தமிழார்வமே திரு வடிவழகன்-விக்னேஸ்வரி (படம்) தம்பதியினரைக் கலைஞர்களாக வளர்த்தெடுத்தது; கலைப்பாலம் அமைத்து இருமனத்தை திருமணமாக இணைத்துவிட்டது எனலாம். பதின்ம வயதிலிருந்தே தமிழையும் கலையையும் விடாப்பிடியாகக் கொண்டுள்ள இந்தத் தம்பதியின் பயணம் நாடகம், நடனம், இசை என தொடருகிறது.
நாடக மேடைகளிலும் தொலைக்காட்சியிலும் தோன்றி மக்களை மகிழ்வித்த திரு வடிவழகன், தமது சட்டத்துறை பணிகள் கருதி 2012ல் கலைத்துறையிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். அவருள் தணியாதிருந்த கலையார்வமோ அவரை விட்டுவைக்கவில்லை. ரசிகர்களும் அவரை விட்டபாடில்லை.
"பொது இடங்களில் மூத்தோர் சிலர் என்னை அடையாளம் கண்டுகொள்வர். ஏன் நான் தொலைக்காட்சியில் தோன்றுவதில்லை என்று கேட்டு அவர்கள் வருத்தம் தெரிவித்தது என்னைப் பாதிக்கவே செய்தது," என்றார் திரு ச.வடிவழகன், 51.
கொவிட்-19 காலத்தின்போது திரு வடிவழகன் திரைக்குத் திரும்பினார். 'வடி, ரெடி, வெடி' எனும் புதுமையான நகைச்சுவை நிகழ்ச்சியை வழிநடத்தி பாராட்டுப் பெற்றார். தமிழ்மொழியின் அழகை ரசிக்கச் செய்ய நகைச்சுவையைவிட சிறந்ததொரு கருவி இல்லை என்பது இவரின் அனுபவம்.
மறுமுனையில், இடைவேளை இன்றி தமிழூட்டிய கலைத்துறையில் முழுநேரமாக இளமையிலிருந்தே பயணம் செய்து வருகிறார் இவரின் மனைவி திருமதி விக்னேஸ்வரி. இளம் வயதில் கலையார்வத்தை இவரிடம் அறிமுகப்படுத்தி இருந்தார் இவரின் தாயார் திருமதி மனுநீதிவதி. அவர் சிங்கப்பூரின் முதல் இந்திய பெண் தாளவாத்தியக் கலைஞர்.
இவரின் வழிகாட்டுதலில் தமிழ்ப் பாடல்களின் பொருளுணர்ந்து அதற்கேற்ப அபிநயம் பிடித்ததன்வழி தமிழார்வமும் திருமதி விக்னேஸ்வரிக்குத் தொற்றிக்கொண்டது.
"முன்பெல்லாம் கலைத்துறையை முழுநேர வாழ்க்கைத்தொழிலாகப் பலர் கருதவில்லை. ஓர் இந்தியப் பெண்மணியாக சாதிக்க முடியுமா, சம்பாதிக்க முடியுமா எனக் கேள்விகள் எழுந்தன. பத்தாண்டுகளில் இந்நிலை முற்றிலும் மாறி கலையும் மொழியும் கொண்டாடப்படும் என நான் அன்று அவர்களிடத்தில் கூறியது இன்று நனவாகி உள்ளது," என்றார் திருமதி விக்னேஸ்வரி.

