உயிர்அறிவியலாளர் திரு இளவழகன் முருகனுக்கு, நாடகக் கர்த்தாவாக மற்றொரு முக்கிய பரிமாணமும் உள்ளது. இதற்கு வித்திட்டது, அவர் தமது கூட்டுக்குடும்பத்தில் கேட்டு வளர்ந்த தமிழ்க் கதைகளே.
பிள்ளைகளுக்கும் இந்த அனுபவத்தை வழங்கும் ஆர்வத்தில் கதை சொல்லுதலை வலியுறுத்தி வருகிறார் திரு இளவழகன்.
திருக்குறளின் முதல் குறளை ஒட்டியே இரு மகன்களுக்கும் பெயர் சூட்டியுள்ளார் திரு இளவழகன். அகரன் இளங்கதிர், ஆதிரன் இனியன் என்ற அவரின் மகன்களிடத்தில் தமிழைப் புகட்டுவதை ஒரு முக்கியக் கடமையாக இவர் கருதுகிறார்.
"நமது பெயரே நமது வாழ்நாள் அடையாளம். பள்ளிப்பருவத்திலிருந்தே எனது பெயரைப் பலரும் ரசித்துப் பாராட்டுவது உண்டு.
"அவ்வாறே பொருள்நிறைந்த பெயரை என் மகன்களுக்குச் சூட்ட விரும்பினேன்," என்றார் திரு இளவழகன், 42 (படம்).

