அண்மையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டில் கஞ்சா பயன்படுத்திய குற்றத்திற்காக முதன்முறை கைது செய்யப் பட்டவர்களில் 70 விழுக்காட்டி னர் இளையர்கள் எனக் காட்டுகிறது.
போதைப் புழங்கிகள் உடல்நலம், குடும்பம், கல்வி, வாழ்க்கை என அனைத்தையும் தொலைத்து விடுகின்றனர். சிலர் மீள முடியாத மாய வலைக்குள் மாட்டிக்கொள்கின்றனர். மீண்டு வந்து புதுவாழ்வைத் தொடங்குவோர் பலர்.
மன மாற்றமே பழக்கத்தை மாற்றும் என்பதை முன்னாள்
போதைப் பொருள் புழங்கிகள் உணர்ந்து கூறுகின்றனர்.
குடும்பம், சமூகத்தின் ஆதரவும் பிடிப்புமே மனமாற்றத்தை ஏற்படுத்துகின்றன என்பதை இவர்களது வாழ்க்கை எடுத்துக்காட்டுகிறது.
ஆ. விஷ்ணு வர்தினி, மோனலிசா
சிறையில் 12 ஆண்டுகளைக் கழித்து வந்த சாமுவேல் குமாருக்கு குடும்பத்தாரையும் உடன்படித்தவர்களையும் பார்த்து ஏக்கமாக இருந்தது. வாழ்க்கையில் இழந்தவைகளை நினைத்துக் கலங்கினார். தாழ்வுமனப்பான்மை குறுகச் செய்தது. குடும்பம், நண்பர்கள், சமூகம் என அனைவரிடமிருந்தும் தனிமைப்படுத்திக்கொண்டார். தொடக்கநிலை ஆறில் படிப்பை விட்டிருந்த அவருக்கு என்ன வேலை செய்வதென்று தெரியவில்லை.
"வேலை, வருமானம், வாழ்க்கைத்துணை, குழந்தைகள் என ஒத்த வயதினர் வாழ்வதைப் பார்த்த எனக்கு அவர்கள் மீது பொறாமையும் என்மீது வெறுப்பும் ஏற்பட்டது," என்று நினைவுகளில் மூழ்கினார் 58 வயது திரு சாமுவேல்.
மூன்று அண்ணன்கள் ஒரு அக்கா உள்ள குடும்பத்தில் கடைசி மகனான சாமுவேல், பத்து வயதில் சிகரெட் பிடிக்கத் தொடங்கினார். பள்ளிக்கு மட்டம் போட்டு ஊர் சுற்றினார். 'நண்பர்கள் மத்தியில் தைரியமானவன் என்று காட்டிக் கொள்ள' பல தீய பழக்கங்களைக் கற்றுக்கொண்டார். 15 வயதில் போதைப்பொருள் பயன்பாட்டிற்காகக் காவல்துறையிடம் பிடிபட்டபோது வீட்டிற்கு உண்மை தெரியவந்தது.
அரசாங்க ஊழியராக இருந்த தந்தை, வழக்கறிஞரான மூத்த அண்ணன், தங்குவிடுதி துறையில் பணிபுரியும் இளைய அண்ணன்கள், ஆசிரியராக உள்ள அக்கா என எவர் அறிவுரையையும் கேட்காமல் தொடர்ந்து கூடா நட்புகளுடன் பழகினார். தேசிய சேவையின் போதும் போதைப்பொருள் பழக்கத்திற்காகப் பிடிபட்டு தடுப்புக்காவலில் ஓராண்டு இருந்த இவர், 28 வயதிற்குள் ஆறு முறை சிறை சென்றுவந்தார்.
கடைசியாக 36 வயதில் சிறையில் இருந்து வெளிவந்தபோது மறுவாழ்வு நிலையம் இவரது பாதையை மாற்றியது.
தன்னை நல்வழிப்படுத்திய சமூகத்திற்கு கைமாறாக, முழு நேரமாகத் தொண்டூழியத்தில் ஈடுபட்டு வரும் திரு சாமுவேல், சென்ற ஆண்டு தொண்டூழியத்தின்போது சந்தித்த ஒருவரை காதலித்து மணமுடித்தார்.
தற்போது 'எஸ்ஜி' விபத்து உதவி நிலையம் எனும் தொண்டு நிறுவனத்தில் தொண்டூழியம் செய்து வரும் திரு சாமுவேல், தடம்மாறும் பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதில் அக்கறை செலுத்துகிறார்.
"என்னைப்போல் எந்த இளையரும் தடம்மாறி வாழ்க்கையைத் தொலைக்கக் கூடாது," என்றார் திரு சாமுவேல்.
மறுவாழ்வு நிலையங்களின் பணி
சிறையிலிருந்து வெளியே வருவோர் பெரும்பாலும் கலக்கமான மனநிலையுடனே காணப்படுவர் என்றார் இந்து அறக்கட்டளை வாரிய 'ஆஷ்ரம்' அமைப்பின் சமூக சேவையாளர் திரு பி ரூவின்.
குற்றவுணர்ச்சி, தாழ்வுமனப்பான்மை, தன்னம்பிக்கையற்ற மனப்போக்கு என தவிக்கும் இவர்களை யோகா, தியானம், தன்னம்பிக்கை உரைகள், செறிவூட்டல் பயிற்சிகள் மூலம் மீட்டுக்கொண்டு வருவதே இவ்வமைப்பின் பணி.
இவர்களுக்கும் இவர்கள் குடும்பத்தினருக்கும் தேவையான மனநல ஆலோசனைகள், வேலை வாய்ப்புவழிகாட்டுதல்களை ஆஷ்ரம் வழங்குகிறது என்று கூறினார் திரு பி ரூவின்.

