சொ.சாந்தலிங்கம்
தொல்லியல் வல்லுநர்
கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் கீழடி அகழாய்வு மக்களிடையே பேரார்வத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்திருக்கிறது. ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட ஊர்களின் தொல்லியல் மேடுகளில் தமிழ்நாட்டு அரசின் தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டிருந்தாலும் கீழடி பெற்ற முக்கியத்துவத்தை வேறெந்த அகழாய்வு இடமும் பெற்றதில்லை. காரணம், இவ்வாய்வு அறிவியல்ரீதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு என்பதுடன், அது வெளிப்படுத்திய நம் நாகரிகத்தின் தொன்மை எச்சங்களே.
‘கீழடி’ என்னும் ஊர் இன்றைய சிவகங்கை மாவட்டத்தில், மதுரையிலிருந்து திருப்புவனம் செல்லும் சாலையில் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிற்றூர். மத்திய அரசின் தொல்லியல் பரப்பாய்வுத் துறை இவ்வூரில் முதன்முதலாக 2014-15ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொண்டது.
அகழாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் அந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதற்குமுன் 1981ல் சிலைமான் எனும் ஊரைச் சேர்ந்த தமிழாசிரியர் பாலசுப்பிரமணியம் கீழடியில் சில பழங்காலப் பானை ஓடுகளை யும் தொல்பொருள்களையும் மேற்பரப்பு ஆய்வில் சேகரித்து, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
அவற்றை ஆய்வுசெய்த அப்போதைய இயக்குநர் இரா.நாகசாமி, கீழடியில் களஆய்வு மேற்கொண்டு அவ்வூர் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொன்மை கொண்டது என்று அறிவித்தார். ஆனால், அத்துறையால் தொடர்ந்து இப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.
வைகைக் கரையில் முதல் ஆய்வு
மதுரையில் பிறந்த திரு அமர்நாத் இராமகிருஷ்ணன் மத்திய அரசு தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் அகழாய்வுப் பிரிவுத் தலைவராய்ப் பொறுப்பேற்றதும் வைகை நதியின் பிறப்பிடமான வெள்ளிமலை தொடங்கி, அது கடலில் கலக்கும் அழகன்குளம், ஆற்றங்கரைவரை ஒரு நெடிய மேற்பரப்பு ஆய்வை வைகையின் இரு கரைகளிலும் மேற்கொண்டார். அதன்மூலம் வைகைக்கரை களில் 293 தொல்லியல் மேடுகள் நிறைந்திருப்பதைக் கண்டார்.
அவற்றில் ‘கீழடி’ உடனடி அகழாய்விற்கு ஏற்ற இடமாகத் தேர்வு செய்யப்பட்டது. இவ்வூரில் பள்ளிச்சந்தைத் திடல் என்ற தொல்லியல் மேடு கிட்டத்தட்ட 110 ஏக்கர் பரப்பளவில் நீண்டு கிடந் தது. மணலூர், கொந்தகை என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர்களும் கீழடியைச் சுற்றி இருந்தன.
மண்சுடுதல், துணிநெய்து, சாயம் ஏற்றி செழித்திருந்த தொழில்கள்
தொன்மையான செங்கல் கட்டு மானம் வெளிப்பட்டிருந்த பள்ளிச்சந்தைத் திடலில் அகழாய்வுப் பணிகளைத் தொடங்கினர். 2014 இலிருந்து 16 வரை கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது.
பலவிதமான மணிக்கற்கள், சுடுமண் உருவங்கள், சதுரங்கக் காய்கள், தந்தத்தாலான பகடைக்காய்கள், மான் கொம்புகள், கீறல் குறிகளுடன் (graffiti marks) கூடிய பானை ஓடுகள், சுடுமண் காதணிகள், தக்கிளிகள், ஊசிகள், தங்க அணிகலன்கள் எனப் பல அரிய தொல்பொருள்களும் கட்டடப் பகுதிகளும் வெளிக்கொணரப்பட்டன.
அவற்றுள் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, நீண்ட நெடிய செங்கல் கட்டுமானங்கள் ஆகும்.
சுட்ட செங்கல்லால் ஆன நெடிய சுவர்கள், வாய்க்கால்கள், செங்கல்லால் ஆன வரிசையான தொட்டிகள், அவற்றில் நீர் உள்ளே வருவதற்கும் வெளியேறுவதற்குமான வழிகள், கட்டுமானங்களுக்குள் பல உறைகளைக் கொண்ட கிணறுகள் ஆகியவை மிக முக்கியமான கண்டுபிடிப்புகள்.
