சுபத்திரா லெட்சுமணனின் இரு பிள்ளைகளையும் பராமரிக்க அவரது அம்மா, பெரியம்மா, பாட்டி எனப் பலரும் இருந்தனர். அதனால், குழந்தைப் பராமரிப்பை முழுதாகக் கற்றுக்கொள்ள அவருக்கு வாய்ப்பில்லை. உறவினரான திருவாட்டி செல்வியுடன் வீடுகளுக்குச் சென்று மகப்பேறு காலச் சேவைகளை வழங்கத் தொடங்கிய அவர், அதில் நிறைவைக் கண்டார்.
இல்லத்தரசியாக இருந்த சுபத்திரா முதலில் பயப்பட்டாலும் திருமதி செல்வி கைகொடுத்ததால் முழுநேரமாக அதில் இறங்கினார். தற்போது மாதத்திற்கு ஆறு குழந்தைகள் வரை கவனிக்கிறார்.
"குழந்தைகளை எப்படி குளிப்பாட்டுவது, எப்படிக் கையாள்வது, குறைமாதக் குழந்தைகளுக்கு தேவைப்படுவது என்ன, எதில் கவனம் செலுத்தவேண்டும் என்பதையெல்லாம் செல்விதான் எனக்குக் கற்றுக்கொடுத்தார்.
"மும்முரமாக செயலாற்றத் தொடங்கிய என்னிடம், குழந்தைகளுடன் பேசி விளையாடவேண்டும் என்று அவர் கூறியது இன்றும் மனதில் நிற்கிறது. குழந்தைகளுடன் நல்ல பிணைப்பை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம் என்பதை உணர்ந்தேன்," என்றார் சுபத்திரா.
இணைந்து செயல்பட்டுவந்த திருமதி செல்விக்கும் திருமதி சுபத்திராவுக்கும் கொவிட்-19 நோய்ப்பரவலின்போது முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அழைப்புகள் வந்தன. பெற்றோரும் உறவினரும் சிங்கப்பூருக்கு வர இயலாத நேரம் அது. இந்தியாவிலிருந்து வந்திருந்த தமிழர்கள் தனித்துவிடப்பட்டனர்.
அச்சூழலில் மாதத்துக்கு எட்டு குழந்தைகள் வரை பராமரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறிய திருமதி சுபத்திரா, அதைச் சமாளிக்க தனியாக மகப்பேறுச் சேவைகளை வழங்கத் தொடங்கினார்.
குறைமாதக் குழந்தைகளைக் கவனிப்பதே சுபத்திராவுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது.
"குறைமாதக் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட தேவைகள் இருப்பதுபோல ஒவ்வொரு குழந்தைக்கும் வெவ்வேறு தேவை களுண்டு. அவற்றைப் புரிந்துகொள்வதற்கு குழந்தையுடன் நல்ல உறவை உருவாக்கவேண்டும்," என்றார் திருமதி சுபத்திரா.

