இவ்வாண்டு பணவீக்கமும் பொருளியல் சரிவும் ஏற்படலாம் என்று உலக வங்கிகள் தெரிவித்துவரும் நிலையில் அனைவரும் வேலை பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
இதனால் விலைவாசி தற்போது இருப்பதைவிட மேலும் உயரும் சாத்தியம் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சொத்து சார்ந்த செலவுகளும் கூடும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார் 'ஆரஞ்சு டீ' சொத்து நிறுவனத்தின் இணைக் குழும இயக்குநர் திரு தசரதன் பெருமாள், 56 (படம்).
தற்போதைய நிலையில் வங்கி வட்டி விகிதம் 4.5 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் வீடு வாங்கும் குடும்பங்கள் தங்கள் சேமிப்புகளிலிருந்து பெரிய தொகையை எடுத்து செலுத்துகின்றனர். வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வட்டி விகிதம் 2.6 விழுக்காடாக இருந்தாலும் பலர் தங்களின் ஒட்டுமொத்த வீட்டு வருமானத்திலிருந்து 60% தொகையை வீட்டுக்கான கட்டணம் செலுத்த ஒதுக்குகின்றனர் என்றார் திரு தாஸ்.
இந்நிலையில், அரசாங்கம் வழங்கும் நிதி உதவித் திட்டங்களால் உதவி தேவைப்படும் பாதிப்பேருக்கு மட்டுமே பலன் என்றார்.
ஆகையால், இவ்வாண்டு இதுமாதிரியான விலை உயர்வைத் தொடர்ந்து சமாளிக்கவும் சிங்கப்பூரர்களின் சுமையைக் குறைக்கவும் அரசாங்கம் புதிய உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது இவரது எதிர்பார்ப்பாகும்.
வெவ்வேறு தரப்பினர் தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆதரவு தொடர வேண்டும் என்பதே பலர் பொதுவாகத் தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பலர் இன்றுவரை மீள முயற்சிக்கும் வேளையில் அரசாங்கத் தின் உதவியைப் பெரிதும் நம்புவதோடு எதிர்பார்த்தும் இருக்கின்றனர் சிங்கப்பூரர்கள் என்றார் இவர்.

