இந்த நீண்ட விடுமுறையின்போது வெளிநாட்டுக்குச் சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்ற நோக்கில் 22 வயது மோ. தரணி, தமது குடும்பத்தாருடன் தாய்லாந்தில் உள்ள கிராபி நகருக்குச் சென்றார். தொற்றுநோய் காலத்தில் எங்கும் செல்லமுடியாத பட்சத்தில், இவ்வாண்டு புதிய முறையில் கொண்டாட விரும்பிய தரணி, தம் குடும்பத்தாருடன் புதன்கிழமையன்று கிராபிக்குப் புறப்பட்டார்.
"அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக்கழகத்தில் வேலைகள் அதிகரிப்பதால் இந்தச் சிறு விடுமுறை எங்களின் சோர்வை போக்க உதவுகிறது," என்றார் தரணி.
குடும்பத்துடன் ஓய்வு முக்கியம்
கடந்த ஈராண்டுகளாக வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியவில்லை என்பதால் வீட்டிலேயே குடும்பத்தோடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார் திருவாட்டி தேவி.
"தொற்றுநோய்க்குமுன் ஆண்டுதோறும் மலேசியாவுக்குச் செல்வேன். இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீங்கியும் பயணம் செல்லும் மனஉளைச்சல் வேண்டாம் என்பதற்காக வீட்டில் திரைப்படங்களை நண்பர்களுடனும் குடும்பத்தாருடனும் பார்த்து உணவு உண்ண ஏற்பாடு செய்துள்ளோம்," என்கிறார் 56 வயது தேவி.
ஆசிரியராகப் பணிபுரியும் தேவி, பள்ளியில் தமது மாணவர்கள் சீனப் புத்தாண்டு கலைநிகழ்ச்சியின்போது ஆடிப்பாடியதை நினைவுகூர்ந்தார்.

