சபிதா ஜெயகுமார்
சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம் நடத்திய தமிழவேள் நினைவுக் கருத்தரங்கின் தொடர்ச்சியாக 'அழகோடு பாமாலை' பயிலரங்கு இம்மாதம் 4ஆம் தேதி உமறுப்புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடைபெற்றது. பாலர் பள்ளி, தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான இப்பயிலரங்கை வழிநடத்தினார் நாட்டுப்புறப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற பேராசிரியர் மதுரை சந்திரன்.
பாடல்கள் மூலம் மாணவர்களைக் கவரும் வழிகளை அவர் ஆசிரியர்களுக்குக் கற்றுக்கொடுத்தார். பாடல்களின்வழி எளிய முறையில் மாணவர்களுக்கு வாழ்க்கைப் பாடங்களைப் புகட்டு வதுடன் தமிழில் ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும் என்று முனைவர் சந்திரன் வலியுறுத்தினார்.
"வகுப்பில் பாடங்களில் மட்டும் அதிக கவனம் செலுத்தினால் மாணவர்கள் ஆர்வம் இழந்துவிடுவர். குறிப்பாக, பள்ளியில் ஆரம்ப நிலையில் இருக்கும் மாணவர்களை ஈர்ப்பதற்கு, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பாடல்கள், இசை, நாடகம் ஆகியவை சேர்ந்த பாடத்திட்டத்தை வடிவமைக்க வேண்டும். தமிழில் அதிகம் புழங்காத பிள்ளைகளை இவ்வாறுதான் ஈர்த்தாக வேண்டும்," என்று அவர் கூறினார்.
பல நாட்டுப்புறப் பாடல்கள் பாடி, அவை பிள்ளைகளுக்குச் சொல்லும் விழுமியங்களைச் சுட்டிக்காட்டிய அவர், நாட்டுப்புறப் பாடல் வகைகளையும் ஆசிரியர்களுக்கு விளக்கினார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கான செய்முறை பயிற்சி இடம்பெற்றது. ஆசிரியர்கள் எழுதிய பாடல்களை மெருகேற்றிப் பாடிக் காட்டிய முனைவர் சந்திரன், சிறுவர்களுக்கு ஏற்றவாறு அவற்றை எவ்வாறு பாடுவது என்றும் விவரித்தார்.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார், "மாணவர்களின் இளம் பருவத்திலிருந்து ஆழ்ந்த தாக்கத்தை முதலில் ஏற்படுத்தும் பாலர் பள்ளி, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தமிழ் மொழியைப் போற்றி வளர்க்கும் அடுத்த தலைமுறையினரை உருவாக்குகின்றனர். அவர்களுக்கு உதவக்கூடிய உத்திகளை இப்பயிலரங்கு வழங்கியுள்ளது," என்று குறிப்பிட்டார்.
பிசி்எஃப் பாலர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியும் திருமதி கோப்பெருந்தேவி, 34, பயிலரங்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்தார்.
"தாளத்துடனும் கவிதை நயத்துடனும் பிள்ளைகளுக்கு பாடம் கற்பித்தால் அவர்கள் விரைவில் புரிந்துகொள்வர் என்று உணர்ந்து கொண்டேன்," என்றார் அவர்.
"நான் முன்பு கலந்துகொண்ட பயிலரங்குகள் போல இது அமையவில்லை. முனைவர் சந்திரன் பாடல்கள் பாடி பயிலரங்கைத் தொடங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பயிலரங்கு பல்வேறு கோணங்களில் தமிழ் கற்பித்தலைக் காண எங்களுக்கு உதவியது," என்று அதில் கலந்துகொண்ட பெயர் குறிப்பிடாத பாலர் பள்ளி ஆசிரியர் ஒருவர் கூறினார்.
"தமிழ்ப் பண்பாட்டை எளிய முறையில் மாணவர்களுக்குக் கற்றுத்தரும் உத்தியை முனைவர் சந்திரனிடமிருந்து கற்றுக்கொண்டேன். பாடநூல்களில் பாடல்கள் ஏற்கெனவே உள்ளன. ஆனால் அவற்றை வேறு வழிகளில் எவ்வாறு வகுப்பறையில் போதிக்கலாம் என்று யோசிக்க பயிலரங்கு என்னைத் தூண்டியது," என்று கிராஞ்சி தொடக்கப்பள்ளி ஆசிரியர் திருமதி சரஸ்வதி கூறினார்.
நாட்டுப்புறப் பாடல்களில் விழுமியங்கள் நிறைந்திருப்பதால் என் மாணவர்களுக்கு அவற்றை அறிமுகம் செய்ய ஆவலாய் உள்ளேன்," என்று திருமதி சரஸ்வதி உற்சாகத்துடன் சொன்னார்.