இந்த இடிபாட்டுக் கட்டுமானங் களுக்கிடையே ஊதுஉலைகள், சுடுமண் கிண்ணங்கள், முழுமையான பானைகள் எனப் பலவும் கிடைத்தன. அவை ஒரு தொழிற்கூடத்திற்கு உரியவை என்றும் குறிப்பாக தொட்டிகள் இடம்பெற்றிருப்பதன் மூலம் இவை ஒரு சாயப்பட்டறை செயல்பட்ட இடமாக இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்துரைத்தனர். நூற்புக்குரிய தக்கிளிகள் கிடைத் ததால் இங்கு நெசவு ஆலை செயல்பட்டிருக்கலாம் என்றும் அதற்கு உறுதுணையாகச் சாயப்பட்டறையும் இயங்கியிருக்கலாம் என்றும் ஊகித்தனர். இக்கண்டுபிடிப்புகள் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தின.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் இத்தகைய நெடிய கட்டுமானங்களோ தொழிற்கூடம் செயல்பட்டமைக்கான சான்றுகளோ இதற்குமுன் வெளிப்பட்டதில்லை. சங்க இலக்கியங்களில் பேசப்பட்ட மதுரையின் அமைப்புகள், தொழில், வணிகம் போன்ற செய்திகளுக்கு நேரடிச் சான்றுகளாக இந்த அகழாய்வுப் பொருள்கள் அமைந்தன.
வைகைக்கரையில் ஒரு நகர நாகரிகம் உருவாகிச் செழித்திருந்து, பின் எக்காரணத்தாலோ அழிந்துவிட்டது என்று அறிஞர்கள் கருதினர். இன்றைய நவீன அறிவியல் தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் உலகெங்கும் இவ்வாய்வு முடிவுகள் படங்கள் வாயிலாகவும் கட்டுரைகள், உரைகள் வாயிலாகவும் சென்றடைந்தன. மக்களின் பேராதரவும் ஆர்வமும் ஆய்வாளர்களைத் திக்குமுக்காடச் செய்தன.
மக்கள் எழுச்சியின் பயன்
இதனால், மத்திய அரசு இந்த அகழாய்வை ஈராண்டுகளோடு முடித்துக்கொள்ள நினைத்தது. ஆனால், மக்களின் தொடர் முன்னெடுப்பு, வற்புறுத்தல்களால் தொல்லியலாளர் திரு இராமன் தலைமையில் 2016-17ல் அகழாய்வு தொடரப்பட்டது. அதோடு மத்திய தொல்லியல் துறை இவ்வாய்வை முடித்துக்கொண்டது.
எனினும், மக்களின் தொடர் கோரிக்கைகள் மூலம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இந்த அகழாய்வைத் தொடர்ந்து 2018 முதல் 2022 வரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு மேற்கொண்டது.
இவ்வாய்வுகள் மூலம் கிடைத்த தொல்பொருள்களை எல்லாம் இதே இடத்தில் காட்சிப்படுத்தும் நோக்கில் தற்போது இவ்வூரில் கிட்டத்தட்ட ரூ.19 கோடி செலவில் ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.
எழுத்தறிவு பெற்றிருந்த சமூகம்
இங்கு கிடைத்த தொல்பொருள்களில் தமிழி (Tamil Brahmi) எழுத்துகளைக் கொண்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பானை ஓடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. அனைத்தும் ஆட்பெயர்களைக் குறிப்பவையாகும். ஆதன், திசன், குவிரன் என்பன போன்ற பெயர்கள் பலமுறை இடம்பெற்றுள்ளன.
இவற்றின் காலத்தை அறிவியல் முறையில் கண்டறிய சில தொல்பொருள் மாதிரிகள் அமெரிக்காவின் மயாமி நகரிலுள்ள பீட்டா பகுப்பாய்வகத்தில் ஆராயப் பட்டது. அதில் ஒரு குறிப்பிட்ட எழுத்துப் பொறித்த பானை ஓடு கி.மு. 580ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது.
இதன்மூலம் கி.மு.580லேயே தமிழ் நிலத்தில் மண்பானைகளை வனைந்த அல்லது அவற்றைப் பயன்படுத்திய எளிய மக்கள்கூட எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட பொருந்தல், கொடுமணல் அகழாய்வுகளில் முறையே கி.மு.490, கி.மு.530 காலத்தைச் சேர்ந்த எழுத்துப் பொறித்த பானை ஓடுகள் கண்ட றியப்பட்டு, அதே அமெரிக்க ஆய்வு நிறுவனத்தால் காலக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு அதைக்காட்டிலும் காலத்தால் முற்பட்ட எழுத்துகளைக் கொண்டுள்ளது.
கீழடி அகழாய்வுகளில் தங்க அணிகலன் பகுதிகள், செப்புப் பொருள்கள், இரும்புக் கருவிகளின் பாகங்கள், சுடுமண் சொக்கட்டான் காய்கள், வட்டச் சில்லுகள், சுடுமண் காதணிகள், கண்ணாடி, விலையுயர்ந்த மணிக்கற்கள், மட்பாண்ட ஓடுகள், ரௌலட்டடு, அரிட்டைன் ஓடுகள் எனப் பலவும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
பெரும்பாலான மட்பாண்டங்களில் பானைகளைச் சுடுவதற்கு முன்பும் பின்பும் இடப்பட்ட கீறல்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன.
