மகப்பேற்றைச் சுற்றி பெரும் பாரம்பரியமும் தகவல் களஞ்சியமும் தமிழர் மரபில் உள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அந்தப் பாரம்பரியச் சங்கிலி பல நேரங்களில் விடுபட்டுப் போகிறது.
மகப்பேற்றின்போது தாய்மார் எந்தெந்த உணவுவகைகள் உண்ண வேண்டும், உடலை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தவும் குழந்தையின் உடலைப் பிடித்துவிட்டு சிசுக்களைப் பராமரிக்கவும் எல்லாருக்கும் எப்போதும் உற்றார் உறவினர் அருகில் இருப்பதில்லை. அப்பணியைச் செய்து மகப்பேறு அனுபவத்தை சுகமாக்கி தோழிகளாகத் துணைநிற்கும் நான்கு பெண்களைக் கண்டு வந்தது தமிழ் முரசு.
'டூலா'க்கள் (Doula) என்போர் கருவுறும் காலத்திலும் மகப்பேற்றின்போதும் தாய்மாருக்கு மனதளவிலும் பல்வேறு சேவைகளின் வழியும் உதவுவர். குமாரி ஜெனட் பிரான்சிஸ், 18 வயதிலேயே 'டூலா' பணிக்காகப் பயின்று வருகிறார்.
டூலாவாக பணியாற்றும் தாயார் ஜெம்மா பிரான்சிஸுடன் அவர் சேவை புரியும் வீடுகளுக்குச் செல்வார் ஜெனட். அங்கு தமது தாயார் சிசுக்களைக் குளிப்பாட்டுவதையும் உடற்பிடிப்பு செய்துவிடுவதையும் பார்த்துக் கற்றுக்கொண்ட ஜெனட்டுக்கு தமது மூன்று தம்பிகளையும் கையாண்ட அனுபவம் மனதில் நின்றது. குழந்தைப் பராமரிப்பின் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.
திருமதி ஜெம்மா பிரான்சிஸ், 41, நண்பர்களின் கோரிக்கை களுக்கு இணங்க தமது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் ஓர் உதவியாக முதலில் அத்தகைய சேவைகளைச் செய்துவந்தார். அந்நேரத்தில்தான் 'டூலா' பணி பற்றியும் சிசுக்களைக் கையாள்வதில் தமக்குள்ள திறனையும் ஜெம்மா அறிந்துகொண்டார். கணவரின் ஊக்கத்துடன், ஐந்து ஆண்டுகளாக சான்றிதழ் பெற்ற முழுநேர டூலாவாக பணியாற்றி, கிட்டத்தட்ட 250 தாய்மாருக்கு உதவியுள்ளார் ஜெம்மா. 2020ல் 'சேயோள்' என்ற தொழிற்பெயரின்கீழ் அவர் இயங்கத் தொடங்கினார்.
"என் நான்கு பிள்ளைகளுமே அறுவை சிகிச்சைமூலம் பிறந்தனர். சுகப்பிரசவம் இல்லை என்ற கவலை என்னைப் பாதித்தது. அப்போது எனக்கு தக்க அறிவுரை கூற யாரும் இல்லை என்ற குறையை, டூலாவாக மற்ற தாய்மாருக்குத் தீர்த்துவைப்பதில் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தருகிறது," என்றார் ஜெம்மா.
தொழில்நுட்பமும் அறிவியலும் தாய்மாருக்குப் பலவற்றை எளி தாக்கிவிட்டன. ஆனால், இணையத்தில் உலவும் தகவல்களால் இளம்பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதும் அதிகமாகிவிட்டதை திருமதி ஜெம்மா சுட்டினார்.
"என் பாட்டிகளும் மூத்த உறவினரும் கருவுற்றிருக்கும் காலத்துக்கான இயற்கைமுறை சார்ந்த வழக்கங்களையும் தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். அவற்றைக் காரணங்களுடன் புரிந்துகொள்ள ஆராய்ச்சி செய்தேன். இதனால், பிற இனத் தம்பதிகள்கூட தமிழர் முறையில், குறிப்பாக உடற்பிடிப்பையும் மூலிகை மருத்துவத்தையும் நாடி என்னிடம் வருகின்றனர். தமிழர் மரபைவிட இப்பணியில் வேறு ஆழமான அடித்தளம் இருக்க முடியாது," என்றார் இவர்.
'டூலா' பணியின் சிறப்பம்சம் குழந்தைகளுடனும் குடும்பத்தினருடனும் ஏற்படும் நெருக்கமான உறவே என்றார் அவர். அதை ஆமோதித்தார் ஜெனட்.
"டூலாக்களைப் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. அலுவலகங்களில் பணியாற்றுவதைவிட, மனதார வேலை செய்ய இப்பணி வாய்ப்பளிக்கிறது. பெற்றோரின் ஊக்கத்தோடு, இதைத் தொழிலாய் அமைத்துக்கொள்ளும் எண்ணம் கொண்டுள்ளேன்," என்றார் ஜெனட்.

