கிஷன் சிங் ஏழு வயதில் தாயாருடன் கிளார்க் கீ வட்டாரத்தில் வியாபாரச் சந்தை ஒன்றுக்குச் சென்றபோது அங்கு விற்கப்பட்ட ஆர்க்கிட் சித்திரம் பொறிக்கப்பட்ட பழைய $1 பணத்தாளைக் கண்டு வியந்தார். இதைக் கவனித்த அவரது தாயார் அந்த நாணயத் தாளை $5 கொடுத்து கிஷனுக்காக வாங்கினார். இன்றுவரை அதைப் பத்திரமாக வைத்துள்ள கிஷன், பழம்பொருள்கள் மீதான நாட்டம் அன்று தொடங்கியதாகக் குறிப்பிட்டார்.
எட்டாவது வயதில் தம் தாத்தா வைத்திருந்த 1983ஆம் ஆண்டு கடல்நாக நாணயத்தைப் பெற்றுக்கொண்டதை அடுத்து பழம் பொருள்களைச் சேகரிப்பதில் கிஷனுக்கு ஆர்வம் பெருகியது.
தமது தொடக்கப்பள்ளியில் சிற்றுண்டிக் கடைக்காரரிடம் கேட்டுப் பழைய பணத்தாள்களை மாற்றும் பழக்கமும் இவருக்கு இருந்தது. செல்லும் இடமெல்லாம் பழம்பொருள்களே தம் கவனத்தை ஈர்த்ததாக, மனிதவளத் துறையில் பணிபுரியும் கிஷன் சிங், 26, நினைவுகூர்ந்தார்.
தபால் முத்திரைகள், பழைய சிகரெட் தகரப் பெட்டிகள், புகைப்படக் கருவிகள், இசைத்தட்டுகள், நாணயங்கள், பூட்டுகள், கடிகாரங்கள், சீனப் புத்தாண்டிற்கென வெளியிடப்படும் சிறப்பு நாணயங்கள் என இவர் பலவற்றைச் சேகரித்துள்ளார்.
சிங்கப்பூர் 1965ல் மலேசியாவை விட்டுப் பிரிந்தபோது வெளியான 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாள், பழைய சிங்கப்பூர் குடியுரிமைச் சான்றிதழ்கள், 1965ஆம் ஆண்டில் அரசியல் கட்சிகள் வெளியிட்ட அறிக்கைகள் போன்றவற்றின் பிரதிகளையும் இவர் சேகரித்துள்ளார்.
பழைய பொருள்களைச் சேகரிப்பதுடன் அவை காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு ரசிக்கவும் தமக்குப் பிடிக்கும் என்றார் கிஷன். உதாரணத்திற்கு பழைய புகைப்படக் கருவிகளைக் காட்சிக்கு வைத்திருக்கும் 'தி கேத்தே கேலரி' இவருக்குப் பிடித்தமான இடங்களில் ஒன்றாகும். கிஷனின் ஆர்வம் அறிந்து அவரின் தாயார் அவரது 16வது பிறந்தநாளில் 100 ஆண்டு பழமை வாய்ந்த புகைப்படக் கருவியைப் பரிசாக வழங்கினார்.
பழம்பொருள்களைச் சேகரிப்பது செலவு அதிகம். அத்துடன் பள்ளி, தேசிய சேவை, கல்லூரி என்று அடுத்தடுத்து வந்த கடமைகளால் நேரமில்லாததாலும் தமது பொழுதுபோக்கில் ஈடுபட இவருக்கு வாய்ப்பு கிட்டவில்லை.
ஆனால் வேலைக்குச் சென்று ஓர் ஆண்டுக்கு மேல் ஆவதால், பழம்பொருள்களைச் சேகரிப்பதில் மீண்டும் மும்முரமாக ஈடுபடப் போவதாக கிஷன் கூறினார்.
"இன்றும் நான் வெளியே செல்லும்போது பழம்பொருள்கள் கண்ணில் பட்டால் அதை ஆராய்ந்து பார்ப்பேன். என்னால் அதை வாங்க இயலுமா என்று சிந்திப்பேன்," என்றார் கிஷன்.
தற்போது குடும்பத்துடன் வசித்துவரும் இவர், தமது வருங்கால வீட்டில் சிறிய அருங்காட்சியகத்தை உருவாக்கப் போவதாகவும் பூரிப்புடன் சொன்னார்.
சுவரில் பதிக்கப்படும் பழைய 'பெரனாக்கான்' கற்கள் இவருக்கு மிகவும் பிடித்தவை. பழைய கடைவீடுகளில் இவற்றைப் பார்த்தால் நின்று ரசிப்பது இவர் வழக்கம். இச்சுவர்க்கற் களின் உற்பத்தி நின்றுவிட்டது.
இன்று ஒரு கல்லின் மதிப்பு $400 வெள்ளி வரை இருக்கக்கூடும் என்ற கிஷன், வருங்காலத் தில் தமது அறையை இவற்றைக் கொண்டு அலங்கரிக்க விரும்புகிறார்.
செய்தி: பொன்மணி உதயகுமார்