இப்பொருள்கள் வாயிலாக, கீழடிப் பகுதியில் பண்டைக் காலத்தில் தமிழர் நாகரிகம் வளர்ச்சியடைந்திருந்தது என்பதும் இப்பகுதி மதுரையின் கிழக்குத் திசை நீட்சியாக விளங்கியிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. மேலும், கி.மு. 6ம் நூற்றாண்டுக் காலத்திலேயே வைகைக் கரையில் நகர நாகரிகம் நிலைபெற்றிருந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில்தான் வடஇந்தியாவில் கங்கைச் சமவெளி யும் நகரமயமாகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விலங்குகள் சொல்லும் கதைகள்
கீழடி அகழாய்வில் கிடைத்த விலங்குகளின் 70 எலும்புத் துண்டுகளின் மாதிரிகள், அறிவியல் அடிப்படையில் பகுப்பாய்வு செய்வதற்கு புனேயிலுள்ள முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான டெக்கான் கல்லூரிக்கு அனுப்பப்பட்டன. அவை திமில் உள்ள காளை, எருமை, வெள்ளாடு, கலைமான், காட்டுப்பன்றி, மயில் ஆகிய விலங்கினங்களுக்கு உரியன என்று அடையாளம் காணப்பட்டன. அவற்றுள் காளை, எருமை, வெள்ளாடு ஆகியவை 53%. அவை வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் இப்பகுதியின் முதன்மைத் தொழில்களாக இருந்திருக்கலாம் என இதன்மூலம் அறியப்படுகிறது.
தமிழர் கட்டுமானத் திறன்
இங்கு கிடைத்த செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடுமண்ணா லான உறைகிணற்றின் பூச்சு ஆகியவற்றின் மாதிரிகள் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் சிலிக்கா மண், சுண்ணாம்பு, இரும்பு, அலுமினியம். மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இருந்தமை கண்டறியப்பட்டது.
செங்கல், கூரை ஓடுகளில் 80 விழுக்காட்டிற்கும் மேலாக சிலிக்காவும், பிணைப்புக் காரணியாக அதிக அளவாக ஏழு விழுக்காடு சுண்ணாம்பு கலந்துள்ளதையும், சுண்ணாம்புச்சாந்து 97% சுண்ணாம்பு கொண்டிருந்ததையும் கொண்டு அக்காலத்தில் தரமிக்க கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறியலாம்.
இங்கு கண்டறியப்பட்ட கட்டு மானங்களில் கிடைத்த செங்கற்கள் தமிழகத்தின் பிற இடங்களில் சங்ககாலக் கட்டுமானங்களில் கிடைத்த செங்கற்களைப் பெரிதும் ஒத்துள்ளன.
கிடைத்துள்ள பானையோட்டுக் கீறல் குறிகள் பல, சிந்துச் சமவெளியில் கிடைத்த குறிகளோடு தொடர்புடையனவாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கறுப்பு-சிவப்புப் பானையோடுகள் நிறமாலையியல் பகுப்பாய்விற்கு (Spectroscopic analysis) உட்படுத்தப்பட்டதன் மூலம் சிவப்பு நிறத்திற்கு ‘ஹேமடைட்’ எனும் இரும்புத் தாதுப்பொருளையும் கறுப்பு நிறத்திற்குக் கரியையும் பயன்படுத்தியுள்ளது தெரியவருகிறது. இந்தப் பானைகளை 1,100 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுட்டு உருவாக்கும் தனித்தன்மை வாய்ந்த தொழில்நுட்பத்தை கி.மு. 6ஆம் நூற்றாண்டிலேயே தமிழர் அறிந்துள்ளனர் என்பது தெரிகிறது. இத்தாலியில் செயல்படும் பைசா பல்கலைக்கழக ஆய்வு முடிவின்படி இவ்வுண்மை பெறப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வணிகம் செய்து செழிப்போடு வாழ்ந்த தமிழர்
பெண்கள் அணியும் தங்க அணிகலன் துண்டுகள், செப்பு அணிகலன்கள், மதிப்புமிக்க மணிகள், 4,000க்கும் மேற்பட்ட கல்மணிகள், கண்ணாடி மணிகள், சங்கு வளையல்கள், தந்த வளையல்கள், பளிங்குக் கற்க ளாலான மணிகள் ஆகியவை யும் கிடைத்துள்ளன. இவை தமிழரின் செல்வச்செழிப்பான வாழ்க்கையைக் காட்டுகிறது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் பரவலாகக் காணப்படும் அகேட், சூதுபவளம் (Cornelian) போன்ற மணிக்கற்கள் கீழடியில் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் வடமாநிலங்களுடன் கொண்டிருந்த வணிக உறவு உறுதிப்படுத்தப்படுகிறது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம் பெற்ற சான்றுகளைக் கொண்டு இப்பகுதி மக்கள் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவுத்தொழில், வணிகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் வடஇந்திய மாநிலங்களுடனும் ரோம் நகரத்துடனும் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதும் அறியப்படுகிறது. மக்கள் ஒரு வளமான வாழ்வைப் பெற்று, நகர நாகரிகத்தைப் பேணிக்காத்தனர் என்பது திண்ணம்.