மகப்பேறு காலத்தில் முக்கியமான அம்சம் பத்திய உணவாகும். எல்லாவகை காய்கறிகளையும் பிள்ளை பெற்ற தாய்மார் உண்ணமுடியாது. நீர்ச்சத்துள்ள காய்கறி களையும் வாய்வு உண்டாக்கும் பருப்பு வகைகளையும் அவர்கள் தவிர்க்கவேண்டும். உணவில் உப்பும் காரமும் மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். இத்தகைய தமிழர் பத்திய உணவுமுறையை சிங்கப்பூரில் ஏழாண்டு காலமாகத் தொழிலாகச் செய்து வருகிறார் செல்வி முருகய்யன்.
இரு மகன்களைப் பெற்று எடுத்தபோது தமது தாயார் சமைத்துத் தந்த உணவை திருமதி செல்வி நினைத்துக்கொள்வதுண்டு. பூண்டும் இஞ்சியும் முழுதாகவே இட்டு, உப்பும் காரமும் இன்றி இவர் சமைத்த உணவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் அதன் சுவை செல்விக்குப் பிடிக்கவில்லை.
தமிழர் பத்திய உணவை ருசியுள்ளதாக மாற்ற எண்ணிப் பல வகைகளில் ஆராய்ந்த அவர், சுயதொழில் ஆரம்பித்த நேரத்தில் சீனர் பத்திய உணவு வகைகளையும் சாப்பிட்டுப் பார்த்தார்.
சீனர்களின் பத்திய உணவில் மிக முக்கியமாக இருப்பது சூப் வகைகள். அவர்கள் பயன்படுத்தும் மூலிகைகள், மருந்துப்பொடி ஆகியவற்றை அறிந்துகொண்டு, அவ்வகை சூப்புகளையும் புதிய தாய்மார்களுக்கு அவர் தருவதுண்டு.
இக்கால பெற்றோர்களின் நம்பிக்கை மாறியுள்ளது என்கிறார் 57 வயது திருவாட்டி செல்வி.
"முன்னர் குழந்தைகளுக்கும் வயிறு கட்டுதல் செய்வதுண்டு. தொப்புள் விழுந்தவுடன், வயிற்றுக்குள் காற்று புகாமல் இருக்க, எனது தாயார் 'பரோட்' துணியில் சுருட்டு சாம்பலைக் கொண்டு வயிறு கட்டுவதுண்டு.
தற்போது அதற்குப் பதிலாக பயன்படுத்தப்படும் 'டயப்பர்', காற்று புகுவதை தடுப்பதில்லை. இதனால், செரிமானப் பிரச்சினைகள், வலி முதலியவை குழந்தை களுக்கு ஏற்படுகின்றன," என்றார் அவர்.
உடல்சூட்டைத் தணிக்க, குழந்தைகளின் கண்களில் நல்லெண்ணெய் ஊற்றும் வழக்கத்தைத் தமது அக்காவிடமிருந்து கற்றுக்கொண்டார் திருமதி செல்வி. அச்செய்முறையையும் தற்போது சிலர் விரும்புவதில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
பத்தாண்டுப் பணியில் ஏறத்தாழ 150 சிசுக்களை கையாண்டதாகக் கூறும் செல்வி, 2012இல் தமது பேத்தியைக் குளிப்பாட்டியதிலிருந்து தமது அம்மாவும் மூத்த அக்காளும் உற்றாருக்காகச் செய்துவந்ததைப் பிறருக்காக செய்யத் தொடங்கினார்.
சில ஆண்டுகளில் ஓய்வு பெறத் திட்டமிடும் இவர், அனுதினமும் குழந்தைகளின் முகத்தைக் காண இயலாத வருத்தம் ஒன்றுதான் இருக்கும் என்றார்.
எட்டாண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த திருவாட்டி செல்வி, உறவினர்களை இழந்த அல்லது பிள்ளையை இழந்த புதிய தாய்மாருக்குத் துணையாக இருந்தது எப்போதும் தமது நினைவிலிருந்து அகலாது என்றார்.

