ஏழாண்டு காதலைத் தொடர்ந்து கடந்த ஆண்டு யாப் சீயும் கிஷான் ஜெயசங்கரும் திருமணத்தில் இணைந்தார்கள். இந்த ஆண்டு சீனப் புத்தாண்டை கணவன் மனைவியாக முதல்முறையாகக் கொண்டாடும் அனுபவம், புதுமை என்றனர்.
மற்ற ஆண்டுகளைவிட இந்த ஆண்டு கொண்டாட்டம் மாறுபட்டதாக இருக்கும் என்று 27 வயதுடைய இவ்விருவரும் கூறினர்.
குடும்பத்தில் ஏற்பட்ட சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் பிரம்மாண்ட முறையில் சீனப் புத்தாண்டை இவ்வாண்டு கொண்டாடும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எளிமையான கொண்டாட்டமே போதும் என்ற எண்ணத்தில் இருந்தார்கள் இவர்கள். யாப் சீயின் குடும்பத்துடன் உணவுண்டு பெரியோரிடம் ஆசி பெற்று புத்தாண்டைக் கொண்டாட முடிவுசெய்துள்ளனர் இந்த இளம் தம்பதி.
கடந்த சில ஆண்டுகளாக சீனப் புத்தாண்டுக்கு முன்பு யாப் சீயின் வீட்டுக்கு கிஷான் சென்று, வீட்டைச் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டதுடன் சீனப் புத்தாண்டு அன்று யாப் சீயின் குடும்பத்தோடு விருந்திலும் கலந்துகொள்வார்.
சீனக் கலாசாரத்தில் கணவன் குடும்பத்துடன் முதல் நாள் ஒன்றுகூடல் விருந்தில் கலந்து கொள்வது வழக்கம்.
ஆனால், கிஷானின் குடும்பம் சீனப் புத்தாண்டைக் கொண்டாடுவதில்லை என்பதால் யாப் சீயால் தம்முடைய குடும்பத்தோடு விருந்துண்டார்.
"திருமணத்திற்கு முன் யாப் சீயின் பெரிய குடும்பத்தை ஒரே இடத்தில் சந்திக்க சீனப் புத்தாண்டு வாய்ப்பளித்தது. எனக்கு அவர்களின் மொழி தெரியாவிட்டாலும் என்னைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராக அவர்களின் பழக்கவழக்கங்களில் சேர்த்துக்கொள்கிறார்கள்," என்று நிதித் துறையில் பணிபுரியும் கிஷான் கூறினார்.
சிறு வயதிலிருந்தே சுற்றியிருப்பவர்கள் பெரும்பாலும் சீனர்களாக இருப்பதாலும் சீனக் கலாசாரத்தைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் கிஷான்.
"கலாசார அடிப்படையில் எனக்கு அதிர்ச்சி ஒன்றும் இல்லை. என் மனைவியின் குடும்பத்துடன் அவர்களுக்குப் பிடித்தமான முறையில் கொண்டாடுவது எனக்கு முக்கியம். முதலில், சற்றுக் கூச்சமாக இருந்தது. ஆனால் இப்போது ஓரளவுக்கு என்னால் அவரின் குடும்பத்துடன் பேசிப் பழக முடிகிறது," என்றார் கிஷான்.
அதேபோல கிஷானின் குடும்பத்தோடு விழாக்களைக் கொண்டாடும்போது, அவரின் குடும்பத்தைப் பற்றியும் அவரின் கலாசாரத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள முடிகிறது என்றார் யாப் சீ.
"இதற்குமுன் கேள்விப்படாத சில பழக்கவழக்கங்களைப் பற்றி என் கணவனின் குடும்பத்தினர் எனக்கு எடுத்துக்கூறும்போது, நான் அவற்றை மதித்துப் பின்பற்றுகிறேன்," என்று யாப் சீ கூறினார்.
"வேற்று இனத்தவரைத் திருமணம் செய்யும்போது, கலாசார வேறுபாடுகள் இருக்கவே செய்யும். குறிப்பாக, எங்களின் பெற்றோருக்கு கலாசார ரீதியாக பல கவலைகள் இருந்தன. அவர்களின் கவலையைப் போக்கும் வகையில் நிலைமையைச் சமாளிப்பதோடு எங்களுக்குப் பிடித்த முறையில் வாழ நாங்கள் கற்றுக்கொண்டோம்," என்றார் யாப் சீ.
அடுத்த ஆண்டு, தங்களின் புதிய வீட்டில் சீனப் புத்தாண்டைக் கொண்டாட இருவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இரு கலாசாரங்களையும் ஒன்றிணைத்து கணவன் மனைவியாக எல்லா விழாக்களையும் கொண்டாடுவதில் ஒருவித மகிழ்ச்சி உள்ளதை இருவரும் உணர்வதாகப் பகிர்ந்துகொண்டனர்.
காதலரின் கலாசாரத்தை
அறிய ஒரு வாய்ப்பு
தம் சீன இனத்து காதலரின் வீட்டுக்கு முதன்முதலாகச் சென்று அவரின் குடும்பத்தாருடன் சீனப் புத்தாண்டை இன்று கொண்டாடுகிறார் 24 வயது பவதாரிணீ.
"இந்தப் புத்தாண்டுக்காக நாம் இருவரும் புதிய துணிகளை ஒன்றாக வாங்கும்போது சீனர்களின் பழக்கவழக்கங்களைப் பற்றி மேலும் அறிந்துகொண்டேன்," என்றார் பவதாரிணீ.
ஒரே நேரத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் சந்திக்க இந்தப் பண்டிகைக் காலம் ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது என்றும் பவதாரிணீ குறிப்பிட்டார்.
"சீனப் புத்தாண்டுக்கு என்னை அவரின் வீட்டுக்கு அழைத்தது, எங்கள் வாழ்க்கைப் பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக நாங்கள் கருதுகிறோம்," என்றும் கூறினார்.

