தமிழ்க் கலை வளர்க்கும் ஆனந்த கண்ணன் குடும்பம்

2 mins read
457e07be-5a59-4b0b-8127-315396ab4821
-

மறைந்­து­வந்த தமிழ்க் கலை­களுக்­கென சிங்­கப்­பூ­ரில் மேடை அமைத்­துக் கொடுத்­த­வர்­கள் காலஞ்­சென்ற திரு ஆனந்த கண்­ணன், அவ­ரின் மனைவி திரு­வாட்டி நாக­ராணி கண்ணா.

ஒயி­லாட்­டம், மயி­லாட்­டம், பறை­யிசை, கர­கம், தெருக்­கூத்து என மண்­ணி­சைக் கலை­கள் சிங்­கப்­பூ­ரில் தழைத்தோங்க உழைத்­தார் திரு ஆனந்த கண்­ணன். அவ­ரின் லட்­சி­யப் பய­ணத்தை திரு­வாட்டி ராணி­யும் மகள் அவா­வும் தொடர்­கின்­ற­னர். ஒவ்­வொரு சிங்­கப்­பூர்த் தமி­ழ­ரும் தமிழ்க் கலை­க­ளுக்கு உரிமை கொண்­டா­ட­வேண்­டும் என்­பது இவர்­க­ளின் விருப்பம்.

இந்­தி­யா­வில் தமிழ்ப் பட்­டப்­படிப்பு பயின்று ஒரு தமி­ழா­சி­ரி­ய­ராக திரு­வாட்டி ராணி­யின் தமிழ்த்­துறை பய­ணம் தொடங்­கி­யது. அச்­ச­ம­யத்­தில் சிங்­கப்­பூ­ரில் தமி­ழில் மேற்­ப­டிப்பு பயில வாய்ப்­பில்லை. திரு ஆனந்த கண்­ண­னுக்கோ நாட­க­மும் ஊட­க­மும் ஆரம்­பப்­புள்­ளி­யாக அமைந்­தன. 2000களில் உல­கத் தமிழ் மக்­கள் இடையே புகழ்­பெற்ற முக­மா­னார் அவர்.

"தமி­ழ­கத் தொலைக்­காட்­சி­யில் படைப்­பா­ள­ராக அவர் இருந்த சம­யத்­தில், அவ­ரின் தனித்­து­வ­மான தமிழ்ப் பாணிக்­கா­கவே அறி­யப்­பட்­டார். அது­வும் அவ­ருக்­குப் பெரிய உந்­து­த­லாக இருந்­தது," என்­றார் ராணி, 50.

கலை­யி­னால் இணைந்த இரு­வ­ரும் தமி­ழ­கத்­தில் வறு­மை­யில் உழ­லும் மண்­ணி­சைக் கலை­ஞர்­க­ளின் நிலையை நேரில் கண்­ட­வர்­கள்.

அங்கு தொடங்கி, மேன்­மேலும் சிங்­கப்­பூர்த் தமி­ழர்­களுக்கு மர­புக் கலை­க­ளின் சீரான அனு­ப­வத்தை வழங்­கும் முயற்­சி­யில் முனைப்புக் குறை­யாது செயல்­ப­டு­கின்­ற­னர் ராணி­யும் அவா­வும்.

இளை­யர்­கள், வெளி­நாட்டு ஊழி­யர்­கள், மூத்­தோர் என பல­ருக்­கும் மர­புக்கலை­யில் இணை­வ­தற்­கான பாதையை அமைத்­துக் கொடுக்­கும் 'ஏகே தியேட்­டர்' ராணி-கண்­ணன் இரு­வரால் 12 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் நிறு­வப்­பட்­டது.

மாண­வர்­க­ளுக்­குக் கதை சொல்­லி­யும் ஆடல், பாட­லைக் கற்­றுத் தந்­தும் மொழித்­தி­றனை ஊக்­கு­விக்­கிறது இக்­குழு.

மர­புக்­க­லை­க­ளுக்கு முறை­யான பயிற்­சி­யும் அங்­கீ­கா­ர­மும் கிட்­டும் நோக்­கில் 'ஆனந்த கல்வி' எனும் திட்­டம் 2019ல் இரு­வ­ரின் எண்­ணத்­தி­லும் உரு­வா­னது. அரும்பு, மொட்டு, நறு­முகை என வய­து­வா­ரி­யா­கப் பிரிக்­கப்­பட்ட வகுப்­பு­க­ளின்­மூலம் சிறார் முதல் பெரி­ய­வர் வரை பலதரப்­பி­ன­ரை­யும் மர­புக்­க­லை­கள் கற்­றுக்­கொள்ள இது வர­வேற்­கிறது.

"ஒரு குழந்­தையை வளர்க்க ஒரு கிரா­மமே தேவைப்­ப­டு­கிறது. பெற்­றோர் மட்­டு­மின்றி, தமிழ்­மொ­ழிப் புழக்­கத்­துக்­கான ஆத­ரவை நீட்­டும் ஒரு சமூ­கத்­தை­யும் உரு­வாக்­கு­வது அவ­சி­யம். அத்­த­கைய நட்பு வட்­டா­ர­மாக ஏகே தியேட்­டர் நிச்­ச­யம் நிலைத்­தி­ருக்­கும்," என்று கூறி­னார் திரு­வாட்டி ராணி.

கலை சூழ வளர்ந்த அவா கண்­ண­னுக்கு, அப்பா விட்­டுச்­சென்ற தீப்­பொறி தம்­மைப் போன்ற பிற இளை­யர்­க­ளுள் விதைக்­கப்­பட வேண்­டும் என்­பது முக்­கிய இலக்கு.

"ஒன்­று­கூடி ஆடிப்­பா­டும்­போது, நாட­கம் படைக்­கும்­போது, இயல்­பா­கவே தமி­ழில் பேசி மகிழ்­கி­றோம். அதை ரசிக்­க­வும் செய்­கி­றோம்," என்றார் அவா, 20. தற்­போது லசால் கலைக் கல்­லூ­ரி­யில் கலை நிர்­வா­கம் பயி­லும் அவா, கலைத்­து­றை­யில் நீடிக்க விருப்­பம் தெரி­வித்­தார்.