைக் கையில் ஏந்தி வீடு வீடாகச் சென்றதுடன் அலுவலகங்களுக்கும் சென்று விற்று வந்த தம்முடைய தந்தையின் தொழிலைப் புதுப்பித்து, கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக நடத்தி வருகிறார் திரு அப்துல் நாஸிர். வடிவமைப்பு, வரைகலை ஓவிய நூல்களை விற்கும் இக்கடையின் தனித்துவமான அடையாளமே அதன் நிலைத்தன்மைக்கான முக்கிய காரணமெனக் கருதுகிறார் நாஸிர்.
கையடக்கச் சாதனங்களால் எல்லா தகவல்களும் நமது கையிலேயே அடங்கிவிட்டன. இதனால் தற்காலத்தில் தாள் அட்டை புத்தகங்களுக்கான தேவை குறைந்து உள்ளது. மாணவர்கள், வடிவமைப்பாளர்கள், கட்டடக் கலைஞர்கள் ஆகியோருக்கு அறிவுக்கூடமாக விளங்கி வந்த பஷீர் கிராஃபிக் புத்தகக்கடை, தற்போது முன்பிருந்த அளவுக்கு நாடப்படுவதில்லை. இருப்பினும், மக்களின் கைக்கு அதிகம் எட்டாத சஞ்சிகைகள், காலப்போக்குக்கு ஏற்ப மாறிய புத்தகத் தொகுப்புகள் இப்புத்தகக்கடையில் கிடைப்பதால் தமது வர்த்தகத்தின் தடத்தை மேலும் ஆழப் பதித்துள்ளதாக தெரிவித்தார் நாஸிர்.
"என் அப்பாவின் காலத்திலும் என் சிறுவயது நாள்களிலும் எங்கள் வாடிக்கையாளர் கள் அளித்த ஆதரவால் ஓடிய வியாபாரம் இப்போது பரபரப்பாக இல்லையென்றாலும் எங்களின் ஊடகத் தளங்கள் பெரிதும் கைக்கொடுத்துள்ளன," என்றார் 58 வயதாகும் நாஸிர்.
ராஃபிள்ஸ் பிளேஸ் பகுதியில் புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் 1980களில் விற்று வந்தார் அப்துல் நாஸிரின் தந்தையான திரு பஷீர் அஹமது. நேரில் சென்று புத்தகங்களை விற்கும் 'ஹாக்கர்' புத்தகக்கடை முறை அக்காலத்தில் பிரபலமாக இருந்தது. விளம்பர நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கேற்ப வடிவமைப்பு சார்ந்த புத்தகங்களை இறக்குமதி செய்யத் தொடங்கினார் திரு பஷீர். அவை விலைஉயர்ந்தவையாகவும் அதிகம் தேவையுள்ளவையாகவும் இருந்ததால் தொடர்ந்து அவற்றை விற்று வந்தது வியாபாரத்தைச் செழிக்கவைத்ததுடன் புத்தகக்கடைக்கு ஒரு தனி அடையாளத்தையும் தந்தது.
நாஸிர் தனது பத்தொன்பதாம் வயதில் தந்தையின் தொழிலில் சேர்ந்துகொண்டார். தோ பாயோவில் ஒரு வாடகை வீட்டில்இருந்து இயங்கிக் கொண்டிருந்த தங்கள் வியாபாரத்தைப் பற்றி அண்டைவீட்டார் ஒருவர் புகார் அளித்ததால், 1990களில் பிராஸ் பாசா வளாகத்தில் கடை திறக்கப்படவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்றார். அதைத் தொடர்ந்து, உலகளவில் தொழிலை நிறுவ பல முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.
ஃபிராங்ஃபர்ட் புத்தகக் கண்காட்சிக்குப் பலமுறை சென்று வந்த நாஸிர், வெளியூர் புத்தக விற்பனையாளர்களைச் சந்தித்துத் தொழிலை விரிவாக்கினார். ஜகார்த்தா, ஹாங்காங், பேங்காக் ஆகிய இடங்களில் புத்தகக்கடைகளை நிறுவியதால், உலகளவில் ஏராளமானோருக்கு இப்புத்தகக்கடையின் பெயர் எட்டியது. தேவை குறைவாலும் மனிதவளத் தட்டுப்பாட்டாலும் தற்போது சிங்கப்பூர், கோலாலம்பூர் என இரண்டு இடங்களில் மட்டும் இயங்கி வரும் பஷீர் கிராஃபிக் புத்தகக்கடை, அண்மைய காலத்தில் விளம்பரப் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள விரும்பும் இளையர்களால் நாடப்படுகிறது.
"கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக மாற்றப்படாத பெயர்ப்பலகையும் புத்தக அலமாரிகளும் இவர்களை ஈர்க்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இத்தகையதொரு கடையை இவ்வளவு நாள் வெற்றிகரமாக நடத்தியதே எனது மிகப்பெரிய சாதனையாக கருதுகிறேன்," என்றார் திரு நாஸிர்.

